Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
3. முத்துப்பட்டன் சிறந்தவனாகக் கருதப்படுவதற்குரிய காரணம் என்ன?
சமுதாயத்தை எதிர்த்த கதைத்தலைவர்களுள் முத்துப்பட்டன் சிறந்தவனாகக் கருதப்படுவதற்குப் பின்வரும் காரணங்களைக் கூறலாம். முத்துப்பட்டன் உயர் குலத்தினன்; மற்றவர்கள் தாழ்குலத்தினர். உயர்குலத்தில் பிறந்த முத்துப்பட்டன் உயர்ந்த பதவியில் பணியாற்றுகிறான். தாழ்குலத்தில் பிறந்த பிறர் தங்கள் வீரதீரச் செயலால் உயர்பதவியை அடைகின்றனர். உயர் குலத்தினனான முத்துப்பட்டன் தாழ்குலத்தைச் சேர்ந்த பெண்களை அவர்களது தந்தையின் அனுமதியோடு மணக்கிறான். பிற கதைத்தலைவர்கள் உயர்குலப் பெண்களை அவர்களது தந்தை அல்லது உறவினரின் அனுமதியின்றிக் கவர்ந்து அல்லது கடத்திச் சென்று மணக்கின்றனர். முத்துப்பட்டன் தான் விரும்பி மணந்து கொண்ட பெண்களின் சாதிக்காரனாகவே மாறி அவர்களுக்காகச் சண்டையிட்டு உயிர் துறக்கிறான். பிறர், அவர்கள் கடத்திச் சென்ற செயலுக்காக அல்லது தங்கள் உறவினரின் அனுமதியைப் பெறாமல் நடந்து கொண்ட செயலுக்காகக் கொல்லப்படுகின்றனர். இதன் காரணமாகவே முத்துப்பட்டன் சிறந்தவனாகக் கருதப்படுகின்றான்.