Primary tabs
-
5.0 பாட முன்னுரை
நாட்டுப்புறவியல் மரபுகள் என்னும் தொகுதியில் இடம் பெற்றுள்ள பாடங்களின் தொடர்நிலையாக நாட்டுப்புற மக்களின் புழக்கத்தில் இருந்துவரும் நாட்டுப்புற விளையாட்டுகள் இப்பாடத்தில் பட விளக்கங்களுடன் எடுத்துரைக்கப் படுகின்றன.
மனிதன் என்று தோன்றினானோ அன்றே விளையாட்டும் தொடங்கிவிட்டது என்று கூறலாம். வாழ்க்கையே ஒரு விளையாட்டுத்தான். வாழ்க்கைப் பயணத்தில் விளையாடாத மனிதர்களும் இல்லை; விளையாட்டுக் காட்டாத மனிதர்களும் இல்லை. அதனால்தான் மனிதன் பிறந்தது முதல் இறக்கும் நிலைவரை வயதிற்கு ஏற்றாற்போல் ஏதாவதொரு விளையாட்டை ஆடும் வகையில் விளையாட்டுகளை உருவாக்கி வைத்திருக்கின்றான்.
செல்வம் புலனே புணர்வு விளையாட்டென்று
அல்லல் நீத்த உவகை நான்கே(தொல்காப்பியம், நூற்பா, எண்.1205)
என்ற நூற்பாவின் வழி விளையாட்டு உவகை தரக்கூடியது என்கிறார் தொல்காப்பியர். விளையாட்டாவது விரும்பி ஆடும் ஆட்டம் என்கிறார் தேவநேயப் பாவாணர். பொழுது போக்கிற்குரிய மகிழ்ச்சியான செயல் என்று தமிழ்ப்பேரகராதி பொருள் தருகின்றது. விரும்புகின்ற ஆட்டம், இன்பம் விளைவிக்கும் ஆட்டம், விதிகளை வகுத்துக் கொண்டு ஆடும் ஆட்டம் என்றும் பல்வேறு விளக்கங்கள் எடுத்துரைக்கப் படுகின்றன. விளையாட்டு அனுபவித்து மகிழக் கூடியது. விளையாடுவோர் மட்டுமின்றிக் காண்போரையும் களிப்படையச் செய்து இன்பமூட்டுவது. இத்தகைய சிறப்பு வாய்ந்த விளையாட்டுகளை விளக்கமாகக் காண்போமா!