தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடுதலை இயக்கம்

  • 2.1 விடுதலை இயக்கம்
     

     

    இந்திய தேசிய காங்கிரஸ் இந்திய விடுதலை இயக்கத்தில் பெரும்பங்கு வகித்தது. இந்திய விடுதலைக்காக இடையறாது போராடியது. தென்னாப்பிரிக்காவில் அறப்போராட்டத்தை நடத்திய காந்தியடிகளின் இந்திய வருகையால் இந்திய விடுதலை இயக்கம் ஒருமுகப்பட்டது. மகாத்மாவின் போராட்ட முறை இந்திய விடுதலைக்கு வழி வகுக்கும் என்ற தொலை நோக்குப் பார்வை பாரதியாரை இந்திய விடுதலை இயக்கத்தில் இணையச் செய்தது.

    2.1.1 பாரதியாரின் அரசியல் நுழைவு

    ‘இந்திய தேசிய காங்கிரஸ்’ என்ற சபை இந்திய விடுதலைக்கான இயக்கத்திற்கு எழுச்சி ஊட்டிக் கொண்டிருந்த காலம் அது. 1898-ஆம்ஆண்டு இங்கிலாந்து நாட்டுஅரசின்அரசப்பிரதிநிதியாகக் கர்சன்பிரபு இந்தியாவில் பொறுப்பேற்றார். துவக்க முதலே இந்திய விரோதப் போக்கில் தீவிரமாக இருந்தார் கர்சன் பிரபு. அது இந்திய விடுதலை இயக்கத்திற்குப் புது வேகத்தை அளித்தது. ஜி. சுப்பிரமணிய அய்யர் சுதேசமித்திரன் பத்திரிகையின் உதவி ஆசிரியராக இருந்தவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இந்திய சுயாட்சியை ஆதரித்து இந்தியர்களுக்கு அதிகமான அரசுப்பணிகள் அளிக்க வேண்டும் என்று வீரமுழக்கமிட்டார். 1905-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ஆம் நாள் கர்சன் பிரபு வங்காளத்தை இரண்டாகப் பிரித்தார். இசுலாமியர் பெரும்பான்மையாக இருந்த பகுதி கிழக்கு வங்காளம் எனவும், இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த பகுதி மேற்கு வங்காளம் எனவும் வழங்கப்பட்டது. நிர்வாகத்தின் பொருட்டு வங்காளத்தைப் பிரிப்பதாகக் காரணம் சொன்னார் கர்சன் பிரபு. ஆனால், அது இந்து, இசுலாமியர் ஆகியோரின் ஒற்றுமையைக் குலைக்கும் நோக்கில் அமைந்த பிரிவினையாகும்.

    வங்காளப் பிரிவினையின் காரணமாக இந்தியா முழுவதும் புத்துணர்ச்சி பிறந்தது. இந்தப் புதிய உணர்ச்சியைக் கோபால கிருஷ்ண கோகலே ‘தேசிய உணர்ச்சி’ என்று குறிப்பிட்டார். வங்காளப் பிரிவினையால் அங்குள்ள இந்துக்களும், இசுலாமியர்களும் ஓரணியில் நின்று வெள்ளையரை எதிர்த்தனர். வங்காள மாணவர்களிடம் ‘சுதேச உணர்வு’ எழுந்தது. அதாவது இந்திய நாட்டில் விளைந்த - உற்பத்தியான பொருள்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் அரும்பியது. அவர்கள் ‘சுதேச விரதம்’ (ஆங்கில நாட்டுப் பொருட்களை நிராகரிப்பது) மேற்கொண்டனர். சென்னை நகர மாணவர்கள் வங்காள மாணவர்களை வாழ்த்த, சென்னைக் கடற்கரையில் கூட்டம் நடத்தினர். ஜி.சுப்பிரமணிய அய்யர் தலைமை தாங்கினார். ‘வங்கமே வாழ்க!’ என்று வங்காளத்தை வாழ்த்திப் பாடிய பாடலுடன் பாரதியாரின் அரசியல் நுழைவு தொடங்கியது.
     

    2.1.2 பாரதியும் சுதேச உணர்வும்

    வங்காளத்தில் எழுந்த சுதேச உணர்வு நாட்டின் எல்லாப் பாகங்களிலும் பரவ வேண்டும் என்று தேசபக்தத் தலைவர்கள் விரும்பினர். பாரதியார் தமிழ்நாட்டு மக்களிடையே சுதேச உணர்வு வளரப் பாடுபட்டார். ஆகவே ‘சுதேசமித்திரன்’, ‘சக்கரவர்த்தினி’ ஆகிய பத்திரிகைகளில் வங்காளத்தில் எழுந்த சுதேச இயக்கம் பற்றியும், சுதேச இயக்கத்தில் பங்கு கொண்ட வங்காளப் பெண்கள் குறித்தும் கட்டுரைகள் எழுதினார். பெண்களும் தாய்நாட்டிற்காகப் போராடும் தகுதியும், திறமையும், உரிமையும் உள்ளவர் என்று சுட்டிக்காட்டினார். விடுதலை இயக்கத்தில் பங்கு கொள்ளுமாறு அவர்களைத் தூண்டினார். சுதேச உணர்வில் தமிழ்நாடு முன்னணியில் இருக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். சுதேச உணர்வை எப்படி வெளிப்படுத்த வேண்டும்? சுதேச விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் வெளிப்படுத்த வேண்டும். தேசபக்தத் தலைவர்கள் சுதேசிய விரதத்தைக் கடைப்பிடிக்குமாறு மக்களிடம் கூறினர். சுரேந்திரநாத் பானர்ஜி சுதேசிய விஷயத்தில் காட்டிய ஊக்கத்தைப் பாரதி,
     

    நமது நாட்டில் சுதேசிய விதையிட்டு, அவ் வயலின்கண் குடிலிட்டுக் கொண்டு இடைவிடாது காப்பவர் இம்மகான் என்பதை யாரும் மறுக்கார்


    என்று தமிழ்நாட்டு மக்களுக்குப் புலப்படுத்தினார். (மகாகவி பாரதி வரலாறு, பக் : 150)

    சுதேசிய உணர்வு நாடு முழுவதும் பரவினால்தான் விடுதலை கிடைக்கும் என்று பாரதி நம்பினார். ஆங்கிலேயர், தம் நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களை விற்கும் சந்தையாக இந்தியாவை மாற்றினர். இந்தியாவிலுள்ள கைத்தொழில்கள் நலிந்தன. எனவே, இந்தியரும் ஆங்கிலேயரை விடச் சிறந்த பொருள்களை உற்பத்தி செய்யும் திறமை உடையவர் என்று காட்டும் வகையில் பெருமிதத்தோடு,
     

     

    பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
         பண்ணி மலைகளென வீதி குவிப்போம்

    ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம்
         உலகத் தொழிலனைத்தும் உவந்து செய்வோம்

    (பாரத தேசம், 8 & 12)

    (பண்ணி = செய்து, உவந்து = மகிழ்ந்து)

    என்று பாடினார். இந்திய மக்கள் சுதேச உணர்வுடன் செயல்பட்டால் ஆங்கிலப் பொருட்களை வாங்கத் தேவையில்லை என்றும் விளக்கினார்.
     

    2.1.3 பாரதியும் தீவிரவாதமும்

    நாட்டின் எல்லாத் திசைகளிலும் சுதேசிய உணர்வு மேலோங்கி, ‘வந்தே மாதரம்’ என்னும் மந்திரச் சொல்லே எங்கும் எதிரொலித்தது. (வந்தே மாதரம் என்றால் ‘தாயை வணங்குகிறோம்’ என்று பொருள்படும் - இந்திய நாடு தாயாக மதிக்கப்பட்டது)
     

    காசியில் காங்கிரஸ்

     

     

    அந்தச் சமயத்தில் காங்கிரசின் 21-வது சபை காசியில் கூடியது. காங்கிரஸ் சபைக்குக் கோபால கிருஷ்ண கோகலே தலைமை தாங்கினார். அவர் சுதேசியம், அந்நியப் பொருள்கள் விலக்கு என்கிற கொள்கைகளுக்கு ஆதரவாகப் பேசினார். ஆனால் ஆங்கில அரசுடன் ஒத்து இருந்து அரச நம்பிக்கையுடன் கூடிய சுய ஆட்சி பெறவேண்டும் என்று அவர் விரும்பியதை அவருடைய பேச்சு உணர்த்தியது. கோகலேயின் நிதானப்போக்கு, ஆங்கில அரசுடன் ஒத்துப்போகவேண்டும் என்ற கொள்கை முதலியவை பாலகங்காதர திலகருக்குப் பிடிக்கவில்லை. முதன் முதலாக அவர் சாத்வீக எதிர்ப்புக் கொள்கையை (தீவிரவாதக் கொள்கையை) இந்தக் காங்கிரஸ் சபையில் வெளியிட்டார். பாலகங்காதர திலகர் கருத்தைப் பலர் ஆதரித்தனர். அவர்கள் ‘நமக்கு நாமே துணை’ என்ற கொள்கையின் அடிப்படையில் நாட்டுப் பணிகளை ஆற்ற வேண்டும் என்று கருதினர். அதற்கு, அன்னியப் பொருள்களை நிராகரிப்பது ஒன்றே சிறந்த வழி என்று கண்டனர். பாரதி, லாலா லஜ்பதிராய், அரவிந்தர், விபின சந்திர பாலர் ஆகியோர் பாலகங்காதர திலகரின் கொள்கையை ஏற்றுக்கொண்டனர்.
     

    கல்கத்தாவில் காங்கிரஸ் கூட்டம்

    1906-இல் கல்கத்தாவில் காங்கிரஸ் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், மிதவாதிகள் அன்னிய நாட்டுப் பொருள்களை நிராகரிக்கக்கூடாது என்று கூறிப் பாலகங்காதர திலகரைப் பற்றி அவதூறாகப் பேசினர். பாரதி இப்போக்கைக் கண்டித்தார். இந்தக் கூட்டத்தின் போது காங்கிரஸில் தீவிரவாத மிதவாத எண்ணங்கள் கொண்ட இரு பிரிவுகள் இருந்தன என்பது வெளிப்பட்டது. கூட்டத்தில் ‘இந்தியாவுக்குச் சுய ராஜ்ஜியம் தேவை’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுய ராஜ்ஜியம் என்றால் என்ன? சுயராஜ்ஜியம் என்பதற்குப் பாரதி, "ஸ்வ என்றால் தனது என்று அர்த்தமாகிறது. யாருடையது? பாரத தேவியினுடையது. பாரத தேவி தன்னைத்தானே பரிபாலனம் செய்து கொள்வது ‘ஸ்வராஜ்யம்’ ஆகும்" என்று குறிப்பிட்டதாகச் சீனி.விசுவநாதன் தம் நூலில் குறிப்பிட்டிருக்கிறார். (மகாகவி பாரதி வரலாறு, பக்.252) மேலும் மதுவிலக்கு, பெண் கல்வி, சுதேசக் கல்வி ஆகியவற்றைச் செயல்படுத்த வேண்டும் என்பதும் தீவிரவாதிகளின் எண்ணங்களாகும்.

    பாரதி, சகோதரி நிவேதிதா என்பவரைக் கல்காத்தாவில் சந்தித்தார். பாரதியாரிடம் இருந்த விடுதலை இயக்க உணர்வுக்கு எழுச்சியும், வேகமும், முழுமையும் கொடுத்தவர் சகோதரி நிவேதிதா. அந்தச் சந்திப்பிற்குப் பின்னரே பாரதி விடுதலை இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.

     

     

    பாலகங்காதர திலகர், விபின் சந்திர பாலர், லாலா லஜபதிராய், அரவிந்தர் ஆகியோர் தீவிரவாதத்தைச் சேர்ந்தவர்கள். கோபால கிருஷ்ண கோகலே, மேத்தா போன்றோர் மிதவாதக் கட்சியைச் சேர்ந்தவர்கள். பாரதி பாலகங்காதர திலகர் வழியில் நின்றார். அதனால் தமிழ்நாட்டு மக்களுக்கு விடுதலை உணர்வை ஊட்ட விபின் சந்திர பாலரை அழைத்தார். பாலகங்காதர திலகரின் சொற்பொழிவைப் ‘புதிய கட்சியின் (தீவிரவாதம்) கொள்கை’ எனப் பாரதி அறிவித்துத் தம்மைப் புதிய கட்சியின் உறுப்பினராக வெளிப்படுத்தினார். பாரதி தீவிரவாதத்தில் ஈடுபாடு கொண்டதால் தான் இத்தாலி நாட்டு மாஜினியைப் பாடுகிறார். ஆயுதம் கொண்டு போர் செய்வதிலும் இரகசிய சங்கங்கள் வைத்துப் போரிடுவதிலும் நம்பிக்கை கொண்டார். அதற்கேற்ப அவருடைய நண்பர்கள் வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோரும் தீவிரவாதிகளாகவே விளங்கினர். அது போல் சுவாமி விவேகானந்தரின் தம்பி பூபேந்திரர் சிறந்த தேசபக்தரும் புரட்சிவாதியும் ஆவார். இவர்களின் செயல்பாடு ஆங்கில அரசை நிலை குலையச் செய்தது.
     

    2.1.4 பாரதியும் ஆங்கில அரசும்

    தீவிரவாதிகளின் போக்கால் அமைதி இழந்த ஆங்கில அரசு தீவிரவாதிகளைத் தண்டிக்க நினைத்தது. பாரதி மீதும் வழக்குத் தொடரும் நோக்கில் அவரைக் கண்காணித்தது. அரசாங்கத்திற்கு விரோதமாகச் சதி செய்பவர்களைத் தண்டிக்கச் சட்டம் இயற்றியது. பாலகங்காதர திலகர் அரச நிந்தனை செய்யும் விதத்தில் ‘கேசரி’ பத்திரிகையில் எழுதினார் என்று கைது செய்யப்பட்டார். பாரதி இதைக் கண்டித்தார். ஆங்கில அரசு ‘இந்தியப்’ பத்திரிகையின் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் கிருஷ்ணசாமி சர்மா, சுரேந்திரநாத் ஆரியா, ஜி.சுப்பிரமணிய அய்யர் ஆகியோரைக் கைது செய்தது. அதனால் இந்தியா பத்திரிகை தொடர்ந்து வெளிவர இயலவில்லை.

     

     

    பாண்டிச்சேரியில் பாரதி

    ஆங்கில அரசு பாரதியைக் கைது செய்யச் சமயம் பார்த்திருந்தது. அதனால் பாரதி தம் நண்பர்களின் அறிவுரைப்படி பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்த பாண்டிச்சேரிக்குச் சென்றார். அங்குச் சென்று இந்தியா பத்திரிகையை மீண்டும் தொடங்கினார். அமைதி, ஒழுங்கு, அபிவிருத்தி ஆகியவையே தங்கள் கொள்கையென விளக்கினார். 1911-ஆம் ஆண்டு நெல்லை மாவட்ட ஆட்சியாளர் ஆஷ் துரையை ‘மணியாச்சி’ என்னுமிடத்தில் வைத்து வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்றார். இக்கொலைக்கும் பாரதிக்கும் தொடர்பு இருக்கும் என்று ஆங்கிலேயர் சந்தேகப்பட்டனர். ‘பாரதியாரின் கனவு’, ‘ஆறில் ஒரு பங்கு’ என்னும் இரண்டு படைப்புகளும் தடை செய்யப்பட்டன. பாரதி அவை காதல் பாட்டும், சமூக சீர்திருத்தக் கதையுமே ஆகும் என்று விளக்கம் தந்தார். ஆயினும் அதற்குப் பலனில்லை.
     

    பாரதியார் கைது

    முதல் உலகப்போரில் பிரிட்டன் இந்தியரின் உதவியை நாடி வெற்றி பெற்றது. காங்கிரசில் தலைவர்கள் தங்கள் பகையை மறந்தனர். பிரிட்டன் வெற்றி பெற்றதால் தமக்கு ஆபத்து இல்லை என்று கருதிய பாரதி 1918-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ஆம் நாள் சென்னைக்குப் புறப்பட்டார். சென்னைக்கு வரும் வழியில் கடலூரில் அவரை ‘அரசியல் கிளர்ச்சியாளர்’ என்று காரணம் காட்டி ஆங்கில அரசு கைது செய்தது. பாரதி தம் நிலை பற்றி விவரமாகச் சென்னை மாகாண கவர்னருக்குக் கடிதம் எழுதினார், பலனில்லை. இறுதியில் இந்தியாவின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்ட குடிமகனாக வாழ்வதாகவும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்பதாகவும் எழுத்து பூர்வமாகக் கொடுத்த நிபந்தனையின் பேரில் 1918-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ஆம் நாள் விடுதலையானார்.
     

    2.1.5 பாரதியும் காந்தி அடிகளும்

     

    அரசியல் உலகில் காந்தியடிகளின் செல்வாக்கு மேலோங்கித் தீவிரவாதிகளின் பங்கு குன்ற ஆரம்பித்தது. இக்காலக் கட்டத்தில் படிப்படியாகப் பாரதி காந்தியின் அரசியல் குணங்களைப் போற்றவும் கடைப்பிடிக்கவும் முன் வந்தார். தென்னாப்பிரிக்காவில் அநியாயத்தை நியாயத்தால் வென்ற காந்தியின் கொள்கை வழி இந்தியாவில் விடுதலை இயக்கம் செயல்படவேண்டும் என்று பாரதி விரும்பினார். மகாத்மா காந்தி என்னும் மந்திரசக்தி பெரும்பான்மை மக்களை அவரது தலைமையின் கீழ் ஒன்றுபடச் செய்தது. இது பாரதியிடம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. தாம் இருந்த கட்சிதான் சிறந்தது என்றோ, தம் கொள்கையே மேலானது என்றோ விடாப்படியாக இல்லாமல் காலத்துக்கு ஏற்ப மாற்றம் தேவை என்பதை உணர்ந்தார் பாரதி. தம்மை மாற்றிக் கொண்டார். இந்தியாவை வாழ்விக்க வந்த மகாத்மா என்று அவரைப் பாராட்டினார். அந்தப் பாராட்டைக் கீழ்க்காணும் அடிகளில் காணலாம்.

     

    பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை
    வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா நீ வாழ்க!

    (மகாத்மா காந்தி பஞ்சகம், 1)
     

    2.1.6 பாரதியும் மிதவாதமும்

    துவக்க காலத்தில் தீவிரவாதக் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட பாரதி பின்னர் ஏன் மிதவாதப் போக்கினை ஏற்றுக் கொண்டார்? அரசியல் உலகில் காந்தியடிகளின் கோட்பாடுகளே மேலோங்கும் என்ற தொலைநோக்குப் பார்வை அவரை மாற்றியது. இந்தியாவின் விடுதலை சாத்விக முறையில்தான் கிடைக்கும் என்ற உணர்வு, மகாத்மா காந்தி காட்டிய அறவழியில் நின்று போராடத் தூண்டியது. அந்த அறவழியை,
     

    நெருங்கிய பயன்சேர் ‘ஒத்துழையாமை’
    நெறியினால் இந்தியாவிற்கு
    வருங்கதி கண்டு பகைத்தொழில் மறந்து
    வையகம் வாழ்க நல்லறத்தே

    (மகாத்மா காந்தி பஞ்சகம், 5)

    என்று பாரதியார் பாடுகின்றார்.

    இவ்வடிகளில் பாரதியார் உணர்த்தும் செய்தி என்ன?

    i

    ஒத்துழையாமை நெறி ‘நெருங்கிய பயன்’ தருவது; அது இந்தியாவிற்கு ‘நல்ல கதி’- போற்றக்கூடிய விரும்பக் கூடிய நல்ல நிலையினை -அளிக்கக் கூடியது.

    ii

    அதை உணர்ந்து வையகம் (உலகம்) ‘பகைத் தொழில்’ மறந்து, ‘நல்லறத்தே’ வாழ்வதாக.

புதுப்பிக்கபட்ட நாள் : 08-08-2017 14:18:04(இந்திய நேரம்)