Primary tabs
பாடம் - 6
C01126 பாரதியார் வாழ்கிறார்
சுப்பிரமணிய பாரதியார் என்னும் மகாகவி காலத்தை வென்றவர். அவர் வாழ்ந்த காலத்திற்குப் பின்பும் அவர் நினைக்கப் பெறுகின்றார். இன்றைய வாழ்க்கைச் சிக்கல்களுக்கும் அவர் கருத்துகள் தீர்வாக விளங்குகின்றன.
நீண்ட தொலைநோக்கு, சிக்கல்களைக் குறித்து ஆழ்ந்து எண்ணிய அனுபவம், உள்ளார்ந்த அன்பு, அருள், உயிர் இரக்கம், மனித நேயம், உடன்பிறப்பு உணர்வு போன்ற உயர் பண்புகளின் வழியாக, உலகை மேம்படச் செய்ய வேண்டுமென்ற விழைவு உடையவர். இமைப் பொழுதும் சோராது தொண்டில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் பொது நல ஆர்வம் கொண்டவர்; நாட்டுப்பற்று, மொழி ஆளுமை ஆகியவற்றின் கொள்கலமாக வாழ்ந்த மாமனிதர். பாரதி பூத உடல் மாய்ந்த நிலையிலும் வாழ்கிறார்; வாழ்கிறார்; வாழ்ந்து கொண்டே இருக்கிறார் என்பதை இந்தப் பாடம் காட்டுகின்றது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
தனி மனிதன், சமூகம், இலக்கியம் ஆகிய சகல தளங்களிலும் தம் கால மரபினை எதிர்த்து நின்று, பாரதி சாதனை புரிந்ததை எடுத்துக் காட்டுகளுடன் விளக்கலாம்.
பாரதியின் மறைவுக்குப் பின்னரும் நாடு, மொழி, சமூகம் ஆகியவைதொடர்பாக எழும் சிக்கல்களுக்குப் பாரதியின் படைப்புகள் தீர்வு காண இடம் தருவதை எடுத்துரைக்கலாம்.
பாரதியின் உணர்வும் சிந்தனைகளும் தொலைநோக்குப் பார்வையும் இன்றைய நிலையிலும் மக்களை நெறிப்படுத்துவதற்கு உகந்தவைகளாக வாழும் திறத்தை விவரிக்கலாம்.