தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

New Page 1-6:4-பாரதி தீர்வு தருகிறார்

  • 6.4 பாரதி தீர்வு தருகிறார்

    புகழொடு தோன்றிய கவிஞர் பாரதி. பராசக்திக்கே புதிய பரிணாமத்தையும், (ஒன்று மற்றொன்றாக மாறுதலையும்) புதிய பணிகளையும் படைத்த பாரதி, பாரத நாட்டில் தோன்றிய- தோன்றும் சிக்கல்களுக்குத் தீர்வுகளைக் கூறாமலா விடுவார்? அதனால், அவர் இன்றும் நினைக்கப்பெறுகிறார்; மக்கள் நினைவில் மங்காமல் வாழ்கிறார்.
     

    பொருளாதார நிலையில் தோன்றிய சிக்கல்கள்
    தாய்மொழி வளர்ச்சியில் தோன்றிய சிக்கல்கள்
    சமூக அமைப்பில் தோன்றிய சிக்கல்கள்

    என்ற மூன்று வகைச் சிக்கல்களையும் அவர் ஆழமாக நினைந்து தந்த தீர்வுகள் கருதற்குரியன.
     

    6.4.1 எல்லாரும் இந்நாட்டு மன்னர்

    நம் குடியரசானது, எல்லா மனிதர்களையும் ஒரு நிலையில் வைத்துப் பார்க்க வேண்டும்; எல்லார்க்கும் ஒத்த உரிமையும், ஒத்த உடைமையும் நல்கும் அமைப்பாக அது விளங்க வேண்டும். எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்பது குடியரசின் கோட்பாடு. அது நன்கு செயல்பட என்ன செய்ய வேண்டும்?

    முதலாவது சிலருக்குச் சோறு மிதமிஞ்சி இருக்க, பலர் தின்னச் சோறில்லாமல் மடியும் கொடுமையைத் தீர்த்து விட வேண்டும். இது இலக்கம் ஒன்று. பூமியின் மீதுள்ள நன்செய், புன்செய், தோப்பு, துரவு, சுரங்கம், நதி, அருவி, குப்பை, செத்தை, தரை - கடவுளுடைய சொத்தில் நாம் வேலி கட்டக் கூடிய பாகத்தை யெல்லாம் சிலர் தங்களுக்குச் சொந்தமென்று வேலி கட்டிக் கொண்டனர். பலருக்கு ஆகாசமே உடைமை. வாயு ஆகாரம். இதற்கு மருந்து என்னவென்றால், எல்லோரும் சமானம். அண்ணன் தம்பிபோல என்ற புத்தி உண்டாய் ஏழைகள் வயிறு பசிக்காமல் செல்வர்கள் காப்பாற்ற வேண்டும்.

    அது முடியாவிட்டால், ஐரோப்பாவில் ’சோஷலிஸ்ட்’ கட்சியார் சொல்வது போல், நிலத்தை சகலருக்கும் பொதுவென்று ராஜ்யவிதி ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

    (பாரதியார் கட்டுரைகள்- ஜன வகுப்பு, பக்.59)

     

    இந்த அருமையான தீர்வைப் பாரதியார் அளித்துள்ளார். செல்வம், அதிகாரம் ஆகியன தனி உடைமையாய் ஆகிவிடக் கூடாது. பாரதியின் இந்தத் தீர்வு இன்று பலராலும் பேசப்படுகின்றது; தேர்தல் அறிக்கைகளில் இடம் பெறுகின்றது. ஆனால் நடைமுறைப் படுத்தப்படவில்லை. சமஉடைமைச் சமுதாயம் நீண்ட நாளாக நம் கனவு. அது நனவாகும் நாளில் பாரதி நம்மோடு மேலும் நெருக்கமாக வந்து புன்னகைப்பார்.
     

    6.4.2 சென்றிடுவீர் எட்டுத் திக்கும்

    தமிழ்மொழி யாமறிந்த மொழிகளில் இனிமையானது என்றார் பாரதியார். ஆனால் தமிழர்களால் அது பேணி வளர்க்கப்படவில்லை. அதிலே தேக்கநிலை ஏற்பட்டு விட்டது. புதுமைப் பூக்கள், காலமாறுதலுக்கேற்ற புதிய மணங்கள் தமிழில் தோன்றாத நிலை உண்டாகியது. தமிழை வளர்க்க என்ன செய்வது? பாரதி தீர்வு தருகிறார்.
     

    தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்தல்
    உலகமெலாம் தேமதுரத் தமிழ் பரப்புதல்
    பிறநாட்டுச் சாத்திரங்களை மொழி பெயர்த்தல்
    புதுநூல்கள் பற்பல தமிழில் இயற்றுதல்
    வெள்ளம் போல் கலைப் பெருக்கும் கவிப்பெருக்கும் மிகச் செய்தல்.

     

    இந்த ஐந்து பணிகளையும் பாரதியே செய்து காட்டினார். இன்று தமிழ் நாட்டின் தமிழ்த் தெருவில் தமிழ் இல்லையே என்கிறார் பாரதிதாசன். நம் கல்வி மொழியாக ஆங்கிலம்; நிர்வாக மொழியாக ஆங்கிலம்; நம்மை ஆளும் மொழியாக இந்தி; வழிபாட்டு மொழியாகச் சமஸ்கிருதம்; இசை மொழியாகத் தெலுங்கு என்ற நிலை மேலும் மேலும் பரவலாகி வருகிறது. தமிழ் வளர்ச்சிக்கான செயல் முறைகளும் தொலைநோக்கும் நமக்கு வேண்டும். நிறைய மொழிகளைக் கற்று, அவற்றிலுள்ளவற்றைக் கொண்டு தமிழை மேலும் செழுமைப்படுத்த வேண்டும். பாரதியார் நமக்கு இவற்றை நாள்தோறும் வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார்.
     

    6.4.3 சாதிகள் இல்லையடி பாப்பா

    இந்தியா சாதியின் அடிப்படையிலான சமூக அமைப்பைக் கொண்டது. எனவே சாதியின் பெயரால் இன்றளவும் பல சண்டைகள், போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதை உணர்ந்த பாரதி,
     

    சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
         தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

    (பாப்பா பாட்டு, 15)
     

    என்றார். சாதி உணர்வு என்பது அநாகரிகத்தின் அடையாளம். ஆனால் அதை மனிதனிடமிருந்து மாற்ற முடியவில்லை. சாதிக் கலவரங்களால் உயிர் உடைமை இழப்புகள் நிகழ்ந்த வண்ணமாகவே இருக்கின்றன. இதற்கு என்ன செய்வது? மதம் மாறலாம்; சாதியை மாற்றிக் கொள்ள முடியாது; முடியவே முடியாதா? இராமானுஜர், இறையடியவர் எல்லோரும் சமம் என்றும், அனைவரும் கோயிலுக்குள் சென்று வழிபடலாம் என்றும் கூறினார். அவ்வாறே செய்தும் காட்டினார். பாரதியும் அதைச் செய்தார். கனகலிங்கத்திற்கும் அவருடைய நண்பர்க்கும் பூணூல் மாட்டி "இன்று முதல் நீர் பிராமணர்" என்றார். இஃது என்ன சாதி மாற்றம்? இது மாற்றமில்லை. சாதிகள் இல்லை என்ற அறிவிப்பு.
     

    நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் - இந்த
         நாட்டினில் இல்லை; குணம் நல்லதாயின்
    எந்தக் குலத்தினரேனும் - உணர்வு
         இன்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்.

    ( உயிர் பெற்ற தமிழர் பாட்டு - ஜாதி 5)
     

    ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த உணர்வு வேண்டும். சீர்திருத்தம் பேசும் - விரும்பும் - கடைப்பிடிக்கும் எந்தச் சமூகத்திலும் பாரதி இருப்பார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:39:25(இந்திய நேரம்)