தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6-6:0-பாட முன்னுரை

  • 6.0 பாடமுன்னுரை

    உடம்பைப் பொய்யென்று கூறும்,

     

    காயமே இது பொய்யடா - வெறும்
         காற்றடைத்த பையடா!

    (சித்தர் பாடல்)

    (காயம் = உடம்பு)

    என்ற இந்தக் கருத்துச் சரியானதா? பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லக் கழிந்து போவது தான் வாழ்வின் இலக்கணமா? நீரிற் குமிழி, நீர்மேல் எழுத்து என்றெல்லாம் சொல்லத் தக்கதுதான் நம் உடம்பா? எலும்பும் சதையும், குருதியும் நரம்பும் கொண்டு அமைந்த இவ்வுடல் பரிணாமத்தின் ஒரு குறியீடு. வளர்ச்சியில் இவ்வுடல் அழிவதும் உண்மையே. ஆனால் இத்தகைய அழியக் கூடிய உடம்பைக் கொண்டு எண்ணற்ற மனிதர்கள், பலப்பல அழியாத, நிலையான செயல்களைச் செய்துள்ளார்களே! கோபர்னிகஸ், கலீலியோ, நியூட்டன், டார்வின், ஐன்ஸ்டீன் என்ற அறிவியல் அறிஞர்களும், அலெக்சாண்டர், அக்பர், சிவாஜி, நெப்போலியன், விக்டோரியா அரசியார், ஜான்சிராணி போன்ற மாவீரர்களும், திருவள்ளுவர், சாணக்கியர், மாக்கியவெல்லி, பிளேட்டோ, அரிஸ்டாடில், வால்டேர், ரூசோ போன்ற அரசியல் மேதைகளும், கௌதமபுத்தர், மகாவீரர், கன்பூசியஸ், இயேசுகிறிஸ்து, முகமது நபி, விவேகானந்தர் போன்ற சமய ஞானிகளும், ஆபிரகாம் லிங்கன், அண்ணல் காந்தியடிகள், மார்ட்டின் லூதர் கிங் போன்ற சான்றாண்மைச் செல்வர்களும் இறந்து விட்டார்களா? இவர்களுடைய முகங்களும், எழுத்துகளும் பேச்சுகளும் மக்கள் நினைவிலிருந்து மறைந்து விட்டனவா? இல்லை. இவர்கள் வாழ்கிறார்கள்; என்றும் வாழ்வார்கள்.

    செவியினால் நுகரப்படும் அறிவுப்பொருள்களின் சுவைகளை உணராமல், வாயினால் உண்ணப்படும் உணவிலேயே ஆர்வம் காட்டும் மக்களால் இந்த உலகத்திற்கு எந்தப் பயனும் இல்லை. அவர்கள் வாழ்ந்தாலும் வாழ்ந்தவர்களாகக் கருதப்பட மாட்டார்கள் என்கிறார் வள்ளுவர்.

     

    செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
    அவியினும் வாழினும் என்

    ( குறள் : 420)

    (மாக்கள் = மக்கள், அவியினும் = அழிந்தாலும், என் = என்ன)

    உண்டு உடுத்து உறங்கிப் பின் இறந்துபடும் எண்ணற்றவர் இருப்பினும் இல்லாது போயினும் ஒன்றே அல்லவா? எனவே மனித வாழ்வு நிலையற்றது தான். எனினும், அதனைக் கருவியாகக் கொண்டு அரியன செய்து சாகாத்தன்மை பெறலாம் என அறிகிறோம். இதற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ்பவர் பாரதியார். அவர் இன்றும் எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது பற்றிய செய்திகள் இப்பாடத்தில் கூறப்படுகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:39:12(இந்திய நேரம்)