Primary tabs
-
6.1 மனித வாழ்வு
ஒருவர் பிறந்ததிலிருந்து இறக்கும் வரையில், இடையில் உள்ள காலப்பகுதியை வாழ்க்கை என்று கூறுகிறோம். உயிரோடு இருப்பது மட்டுமல்லாமல், உயிர்ப்போடு இருப்பது தான் வாழ்வு என்று குறிப்பிடப்படுகிறது. இது பொருள் பொதிந்ததாக இருப்பது தான் உயிர்ப்பு எனப்படும். பொருள் என்பது குறிக்கோளை மேற்கொண்டிருப்பதாகும். இந்தக் குறிக்கோளை முடிவு செய்ய, நமது உடல் பற்றியும் நாம் வாழும் உலகம் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்.
‘வாழ்வாவது மாயம்; மண்ணாவது திண்ணம்’ என்ற நிலையில்லாமை உடம்புக்கே உரியது. பொய் உடம்பு கொண்டு ஈட்டும் புகழுடம்பு நிலையானது.
புகழ் உடம்பு முழுமை அடையும் போது, பூத உடம்பு அழிந்து விடும். இது அறிவு ஆற்றல் உடையவர்க்கே அமையும் என்பதனை,
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது(குறள் :235)
(நத்தம் = ஆக்கம், சாக்காடு = சாதல், வித்தகர் = அறிவு ஆற்றல் உடையவர்)
என்றார் திருவள்ளுவர். நிலையின்மைக்குள் ஒரு நிலைபேறு உண்டாக்கும் ஆற்றல் சிலருக்கு வாய்க்கின்றது. அவர்கள் தங்கள் உடம்பு அழிந்த பின்னும் வாழ்கின்றனர்.
கோடிக்கணக்கான மனிதர்களில் சிலரே அவர்கள் இறந்த பின்னரும் மக்கள் மனத்தில் நிலைத்து வாழ்ந்து வருகின்றனர். பலப்பல தலைமுறைகள் சென்ற பின்னும் நினைந்து போற்றப்பெறுகின்றனர். அதற்குக் காரணம் யாது? அவர்கள் தம்மை நினையாது வாழ்ந்தமையே. பிறருக்காக வாழ்ந்தவர்கள் பெருமை பெற்றார்கள். நினைக்கப் பெற்றார்கள்.
நல்லோர் இமயமலையைப் போல், நெடுந்தூரத்திலிருந்தே
பிரகாசிக்கின்றனர்; ஆனால் தீயோர் இரவின் இருளூடு
எய்த அம்புகளைப் போல், கண்ணுக்கே புலனாவதில்லை.(தம்ம பதம், 21-15)
என்கிறார் புத்தர். ‘மனிதர் பலர் மடிந்தனர்; பார்மீது நான் சாகாதிருப்பேன்’ என்கிறார் பாரதி. வாழும் சிலரில், பாரதி ஒருவராகத் திகழ்கின்றார்.
6.1.3 பொய் உடம்பும் புகழ் உடம்பும்
மனிதனின் பூத உடம்பு வீழ்வதாகிய சாவும் ஓர் இயற்கை நிகழ்வேயாம். ஆனால் வாழும் காலத்துச் செய்யும் அருஞ்செயல்களால், தசை உடம்பாகிய பொய் உடம்பு வீழ்ந்த பின்னும், புகழ் உடம்பாகிய மெய் உடம்பு பெற்று விடுகின்றனர் மனிதரில் மிகச் சிலர். இப்புகழ் உடம்பிற்கு எந்த ஊழியிலும் முடிவு என்பது இல்லை.
உலகம் நிலை இல்லாத ஒன்று. நேற்று உயிரோடு இருந்த ஒருவர் இன்று உயிரோடு இல்லை என்பது தான் உலகத்தின் இயல்பாக உள்ளது என்பதனை,
நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ்உலகு(குறள் : 336)
(நெருநல் = நேற்று)
என்று பூத உடம்பாகிய பொய் உடம்பைக் குறித்து வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
மேலும், மேற்குறிப்பிட்டவாறுள்ள நிலையில்லாத உலகத்து நிலைத்து நிற்பது புகழ் ஒன்றே என்பதனை,
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால்
பொன்றாது நிற்பது ஒன்று இல்(குறள் : 233)
(ஒன்றா = தனக்கு இணையில்லாத, பொன்றாது = இறவாது)
என்று புகழுடம்பாகிய மெய் உடம்பு குறித்து வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
முப்பத்தொன்பது ஆண்டுகளே மண்ணுலகில் வாழ்ந்த பாரதி நூறாண்டுகளுக்கு மேல் வாழ்ந்த மனிதர்களும் பெற முடியாத புகழையும், நிலைபேற்றையும் பெற்றுவிட்டார்.
காலா! உனை நான் சிறுபுல்லென மதிக்கிறேன்; என்றன்
காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்(காலனுக்கு உரைத்தல்)
என்றும்,
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்
பலர்புகழ் இராமனுமே ஆற்றில் வீழ்ந்தான்;
பார்மீது நான்சாகா திருப்பேன் காண்பீர்!(பாரதி அறுபத்தி ஆறு - 6)
என்றும் கூறியது மெய்யாகி விட்டது. அவருடைய எலும்பையும் தோலையுமே காலன் கவர்ந்து கொள்ள முடிந்தது. ஆனால் அமரகவி இசைத்த கவிதைகள்....
சாதிகள் இல்லையடி பாப்பா....
செந்தமிழ் நாடென்னும் போதினிலே.....
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி.....
சிந்துநதியின் மிசை நிலவினிலே.....
நெஞ்சு பொறுக்கு திலையே....
தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில்...
யாமறிந்த மொழிகளிலே.....
பாயுமொளி நீயெனக்கு....
சின்னஞ்சிறு கிளியே....இப்படி எத்தனையோ பாடல்கள் நம் செவியில் காலங் காலமாக ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. தொடக்கக் கல்வியிலிருந்து பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பட்டம் பெறுவது வரையில் பாரதி பலராலும் கற்கப் பெறுகிறார். தேசிய ஒருமைப்பாட்டின் குரலையும், தமிழ்மொழியின் எதிர்கால வளர்ச்சியையும், பொதுவுடைமைக் குறிக்கோளையும், உலகளாவிய மனிதநேயத்தையும் இன்று உலகின் பல திசைகளிலிருந்தும் பாரதியின் பாட்டு எதிரொலிக்கின்றது.