தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diplamo Course - C02122-அ, ஆ உயிர்எழுத்துகளின் பிறப்பு

  • 2.4 அ, ஆ உயிர்எழுத்துகளின் பிறப்பு

    2.4.1 தொல்காப்பியர் கருத்து

    உயிர்எழுத்துகள் பன்னிரண்டனுள் முதலில் வருகின்ற ‘அ’கரமும் ‘ஆ’காரமும் பிறப்பதற்குத் தேவைப்படும் முயற்சி பற்றி முதலில் காண்போம். இவ்விரண்டு உயிர்எழுத்துகளும் நிறை உயிர் முயற்சியுடன் வாயைத் திறக்கின்ற போது தோன்றுகின்றன. ‘வாயைத் திறக்கின்ற’ முயற்சியைத் தமிழ் இலக்கண ஆசிரியர்கள் ‘அங்காத்தல்’- என்ற சொல்லால் குறிப்பிடுவதை அறியலாம். அ, ஆ உயிர்எழுத்துகளின் பிறப்புப் பற்றித் தொல்காப்பியர்,

    அவற்றுள்
    அ ஆ ஆயிரண்டு அங்காந்து இயலும்

    (எழுத்து. 85)

    என்று விளக்குகின்றார்.

    எழுத்தொலிகள் பிறப்பதற்கு நான்கு உறுப்புகளின் முயற்சியும் தொழிலும் தேவைப்படுவன என்று முந்தைய பாடத்தில் படித்தீர்கள். அந்த நான்கு உறுப்புகள்

    (1)
    இதழ்
    (2)
    நா
    (3)
    பல்
    (4)
    அண்ணம்

    என்பவை. இந்த நான்கினுள் ‘அண்ணம்’ என்பது ‘மேல்வாய்’ என்று பொருள்படும்.

    எனவே மேல்வாயைத் திறக்கும் முயற்சியின் பயனாக அகர ஆகார உயிர்ஒலிகள் தோன்றும் என்று அறியலாம்.

    2.4.2 நன்னூலார் கருத்து

    உயிர்எழுத்துகளில் அகரமும் ஆகாரமும் பிறப்பதற்குத் தேவைப்படும் முயற்சியை நன்னூலும் தெரிவிக்கின்றது.

    அவற்றுள்,

    முயற்சியுள் ‘அ ஆ அங்காப்பு உடைய’

    (நூற்பா. 75)

    என்று தெரிவிக்கின்றது.

    அ, ஆ ஆகிய இவை இரண்டும் ‘வாயைத் திறத்தல் - அங்காத்தல்’ என்னும் முயற்சியின் பயனாகத் தோன்றுகின்றன என்பதை, நன்னூலும் தெளிவுபடுத்துகின்றது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:23:35(இந்திய நேரம்)