தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diplamo Course - C02122-உ, ஊ, ஒ, ஓ, ஒள ஆகிய எழுத்துகளின் பிறப்பு

  • 2.6 உ, ஊ, ஒ, ஓ, ஒள ஆகிய எழுத்துகளின் பிறப்பு

    2.6.1 தொல்காப்பியர் கருத்து

    தொல்காப்பியம், உ, ஊ, ஒ, ஓ, ஒள ஆகிய உயிர்எழுத்துகள் ஐந்தும் இதழ் குவிந்து சொல்லப் பிறக்கும் என்று விளக்குகின்றது. இதனை,

    உ ஊ ஒ ஓ ஒள என இசைக்கும்
    அப்பால் ஐந்தும் இதழ் குவிந்து இயலும்

    (எழுத்து. 87)

    என்னும் தொல்காப்பிய நூற்பா உரைக்கின்றது. இந்த ஐந்து உயிர்எழுத்துகளும் பிறப்பதற்கு உயிரின் முயற்சியோடு, இதழ் குவிதலாகிய முயற்சியும் தேவைப்படுகின்றது என்பது தெளிவாகிறது.

    2.6.2 நன்னூலார் கருத்து

    உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் இந்த ஐந்து உயிர்எழுத்துகளும் எவ்வாறு பிறக்கின்றன என்பதை நன்னூலும் விளக்கியுள்ளது.

    நன்னூல் இந்த எழுத்துகள் பிறப்பதற்குத் தேவைப்படும் முயற்சியையும், ஈடுபடும் உறுப்புகளையும் மிகச் சுருக்கமாகத் தெரிவிக்கக் காணலாம். இந்த உயிர்எழுத்துகள் இதழ் குவிதலால் தோன்றுகின்றன என்று தெரிவிக்கின்றது. இக்கருத்தை,

    உ, ஊ, ஒ, ஓ, ஒள இதழ் குவிவே

    (நூற்பா. 77)

    என்னும் நூற்பாவின் மூலம் நன்னூல் விளக்கிச் செல்கின்றது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:23:41(இந்திய நேரம்)