தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

எழுத்து மாற்ற அடிப்படையில் புணர்ச்சிப் பாகுபாடு

  • 1.6 எழுத்து மாற்ற அடிப்படையில் புணர்ச்சிப் பாகுபாடு

    நிலைமொழியில் உள்ள சொல்லும், வருமொழியில் உள்ள சொல்லும் அல்வழிப் பொருளிலும், வேற்றுமைப் பொருளிலும் புணர்ந்து (சேர்ந்து) வரும் என்பதை மேலே பார்த்தோம். இவ்வாறு புணர்கின்ற இரு சொற்களில் ஏதேனும் மாற்றம் நிகழ்கின்றதா அல்லது நிகழவில்லையா என்பதை அடிப்படையாகக் கொண்டு புணர்ச்சியை நன்னூலார் இயல்பு புணர்ச்சி, விகாரப்புணர்ச்சி என இரண்டு வகையாகப் பிரிக்கிறார். இவ்விருவகைப் புணர்ச்சி பற்றி அவர் விளக்கமாகவும் கூறுகிறார்.

    1.6.1 இயல்பு புணர்ச்சி

     நிலைமொழி வருமொழியுடன் புணரும்பொழுது, அவ்விரு சொற்களிலும் எவ்வித எழுத்து மாற்றமும் நிகழாமல் இயல்பாக இருப்பது இயல்பு புணர்ச்சி எனப்படும். அஃதாவது அடுத்துக் கூறப்படும் விகாரப் புணர்ச்சிக்கு உரிய விகார வகைகள் எதனையும் அடையாமல் இயல்பாகப் புணர்வது இயல்பு புணர்ச்சி ஆகும். இதனை நன்னூலார் பின்வரும் நூற்பாவில் குறிப்பிடுகின்றார்.

    விகாரம் அனைத்தும் மேவலது இயல்பே - (நன்னூல், 153)

    (மேவலது - அடையாதது.)

    சான்று:

    தாமரை + பூத்தது = தாமரை பூத்தது
    பொன் + மலை = பொன் மலை
    கதவு + திறந்தது = கதவு திறந்தது
    1.6.2 விகாரப் புணர்ச்சி

    நிலைமொழி வருமொழியுடன் புணரும்பொழுது, அவ்விரு சொற்களில் ஒன்றிலோ அல்லது இரண்டிலுமோ ஏதேனும் எழுத்து மாற்றம் நிகழ்ந்தால் அது விகாரப் புணர்ச்சி எனப்படும். விகாரப் புணர்ச்சியை நன்னூலார் தோன்றல் விகாரம், திரிதல் விகாரம், கெடுதல் விகாரம் என மூன்று வகைப்படுத்திக் காட்டுகிறார். இம்மூவகை விகாரங்களும் நிலைமொழியாகவும், வருமொழியாகவும் வரும் சொற்களின் முதல், இடை, இறுதி ஆகிய மூன்று இடங்களிலும் நிகழும் என்று அவர் கூறுகிறார்.

    தோன்றல், திரிதல், கெடுதல் விகாரம்
    மூன்றும் மொழிமூ இடத்தும் இயலும் - (நன்னூல், 154)

    (மொழி = சொல்; மூ இடத்தும் = சொல்லின் முதல், இடை, இறுதி ஆகிய மூன்று இடங்களிலும்.)

    • தோன்றல் விகாரம்

    இரு சொற்களுக்கு இடையில் எழுத்தோ, சாரியையோ தோன்றுவது தோன்றல் விகாரம் எனப்படும்.

    சான்று:

    பூ+கொடி
    = பூங்கொடி (ங் என்ற எழுத்துத் தோன்றியது)
    யானை+கொம்பு
    = யானைக் கொம்பு (க் என்ற எழுத்துத் தோன்றியது)
    ஆ+பால்
    = ஆவின் பால் (இன் என்ற சாரியை தோன்றியது)

    • திரிதல் விகாரம்

    இரு சொற்களில், ஏதேனும் ஒரு சொல்லில் உள்ள எழுத்து இன்னோர் எழுத்தாகத் திரிதல் (மாறுதல்) திரிதல் விகாரம் எனப்படும்.

    சான்று:

    பொன்+குடம் = பொற்குடம்
              (நிலைமொழி இறுதி ன் என்பது ற் எனத் திரிந்துள்ளது)

    முன்+நிலை = முன்னிலை
                   (வருமொழி முதல் ந் என்பது ன் எனத் திரிந்துள்ளது)

    சில நேரங்களில் நிலைமொழியின் இறுதி எழுத்தும், வருமொழியின் முதல் எழுத்தும் இன்னோர் எழுத்தாகத் திரிதல் உண்டு.

    சான்று:

    பொன்+தாமரை = பொற்றாமரை
            (நிலைமொழி இறுதி ன் என்பதும், வருமொழி முதல் த் என்பதும் ற் எனத் திரிந்துள்ளன.)

    • கெடுதல் விகாரம்

    இரு சொற்களில் ஏதேனும் ஒரு சொல்லில் உள்ள எழுத்து மறைந்து போதல் கெடுதல் விகாரம் எனப்படும். (கெடுதல்-மறைதல்)

    சான்று:

    மரம் + நிழல் =மரநிழல்
                    (நிலை மொழி இறுதி ம் என்பது கெட்டது.)

    மேலே கூறப்பட்ட மூன்று விகாரங்களும் நிலைமொழியாகவும், வருமொழியாகவும் அமையும் இரு சொற்களின் முதல், இடை, இறுதி ஆகிய மூன்று இடங்களிலும் நிகழும் என நன்னூலார் குறிப்பிட்டுள்ளார்.

    சான்று :

    ஆறு + பத்து =அறுபது

    இதில் நிலைமொழியின் முதலில் உள்ள என்னும் நெட்டெழுத்து என்னும் குற்றெழுத்தாகத் திரிந்தது. வருமொழியின் இடையில் உள்ள த் என்ற மெய் கெட்டது.

    • ஒரே புணர்ச்சியில் பல விகாரங்கள்

    இரு சொற்கள் சேர்ந்துவரும் ஒரு புணர்ச்சியில் தோன்றல், திரிதல், கெடுதல் என்னும் மூன்றுவகை விகாரங்களில் ஒரே ஒரு விகாரம் மட்டும் அல்லாமல் இரண்டு விகாரமோ, மூன்று விகாரமோ கூட வரப்பெறும் என்கிறார் நன்னூலார்

    ஒரு புணர்க்கு இரண்டும் மூன்றும் உறப்பெறுமே - (நன்னூல், 157)

    (புணர் = புணர்ச்சி)

    சான்று :

    1. யானை + கொம்பு = யானைக் கொம்பு

    இதில் தோன்றல் விகாரம் மட்டும் வந்தது.

    2. மரம் + பெட்டி = மரப்பெட்டி

    இதில் நிலைமொழியின் இறுதியில் உள்ள மகரமெய் கெட்டு, அங்கே வருமொழியின் முதலில் உள்ள எழுத்துக்கு ஏற்ப, பகர மெய் தோன்றியதால் கெடுதல், தோன்றல் என்னும் இரு விகாரங்கள் வந்தன.

    3. பனை + காய் = பனங்காய்

    இதில் நிலைமொழியாக வந்துள்ள பனை என்பதன் இறுதியில் உள்ள ஐகாரம் கெட்டு (கெடுதல் விகாரம்), இடையில் அம் என்ற சாரியை தோன்றி (தோன்றல் விகாரம்), அம் என்ற சாரியையில் உள்ள மகரமெய் ஙகர மெய்யாகத் திரிந்ததால். (திரிதல் விகாரம்) மூன்று விகாரங்களும் வந்தன.

    பனை + காய்
     
    பன் + காய்
    ( - கெடுதல்)
    பன் + அம்+காய்  
    (அம் - தோன்றல்)
    பன் + அங்+காய்        
    (ம் ங் எனத் திரிதல்)
    = பனங்காய்

    • புணர்ச்சியால் ஓசை இனிமையும், பொருள் தெளிவும்

    இரு சொற்கள் புணர்ச்சியில் சேரும்பொழுது சில இடங்களில் இயல்பாக வருகின்றன என்பதையும், சில இடங்களில் தோன்றல், திரிதல், கெடுதல் என்னும் விகாரங்களுள் ஒன்றையோ பலவற்றையோ பெற்று வருகின்றன என்பதையும் மேலே பார்த்தோம். இவை எல்லாம் அச்சொற்களைச் சேர்த்துப் பேசுபவர்க்கு எளிதில் உச்சரித்துக் கூறும் ஓசை இனிமையையும், அவற்றைக் கேட்பவர்க்குச் செவி மடுத்துக் கேட்கும் ஓசை இனிமையையும் தருகின்றன. மேலும் சில இடங்களில் பொருள் தெளிவையும் தருகின்றன. இயல்பு புணர்ச்சிக்கும், விகாரப் புணர்ச்சிக்கும் மேலே காட்டிய சான்றுகளை நோக்கினால், அவற்றை வாய்விட்டுச் சொல்லிப் பார்த்தால் இவ்வுண்மை நன்கு தெரியவரும்.

    பூ+கொடி என்பதை இயல்பாக, பூகொடி என்று சேர்த்தும், இடையில் ங் என்ற மெய் எழுத்துத் தோன்ற, பூங்கொடி என்று சேர்த்தும் சொல்லிப் பாருங்கள். பின்னதிலேயே ஓசை இனிமை உள்ளதை உணரலாம். மேலும் பூ என்பதோடு கா, சோலை, தடம், பொழில் முதலிய சொற்கள் சேர்ந்து வந்து பூங்கா, பூஞ்சோலை, பூந்தடம், பூம்பொழில் என்று ஓசை இனிமையுடன் அமைவதையும் காணலாம்.

    மரம்+பெட்டி என்பதை இயல்பாக, மரம்பெட்டி என்று கூறினால் ஒரு பொருள்படும். அதையே மரப்பெட்டி என்று விகாரப்படுத்திக் கூறினால் வேறொரு பொருள்படும். மரத்தால் ஆகிய பெட்டி வாங்கி வந்த ஒருவர் மற்றொருவரிடம்,

    நான் மரம்பெட்டி வாங்கி வந்தேன்

    என்று இயல்பாகக் கூறினால், கேட்பவர்க்கு நான் மரமும் பெட்டியும் வாங்கி வந்தேன் என்றல்லவா பொருள்பட்டுவிடும்?

    நான் மரப்பெட்டி வாங்கி வந்தேன்

    என்று விகாரப்படுத்திக் கூறும் போதுதான், நான் மரத்தால் ஆகிய பெட்டி வாங்கி வந்தேன் என்று கேட்பவர்க்குப் பொருள் தெளிவுபடும். மேலும் மரப்பெட்டி என்று சொல்லும்போதே ஓசை இனிமையும் தோன்றுகிறது.

    எனவே ஓசை இனிமைக்கும், பொருள் தெளிவுக்கும் காரணம் புணர்ச்சியே என்பதை நன்கு விளங்கிக் கொள்ளலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 12-08-2017 14:34:28(இந்திய நேரம்)