தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்-6.2 படையெடுப்புகள்

  • 6.2 படையெடுப்புகள்

    Audio Button

    தமிழகம் முந்நீர் என்று கூறப்படும் கடல் சூழ்ந்த நில அமைப்பைப் பெற்றது.  கடலைப் பழந்தமிழர் முந்நீர் என்றனர். ஒரு தீபகற்பமாய் (Peninsula) விளங்கும் நிலம் இது. இந்த நிலத்தின் மீது அயலவர் படையெடுப்பு என்பது அரிதாகவே நிகழ்ந்திருக்கிறது.

    • களப்பிரர்
    • பல்லவர்
    • மாலிக்காபூர்
    • விஜய நகர நாயக்கர்
    • மராட்டியர்
    • ஆங்கிலேயர்
    • பிரெஞ்சுக்காரர்

    ஆகியோர் வெவ்வேறு காலங்களில் இந்நாட்டின் மீது படையெடுத்து வந்தனர். தமிழரசர்கள் வலிமை குன்றியபோதும், தங்களுக்குள் பகைகொண்ட போதும், திறமையில்லாத அரசர்கள் ஆண்டபோதுமே இந்தப் படையெடுப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. மேலே கண்ட அயலவர்களைக் குறித்துச் சிறிது காணலாமா?

    6.2.1 களப்பிரர்

    களப்பிரர் என்பவர் கருநாடகத்தைச் சேர்ந்த குறுநில மன்னர். கருநாடகத்தில் சந்திரகிரி மலை உள்ள பகுதி பழங்காலத்தில் களப்பு நாடு எனப்பட்டது. இதுவே களப்பிரர்களின் ஆதி இடமாகும். இந்தக் களப்பிரர் குடியைச் சார்ந்த புல்லி என்ற குறுநில மன்னன் வேங்கட மலைப் பகுதியை ஆண்டு வந்தான். இவனே தகடூர்ப் பகுதியின் மீது படையெடுத்துக் கைப்பற்றியவன். தகடூர் என்பது இன்றைய தருமபுரியாகும். இப்பகுதி இப்படையெடுப்புக்கு முன்பு சங்க கால வள்ளலான அதியமான் பரம்பரையினரால் ஆளப்பட்டது. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் அச்சுத விக்கந்தன் என்ற களப்பிர அரசன் சேர சோழ பாண்டியர்களை வென்று தமிழ்நாட்டின் பெரும் பகுதியைக் கைப்பற்றினான். இக்காலம் வரலாற்றில் இருண்ட காலம் எனப்பட்டது. தமிழர் பண்பாடு சற்றுச் சிதைந்த காலமாக இதனைக் குறிக்கலாம்.

    6.2.2 பல்லவர்

    பல்லவர்கள் வேங்கட மலைக்கு அப்பாலிருந்து வந்தவர்கள் என்பர் அறிஞர். தொடக்க காலப் பல்லவர்கள் தமிழ் மொழியைப் போற்றவில்லை. கிரந்த எழுத்துக்களிலேயே தம் கல்வெட்டுக்களை வெளியிட்டனர். சிம்ம விஷ்ணு, மகேந்திர வர்மன், நரசிம்மவர்மன் ஆகிய பல்லவ அரசர்கள் காலத்தில் வடமொழி செல்வாக்குப் பெற்று விளங்கியது. தொடக்க காலத்தில் சமண சமயத்தைச் சார்ந்திருந்த பல்லவர்கள் பின்பு சைவர்களாக மாறினர். மாமல்லபுரம், திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை, சித்தன்னவாசல், நாமக்கல் போன்ற இடங்களில் அமைந்த குகைக் கட்டிடங்கள் தமிழ்நாட்டில் நிகழ்ந்த கட்டடக் கலை மாற்றத்தைக் காட்டுவன. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலைப் பாருங்கள்! இது பல்லவர் காலச் சமய, கலைத் தொண்டுகளுக்கு நல்ல எடுத்துக்காட்டாகும்.

    6.2.3 ஆங்கிலேயர் உட்பட்ட பிறர்

    பாண்டியர்களில் உடன் பிறந்தோர் தம்முள் பகைத்துக் கொண்டு மாலிக்காபூரை அழைத்து மொகலாயர் ஆட்சி ஏற்பட வழி வகுத்தனர். குறுநில மன்னர்கள் இடையே ஒற்றுமை இல்லாத நிலையைப் பயன்படுத்திக் கொண்டு விஜயநகர நாயக்கர் தமிழகத்திற்குள்ளே புகுந்தனர். நாயக்கர் தஞ்சையில் தளர்ந்த போது மராட்டியர் நுழைந்தனர். ஆர்க்காட்டு நவாபிடம் உரிமையைப் பெற்று ஆங்கிலேயர் இடம் பிடித்தனர். பிரெஞ்சுக்காரர் கடல் வழியாக வந்து புதுவை காரைக்கால் பகுதிகளைக் கைப்பற்றினர். தமிழ்ப் பேரரசு நிலை குலைந்த பின்பே வேற்றவர்கள் உள்ளே நுழையும் நிலை ஏற்பட்டது.

    கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், ஈழம் வென்றான் என்றெல்லாம் சிறப்புப் பெயர் பெற்றனரே! ஏன் அவர்கள் நாடே கொள்ளை போயிற்று? கவனிக்க வேண்டிய கேள்வி அல்லவா இது? தமிழர்கள் வட இந்தியாவை, இலங்கையை, மாலத்தீவுகளை எல்லாம் வென்றார்களே, அப்பகுதிகளை நிலையாகத் தம் ஆட்சிக்குக் கீழ்க் கொண்டு வந்தனரா? தம் கொடியும் படையும் நிறுவித் தம் ஆட்சி அங்கு நடக்க வழி கண்டனரா? இல்லை. தோற்ற அரசர்கள் தம் காலில் விழுந்து வணங்கியவுடன் அவர்களிடமே நாட்டைக் கொடுத்துவிட்டுத் திரும்பிவிட்டனர். ஆண்டுக் கணக்கில் தமிழ் அரசர்கள் தாம் வென்ற நாட்டில் இருப்பதில்லை. ஆனால் ஆங்கிலேயர்களைப் பாருங்கள்! தாம் வென்ற நாடுகளில் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆட்சி நடத்துவர்; தம் மக்களைக் குடியேற்றுவர்; தம் பண்பாட்டை அயல் மண்ணில் வேர் ஊன்றச் செய்வர். தமிழ் அரசர்களின் பெருந்தன்மையும், சொந்த ஊருக்குத் திரும்பிவிட வேண்டுமென்ற ஊர்ப் பற்றும் அவரது ஆட்சியும் பண்பாடும் அயல் நிலங்களில் பரவாமல் தடுத்து விட்டன.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:08:00(இந்திய நேரம்)