தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

காஞ்சி மறவர் செயல்கள்

  • 5.2 காஞ்சி மறவர் செயல்கள்

    காஞ்சி மறவர் மேற்கொள்ளும் செயல்கள் துறைகளாகக் கூறப்பட்டுள்ளன.

    இப்பகுதியில், காஞ்சி அதிர்வு, தழிஞ்சி, படைவழக்கு, பெருங்காஞ்சி ஆகியவை பற்றிப் பார்ப்போம்.

    5.2.1 காஞ்சி அதிர்வு

    காஞ்சி - காஞ்சி மறவன்; ஆகுபெயர். காஞ்சி மறவன் பொறாதவனாய்த் துடியதிர எதிர்த்துப் போரிடுவது கூறலின் காஞ்சி அதிர்வு எனப்பட்டது.

    • கொளுப் பொருளும் கொளுவும்

    தன்மேல் மோத வருகின்ற வஞ்சி மறவரது படையின் வரவை, சிறிதும் பொறாத வேல்தொழிலில் வல்லவனான காஞ்சி மறவனது வீரத்தைச் சிறப்பாக உரைப்பது காஞ்சி அதிர்வு என்னும் துறையாம்.

    மேல்வரும் படைவரல் மிகவும் ஆற்றா
    வேல்வல் ஆடவன் விறல்மிகுத் தன்று

    எடுத்துக்காட்டு வெண்பா

    மன்மேல் வரும்என நோக்கான் மலர்மார்பின்
    வென்வேல் முகந்தபுண் வெய்துயிர்ப்பத் - தன்வேல்
    பிடிக்கலும் ஆற்றாப் பெருந்தகை ஏவத்
    துடிக்கண் புலையன் தொடும்

    வெண்பாவின் பொருள்

    காஞ்சி மறவன் அகன்ற மார்பில் வஞ்சி வேந்தனுடைய வேலினை ஏற்றதனால் ஏற்பட்ட புண்ணினால் பெருமூச்சு வாங்குகின்றான்; அவனால், தன் கைவேலையும் பிடிக்க இயலவில்லை. இயலாத நிலையிலும் மேம்பட்ட வீரத்தையுடைய அப்பெருந்தகை, தான் மீண்டும் எழுந்து போரிட்டால், வஞ்சி வேந்தன் தன்மேல் வருவான் என்பதையும் கருதாதவனாய்த் துடியனைத் துடிகொட்டும்படியாக ஏவுகின்றான். துடியன் கொட்ட, அவ்வொலி கேட்டு, மீளவும் அவன் மலைகின்றான் என்று, அதைப் பார்த்த ஒருவன் சொல்வதாக, வீர மிகுதியையும் துடியதிர்வையும் பேசுகின்றது இவ்வெண்பா.

    துறையமைதி

    வஞ்சி மறவன் எய்த வேலினால் உற்ற புண்வழி உயிர் ஓடவும், தனது வேலினைப் பிடிக்கலாற்றாத நிலைமையிலும் காஞ்சி மறவன் ஒருவன், மேலும் போர் புரியும் விருப்பம் மூண்டுத் துடியனை முழக்கும்படி ஏவினான் என்பதில், காஞ்சி அதிர்வின் துறைப் பொருளாகிய ‘வேல்வல் ஆடவன் விறல்’ என்பதும் துடியதிர்வும் தோன்றி, துறை பொருந்துவதைக் காணலாம்.

    5.2.2 தழிஞ்சி

    முன்னர், வஞ்சித் திணையில், தழிஞ்சி என்றதன் காரணம் கூறப்பட்டதை அறிவீர்கள். அந்தத் தழிஞ்சி, முதுகிட்டோடும் மறவனொடு போர் புரியாமையைக் கூறியது. இந்தத் தழிஞ்சி, தமது எல்லையை வஞ்சியார் கடந்து மேல்வராதபடி காக்க விரும்பும் காஞ்சி மறவனின் நினைப்பிற்கேற்ப, வஞ்சியாரும் மேல்வாராது நின்றமையைக் கூறுவதாம்.

    • கொளுப் பொருளும் கொளுவும்

    எவ்விடத்தும் பரவி வருகின்ற வஞ்சியார் படை, தமது நாட்டின் எல்லையில் புகாதபடி, வாயில்களைக் காப்பது தழிஞ்சி என்னும் துறையாம்.

    பரந்துஎழுதரு படைத்தானை
    வரம்புஇகவாமைச் சுரங்காத்தன்று

    எடுத்துக்காட்டு வெண்பாவின் பொருள்

    காஞ்சி மன்னன் காட்டரண் உடையவன். அவன் நாட்டினுள் புகுவதற்கரிய வாயில் வழியில் காட்டு மூங்கில் அசைந்து ஒலிக்கும். ஒன்றுக்கொன்று தம்முள் போரிடும் வேங்கை இனம் போன்ற மறவர்களால், அவ்வாயில் காக்கப்படும் காரணத்தால், வஞ்சி வேந்தன், காஞ்சியாரின் அரணைக் கைப்பற்ற விரும்பி வருகின்ற முயற்சியைக் கை விடுவானாக.

    இதன் கருத்து

    காவல் மிக்க காஞ்சி மன்னனின் அரணைக் கைப்பற்றும் முயற்சியை வஞ்சி வேந்தன் கைவிடல் வேண்டும். ஏனெனின், அது வேங்கை அன்ன மறவரால் காக்கப் பெறுவதேயாம்.

    துறையமைதி

    வேங்கை மறவரால் காக்கப் பெறுவதால் காஞ்சியாரின் அரணைக் கைப்பற்றும் நோக்கில் வீணே முயல வேண்டா என்பதில், வஞ்சி வேந்தனின் தானை எல்லை கடக்காமல் சுரங்காப்பது தெரிகிறது. இதனால் துறைப்பொருள் பொருந்தி நிற்பது புலனாகின்றது.

    5.2.3 படை வழக்கு

    மறம், மானம் முதலியவற்றை உடைய மறவர்க்குப் போர்க்கருவிகளை, காஞ்சி மன்னன் வழங்குதல் பற்றிப் படை வழக்கு எனப் பெற்றது.

    • கொளுப் பொருளும் கொளுவும்

    முத்து அணிகலன்களைப் பூண்கின்ற மறப்பண்பு வாய்ந்த காஞ்சி மன்னன், தன்னுடைய மறவர்க்குப் படைக் கருவிகளை வழங்கினான். வழங்கினமையைக் கூறுவது படைவழக்கு என்னும் துறையாம்.

    முத்துஅவிர்பூண் மறவேந்தன்
    ஒத்தவர்க்குப் படைவழங்கின்று

    எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து

    மறக்குடியில் வந்த காஞ்சி மறவர்க்கு மன்னன் படைக் கருவிகளை வழங்கினான்; இதனால் தனக்கு உணவு கிட்டுவது உறுதி எனக் கூற்று (யமன்) மகிழ்ந்தது. இதிலிருந்து துறைப்பொருள் பொருந்துவது புலப்படுகிறது.

    • இதுவும் அது (படை வழக்கு)

    மன்னனால் படை வழங்கப் பெற்ற மறவர் ‘எமக்கு இன்ன படையை வழங்கினான்’ என எடுத்துப் பேசுவதும் படைவழக்கில் அடங்குவதால் இப்பெயர் பெற்றது.

    • கொளுப் பொருளும் கொளுவும்

    காஞ்சி மன்னன் படைக்கலன்களை வழங்கிய பின்னர், அவற்றைப் பெற்ற வீரக்கழல் கட்டிய காஞ்சி மறவர், தமது மறப்பண்பினை வியந்து உரைத்தலும் மேற்கூறிய படை வழக்கு என்னும் துறையின் பாற்படும்.

    கொடுத்தபின்னர்க் கழல்மறவர்
    எடுத்துரைப்பினும் அத்துறையாகும்

    எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து

    ‘ஒப்பரிய காஞ்சி மறவர்கள் சுற்றிச் சூழ்ந்திருந்த போது, காஞ்சி மன்னன் தனது வாளை என் கையில் தந்தான். மன்னனின் ஆணைக்கீழ் உலகமெல்லாம் அடங்கியுள்ளது முன்னமே தெரிந்ததுதான். மன்னன் விண்ணுலகையும் அடிமை கொள்ள அவாவுகின்றான். வாள் வழங்கப் பெற்ற நான் அதனையும் கிட்டச் செய்வேன்’ என்கின்றான் மறவன் ஒருவன்.

    துறையமைதி

    மண்ணுலகம் முழுமையும் தமது மன்னனின் ஆணைக்குட்படுத்திய வீரர் பலரும் சூழ்ந்திருக்கவும், தன்கை வாளை என்கை தந்த மன்னர்க்கு, விண்ணுலகையும் அடிமைப்படுத்துவேன் என்னும் வீரனின் கூற்றில் ‘படை வழங்கியமை எடுத்துரைத்தல்’ அமைதலால், துறை பொருந்துவதைக் காண்கிறோம்.

    5.2.4 பெருங்காஞ்சி

    பெருமை + காஞ்சி = பெருங்காஞ்சி. பெருமை, ஆற்றலின் மேம்பாடு. மறவர், தமது பெரும் ஆற்றலைப் போர்க் களத்தில் வெளிப்படுத்தல் பற்றிக் கூறுவதால் பெருங்காஞ்சி எனப் பெற்றது.

    • கொளுப் பொருளும் கொளுவும்

    தம்மேல் வரும் பகைப் படையைத் தடுத்துத் தாங்கும் ஆற்றலையுடைய மறவர்கள், தங்கள் போர் ஆற்றலை, வஞ்சியாரின் பெரிய படையை எதிர்த்துத் தாங்கும் செயலால் வெளிப்படுத்துவது பெருங்காஞ்சித் துறையாம்.

    தாங்குதிறல் மறவர் தத்தம் ஆற்றல்
    வீங்குபெரும் படையின் வெளிப்படுத் தன்று.

    எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து

    காஞ்சி மறவரால் எய்யப்பட்ட அம்பு மாரி பாய்ந்து, எதிரில் நின்ற பகை மன்னரின் போர்க் களிறுகள் எல்லாம், தினை (கதிர்) அரியப்பட்டு எஞ்சிக் கிடந்த தாள்களையுடைய மலைபோலத் தோற்றம் அளிக்கின்றன.

    துறையமைதி

    காஞ்சி மறவர் தொடர்ந்து பாய்ச்சிய கணைகள், பகைவரின் வீரத்தையும், யானைகளையும் வீழ்த்தியதைக் கூறுவதால், இத்துறையின் பொருள் பொருந்துவது புலனாகும்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.
    எதை அரசியல் கற்பு என்பர்?
    2.
    காஞ்சித் திணை எதனைக் கூறுகின்றது?
    3.
    தொல்காப்பியம், காஞ்சித் திணையில் நுவலும் பொருள் எதனைப் பற்றியது?
    4.

    காஞ்சித் திணையை வஞ்சித் திணையின் மறுதலையாகக் கருதும் நூல்கள் யாவை?
    5.
    காஞ்சித் திணை எந்த அகத்திணையின் புறன் என்று தொல்காப்பியம் கூறுகின்றது?
    6.
    புறப்பொருள் வெண்பா மாலை வழிக் காஞ்சியின் இலக்கணத்தை எழுதுக.
    7.
    காஞ்சித் திணைக்குரிய துறைகள் எத்தனை?
    8.
    ‘காஞ்சி அதிர்வு’ - இத்துறையை விளக்குக.
    9.
    ‘தழிஞ்சி’த்துறை வேறு எந்தத் திணையில் இடம்பெறுகின்றது?
    10.
    ‘படை வழக்கு’ என்னும் துறையுள் அடங்கும் செய்திகள் யாவை?
புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 13:14:53(இந்திய நேரம்)