தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 6.0 பாட முன்னுரை

    இனிய மாணாக்கர்களே! முந்தைய பாடத்தின் முற்பகுதியில், சீர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பெயர் பெற்ற

    குறளடி
    சிந்தடி
    அளவடி/நேரடி
    நெடிலடி
    கழிநெடிலடி

    என்னும் சீரடிகள் ஐந்தனைப் பற்றியும், நால்வகைப் பாக்களுள் ஒவ்வொன்றுக்கும் உரிய அடிச்சிறுமை, அடிப்பெருமை குறித்த வரையறைகளைப் பற்றியும் படித்தோம். பிற்பகுதியில், செய்யுளில் இடம்பெறும் தொடை என்னும் அழகையும், இடம்பெறும் அத்தொடைகள் எட்டு வகையின என்பதனையும் பார்த்தோம். எண்வகைத் தொடைகளாவன:

    1. மோனைத் தொடை (அடிமோனை)
    2. இயைபுத் தொடை (அடி இயைபு)
    3. எதுகைத் தொடை (அடி எதுகை)
    4. முரண்தொடை (அடி முரண்)
    5. அளபெடைத் தொடை (அடி அளபெடை)

    என்பனவும், செய்யுள் முழுதும் நோக்கிய பார்வையில் பெயர் பெறுவனவாயும், முன்னடியின் இறுதியும் தொடரும் பின்னடியின் ஆதியும் நோக்கிப் பெயர் பெறுவனவாயும், வந்த சொல்லே நான்கு முறையென வந்து அடுக்கு அடி நிரப்புவனவாயும் வருவனவாகிய

    6. அந்தாதித் தொடை
    7. இரட்டைத்தொடை
    8. செந்தொடை

    என்பனவும் கூடிய எட்டாம்.

    இவ்வெட்டனையும், நாம், மொழிக்கூறுகளின் அடிப்படையில்,

    அ. எழுத்து நிலையில் அமையும் தொடை
    ஆ. சொல் நிலையில் அமையும் தொடை
    இ. எழுத்தும் சொல்லும் எனும் நிலையில் அமையும் தொடை
    ஈ சொல்லும் பொருளும் எனும் நிலையில் அமையும் தொடை
    உ. சூன்ய நிலையில் அமையும் தொடை

    என முன்பு ஒரு பயன் கருதிப் பகுத்தோம்.

    அந்தாதித்தொடையில் எழுத்தந்தாதி, அசையந்தாதி, சீர் அந்தாதி, அடியந்தாதி என வகைமை இருந்தாலும் அவற்றைச் செய்யுளின் ஓரடியின் நான்கு சீர்களில் அமையும் வகையந்தாதியாகக் கருதுவதில்லை. காரணம், அந்தாதி என்பது ஓரடியின் அந்தத்திலுள்ள எழுத்து அசைசீர் முதலாயின அடுத்த அடியின் ஆதியாக வருவதால் என்பதாம். அஃதாவது அடியை நோக்கியதாக அந்தாதித் தொடை அமைகின்றது என்பது கருத்து.

    இரட்டைத்தொடை என்பதும் அடியை நோக்கியதுதான். ஓரடியின் நான்கு சீரிலும் வந்த சொல்லே வரவேண்டும் என்பது அதன் இலக்கணம் என்பதால், சீர்நோக்கி இன்மையும், உண்மையும் கண்டு வகைமைப்படுத்தல் இயலாதல்லவா? எனவே, இரட்டைத் தொடையில் வேறுபாடு/விகற்பம் இல்லை என்பது இல்லை என்பது தெளிவு.

    செந்தொடையில் ஒரு தொடைவகையும் அமையவில்லையென்று உறுதி செய்யச் செய்யுள் முழுவதும் காணவேண்டும். யாதொரு தொடையும் அமையப் பெறாத செந்தொடையில் விகற்பம்/வேறுபாடு வருமாறு இல்லை. எனவே, செந்தொடையையும் கொள்ளவில்லை.

    இவை மூன்றும் தவிர்ந்த ஏனைய மோனை முதலாகிய தொடைகள் ஐந்தனில் விகற்பங்கள்/வேறுபாடுகள் உளவாகின்றன. மோனைத் தொடை முதலிய பிறவற்றின் வேறு பெயர்களாகிய அடிமோனை, அடி இயைபு, அடி எதுகை, அடிமுரண், அடி அளபெடை என்னும் பெயர்களை உற்று நோக்குங்கள். ஓர் உண்மை விளங்கும். அது அடிமோனை, அடிஇயைபு என எடுத்து மொழியப் பெறுதலால் சீர்மோனை, சீர் இயைபு என்னும் வகையும் உண்டு என்பதே ஆகும்.

    ஆகவே, நாம் தொடைகளை அடிகளில் வரும் தொடைகள், சீர்களில் வரும் தொடைகள் என வகைப்படுத்தலாம் என்றாகின்றது. அதன்படி, மேலே எண் வகை எனப்பெற்ற தொடைகளை அ. விகற்பமுடைய தொடைகள் ஆ.விகற்பம் இல்லாத தொடைகள் எனப் பகுக்கலாம். இலக்கண விளக்கச் செய்யுளியல் இவ்வகையில் நோக்கியுள்ளது.

    மோனை எதுகை முரண்இயைபு அளபடை
    ஆனஅவ் வைந்தும் ... ...
    ... ... ... ...
    தொடையும் அத்தொடையின் விகற்பமும் ஆகும்
    செந்தொடை இரட்டையோடு அந்தாதி எனவும்
    வந்த/வகையான் வழங்கவும் பெறுமே

    இனி விகற்பமுடைய தொடைகளையும் விகற்பங்களுக்கு யாப்பிலக்கண நூலார் இட்ட பெயர்களையும், மொத்த விகற்பங்கள் எத்தனை என்பதையும் காண்போம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2017 17:54:26(இந்திய நேரம்)