Primary tabs
3.0 பாட முன்னுரை
செய்யுள் வகை நான்கனுள் தொடர்நிலைச் செய்யுள் என்பதும் ஒன்று எனக் கடந்த பாடத்தில் அறிந்தோம். அது, சொல் தொடர்நிலைச் செய்யுள், பொருள் தொடர்நிலைச் செய்யுள் என இருவகைப்படும். பொருள் தொடர்நிலைச் செய்யுள் காப்பியம் எனப்படும். செய்யுளில் கூறப்பெறும் நீண்ட கதை, காப்பியம் என்று கூறப்படும்.
தமிழ் இலக்கிய நெடும்பரப்பில், சங்க இலக்கியங்களை அடுத்துத் தோன்றியன காப்பியங்கள் ஆகும். அன்று தொட்டு இன்று வரை காப்பியங்கள் தோன்றியவாறே உள்ளன.
காப்பியம் என்பதற்கான சொற் பொருள் விளக்கம், காப்பிய வகைகள், காப்பிய அமைப்பு, காப்பியத்தில் இடம்பெற வேண்டிய இன்றியமையாத வருணனைகள், தமிழ்க்காப்பியங்களின் இயல்பு ஆகியன குறித்த கருத்துகளை இந்தப் பாடத்தின்வழி நாம் தெரிந்து கொள்ளலாம்.