Primary tabs
5.6 விரோத அணி
யாப்பு இலக்கணத்தின் செல்வாக்கை அணி இலக்கணத்தில் காணலாம். யாப்பு இலக்கணத்தில் செய்யுள் உறுப்புகளில் ஒன்றாகக் கூறப்படுவது 'தொடை' என்பது. பாடலில் ஓசை நலம் பற்றியது தொடை.. தொடை வகையுள் ஒன்று 'முரண் தொடை' ஆகும் என்பதை யாப்பு இலக்கணத்தில் படித்திருப்பீர்கள். மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். முரண் தொடையே தண்டியலங்காரத்தில் விரோத அணி என்று கூறப்படுகிறது.
5.6.1 விரோத அணியின் இலக்கணம்
மாறுபட்ட சொல்லாலும், பொருளாலும் மாறுபட்ட தன்மை தோன்றக் கூறுவது விரோதம் என்னும் அணி ஆகும்.
மாறுபடு சொல்பொருள் மாறுபாட்டு இயற்கை
விளைவுதர உரைப்பது விரோதம் ஆகும்
(தண்டி, 82). விரோத அணியின் வகைகள்
விரோத அணி சொல் விரோதம், பொருள் விரோதம் என இரு வகைப்படும்.
5.6.2 சொல் விரோதம்
சொற்களை ஒன்றோடு ஒன்று மாறுபடுமாறு அமைத்தல் சொல் விரோதம் எனப்படும்.
எடுத்துக்காட்டு
காலையும் மாலையும் கைகூப்பிக் கால்தொழுதால்
மேலை வினைஎல்லாம் கீழவாம் - கோலக்
கருமான்தோல் வெண்ணீற்றுச் செம்மேனிப் பைந்தார்ப்
பெருமானைச் சிற்றம் பலத்துஇப்பாடலின் பொருள்
அழகு பொருந்திய கரிய யானைத் தோலையும், வெண்மையான திருநீற்றையும், சிவந்த திருமேனியையும், பசுமையான கொன்றை மாலையையும் உடைய பெருமானைச் சிற்றம்பலத்தில் காலையிலும் மாலையிலும் கைகளைக் கூப்பி, அவனது திருவடிகளைத் தொழுதால் நாம் முன் செய்த தீவினைகள் எல்லாம் சிறிது சிறிதாகக் குறைந்து நம்மை விட்டு நீங்கிவிடும்.
. அணிப்பொருத்தம்
இப்பாடலில், காலை -மாலை; கைகூப்புதல் -கால்தொழுதல்; மேல் - கீழ்; கருமை - வெண்மை - செம்மை - பசுமை; பெரு - சிறு எனச் சொற்கள் ஒன்றோடு ஒன்று மாறுபட்டு இருத்தலின் இது சொல் விரோதம் ஆயிற்று.
5.6.3 பொருள் விரோதம்
பொருள்களை ஒன்றோடு ஒன்று மாறுபடுமாறு அமைத்தல் பொருள் விரோதம் எனப்படும்.
எடுத்துக்காட்டு
சோலை பயிலும் குயில்மழலை சோர்ந்துஅடங்க,
ஆலும் மயில்இனங்கள் ஆர்த்துஎழுந்த; - ஞாலம்
குளிர்ந்த; முகில்கறுத்த; கோபம் சிவந்த;
விளர்ந்த, துணைபிரிந்தார் மெய்(மழலை - மழலைச் சொற்கள்; ஆலும் - ஆடும்;
ஞாலம் - உலகம்; முகில் - மேகம்;
கோபம் - இந்திரகோபம் என்னும் ஒருவகைப் பட்டுப்பூச்சி;
விளர்ந்த - வெளுத்த; மெய் - உடம்பு.)இப்பாடலின் பொருள்
சோலைகளில் தங்கிய குயில்களின் மழலைச் சொற்கள் சோர்வுற்று அடங்க, ஆடுகின்ற மயில் கூட்டங்கள் ஆரவாரித்து எழுந்தன; உலகம் குளிர்ந்தது; மேகங்கள் கறுத்தன; இந்திர கோபப் பூச்சிகள் சிவந்தன; தம் துணைவரைப் பிரிந்தவருடைய உடல்கள் வெளுத்தன.
. அணிப்பொருத்தம்
இப்பாடல், கார்கால வருணனை. இதில் முன்னிரண்டு அடிகளில் பொருள் விரோதம் அமைந்துள்ளது. குயில்மழலை சோர்ந்து அடங்கலும், மயில் இனங்கள் ஆர்த்து எழுதலும் ஒன்றற்கு ஒன்று மாறுபட்ட பொருள் ஆதலின் இது பொருள் விரோதம் ஆயிற்று. மேலும் இப்பாடலில் உள்ள பின்னிரண்டு அடிகளில் கறுத்த - சிவந்த - விளர்ந்த (வெளுத்த) எனச் சொற்கள் ஒன்றோடு ஒன்று மாறுபட்டு இருத்தலின் இது, சொல் விரோதமும் ஆயிற்று.