Primary tabs
-
2.0 பாட முன்னுரை
உலகத்தில் தோன்றிய உயிர்கள் யாவுமே பாதுகாப்புடன் இன்பத்தை நாடியே சென்று கொண்டிருக்கின்றன. மக்களைப் பகைவர்களிடமிருந்து காக்க வேண்டிய மன்னன் அதற்காகப் பாதுகாப்புடன் கூடிய கோட்டைகளை வலுவாகக் கட்டிக் கொண்டு தன்னம்பிக்கையுடன் வாழ்ந்தான்.
சிலப்பதிகாரம் - மணிமேகலை தோன்றிய காலத்திலும் இடைக்காலத்திலும், மக்கள் இன்பமுடன் வாழ்ந்தனர் ; பெருஞ்செல்வர்கள் மாடமாளிகைகளில் வாழ்ந்து இன்பங் கண்டனர். வாணிகம் வளர்ந்த பொழுது சுங்கச் சாவடிகள் பூம்புகாரில் ஏற்பட்டன.
வளமுள்ள நிலப்பகுதியில் தான் ஆடலும் பாடலும் நிகழும். சிலப்பதிகாரம் காட்டும் பதினோராடலும் கண்டுகளிக்கத்தக்க ஆடலரங்கும் அமைக்கப்பட்டிருந்தது.
காஞ்சி மாநகரம் தமிழகத்திற்குப் பலவகைகளிலும் பெருமை சேர்க்கக் கூடியது ; எனவே, அதனைப் பற்றி அறிந்து கொள்வதால் தமிழ் நாட்டுப் பண்பாட்டின் சிறப்புத் தெரியலாம்.
முற்காலக் கோட்டைகளும் பிற்காலக் கோட்டைகளும் எப்படி அமைந்திருந்தன என்பதைப் புரிந்து கொள்ளும் வகையில் செய்திகள் முறையாகத் தரப்படுகின்றன. கோட்டைக்குப் பாதுகாப்பு எவ்வாறெல்லாம் அமைந்தாலும், இறையுணர்வும் பாதுகாப்புக்குத் தேவை என்பது ‘கோட்டையும் கோயிலும்’ என்னும் அணுகுமுறையால் தெளிவாக்கப்படுகின்றது.
திருமலைநாயக்கர் மகாலின் சிறப்பு கூறப்படுகிறது. கல்லணையில் அமைந்த பொறியியல் தொழில் நுட்பம் கூறப்படுவதால் பண்டைய தமிழர் பெருமை விளங்கும்.