தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நகரக் கட்டடக் கலை

  • 2.1 நகரக் கட்டடக் கலை

        சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் ; அவை மக்கள் வாழ்மனைகள், மன்னர்களின் தொடர்புடன் கூடிய பல கட்டடங்கள், சமய வழிபாட்டுத் தலங்கள் எனப் பல செய்திகளைக் கூறி உள்ளன. அவற்றுள் சிலவற்றைக் காண்போம். இரட்டைக் காப்பியங்களில் பூம்புகார் மிகச் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளதால் அதனைப் பற்றி முதற்கண் காண்போம்.

    2.1.1 பூம்புகார் - கட்டடக் கலை

        திருமாவளவன் (கரிகாற் பெருவளத்தான்) மருதநிலத்தை உடையவன் எனினும், நெய்தல் நிலப் பகுதியாகிய பூம்புகார் நகரச் சிறப்பில் பெருத்த அக்கறை காட்டியுள்ளான்.

        சிலப்பதிகாரக் காலத்தில் பூம்புகார் நகரம் மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என இரு பெரும்பிரிவுகளாகப் பிரிக்கப்ட்டிருந்தது.

    • மருவூர்ப்பாக்கம்
    •     மருவூர்ப்பாக்கத்தில் கடற்கரையையொட்டிக் கண்ணைக் கவரும் வனப்புடைய யவனர்கள் வாழவும்; மற்றும் வாணிகத்தின் பொருட்டு வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் வாழ்வதற்கும் இருப்பிடங்கள் இருந்தன. வண்ணம், சுண்ணம், சந்தனக் கலவை, பல்வகை மலர்கள் முதலியவை விற்பவர் நடமாடும் நகர வீதிகள் காணப்பட்டன. பட்டு நெசவாளர்கள், பருத்தி நெசவாளர்கள் வாழும் இடங்களும், நவமணிகளும், பொன்னும் பொன்னாபரணங்களும் விற்கும் கடைகளும், தானியங்கள் விற்கும் கடைகளும், வெண்கலக் கன்னார், செம்பு வேலை செய்வோர், தச்சர், கொல்லர், பொற்கொல்லர் ஆகியோர் வாழ்விடங்களும், குழல் யாழ் வாசிக்கும் பாணர்களும் மற்றோரும் வாழ்கின்ற இல்லங்களும் இருந்தன.

    • பட்டினப்பாக்கம்
    •     பட்டினப்பாக்கத்தில் அரச வீதியும், கொடிகளையுடைய தேர் செல்லும் வீதியும், பெரிய தெருவும், வணிகர் தெருவும், மறைகள் ஓதும் அந்தணர் வாழும் வீடுகளும், வளோளர் வீதியும், மருத்துவர், சோதிடர், நின்றேத்தும் சூதர், இருந்தேத்தும் மாகதர், கூத்தர், நாழிகைக்கணக்கர் முதலானோர் வாழும் இடங்களும், யானை தேர் குதிரைகளைச் செலுத்தும் வீரர்களும் காலாட்படை வீரர்களும் சூழ்ந்து வசிக்கும் கட்டடங்களும் அமைந்திருந்தன.

    • நாளங்காடி
    •     இத்தகைய சிறப்புடைய இரு பாக்கங்களுக்கும் இடையே சோலைகளின் மரங்களே கால்களாகக் கட்டப்பட்ட பகற்காலக் கடைத் தெருவாகிய நாளங்காடி காணப்பட்டது.

    • சிலப்பதிகாரக் குறிப்பு
    •     வடநாட்டு மன்னர்கள் வணங்கி வழங்கிய முத்துப்பந்தர், பட்டிமண்டபம், தோரணவாயில் ஆகியவற்றை வைத்திருக்கும் மண்டபமும் பூம்புகாரில் இருந்தது என்ற குறிப்பு சிலப்பதிகாரத்தால் தெரிய வருகிறது ; எனினும், அத்தகைய மண்டபம் எப்படி அமைந்திருந்தது என்பது தெரியவில்லை.

    • பூதச் சதுக்கம்
    •     பூம்புகாரில் பூதச்சதுக்கம் எனும் ஒரு கட்டட அமைப்பு இருந்துள்ளது ; அதனுடன் தொடர்பு கொண்ட சதுக்க பூதமும் தீயோரை ஒறுத்து நல்லோரைக் காக்கும் நோக்கில் செயற்பட்டது.

          பூதச் சதுக்கமே யல்லாமல் வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் நின்ற மன்றம், பாவை மன்றம் ஆகிய மன்றங்களெல்லாம் இயற்கையிகந்த ஆற்றலுடையவையாக (super natural elements / extra - ordinary powerful forces ) மக்களிடையே காணப்பட்டன ; இவையெல்லாம் கட்டடக் கலைநோக்கில் சிந்திக்கத்தக்கவை.

    • ஆடலரங்கம்
    •     இத்தகைய சிறப்புடன் விளங்கிய பூம்புகார் நகரத்தில் மாதவி ஆடிய பதினொரு ஆடல்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் ஆடலரங்கமும் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்தது ; இதன் விவரம் சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையில் காணப்படுகிறது. இவ்வாறான வளர்ச்சிகளுக்கு அடிப்படைக் காரணம் பயிர் விளைச்சலும் வணிகமும் எனக் கூறலாம். பல்வகைப் பண்டங்கள் உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் வந்து துறைமுகப் பகுதியில் குவிந்திருந்தன. பண்டகச் சாலையும் நன்கு கட்டப்பட்டிருந்தது ; சுங்கச் சாவடி வாயிலாகச் சுங்கவரி வசூலிக்கப்பட்டது என்ற குறிப்பும் உள்ளது.

      • பூம்புகார் - கோட்டங்களும் கோயில்களும்

          சங்கம் மருவிய காலத்தில் வழிபாட்டிற்குரிய தெய்வங்கள் பல உண்டாயின ; அவற்றுக்கெல்லாம் சிறு அளவில் கோட்டங்கள் கட்டப்பட்டன. இரட்டைக் காப்பியங்களில் காணலாகும் சில கோட்டங்களையும் கோயில்களையும் காண்போம்.

          தேவர்களுக்குத் தலைவனாக விளங்கிய இந்திரன், முற்காலத்தில் மிகவும் போற்றப்படும் நிலையில் அவனுக்கென இந்திரவிழா தமிழர்களால் எடுக்கப்பட்டதைச் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் விவரிக்கின்றன. இந்திர விழாக்காலத்தில், விண்ணுளோரும் மண்ணுளோரும் வியக்கும்படி இந்திரனுக்குப் புனித நீராட்டினர். வச்சிரக் கோட்டத்தில் மங்கல முரசம் வைத்திருந்த குறிப்பினை,

           வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசம் என இந்திர விழவூரெடுத்த காதையில் (141) வருவதால் அறியலாம். பூம்புகாரில் சிவன், செவ்வேள், பலதேவன், திருமால், இந்திரன் ஆகியவர் கோயில்கள் இருந்ததை அதே காதையில்,

      பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் (சிவன்)
      அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும் (முருகன்)
      வால்வளை மேனி வாலியோன் கோயிலும் (பலராமன்)
      (வால்வளை = வெண்ணிறம்)
      நீலமேனி நெடியோன் கோயிலும் (திருமால்)

      எனவரும் அடிகளால் காணலாம். சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டு்ள்ள சோம குண்டம், சூரிய குண்டம், காமவேள் கோட்டம் முதலியவற்றைக் கட்டடக்கலை நோக்கில் சிந்திக்கலாம். அக்காலத்திலிருந்த கோட்டங்கள் பலவற்றையும் இளங்கோவடிகள்;

      அமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம்
      புகர்வெள்ளை நாகர்தம் கோட்டம் பகல்வாயில்
      உச்சிக்கிழான் கோட்டம் ஊர்க்கோட்டம் வேற்கோட்டம்
      வச்சிரக் கோட்டம் புறம்பணையான் வாழ்கோட்டம்
      நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம் புக்கெங்கும் (9-13)

      எனவரும் அடிகளால் அறியலாம். இவற்றோடு, அருகர் பௌத்தர் பள்ளிகளிலும், அறத்தினைச் செயற்படுத்தும் தருமசாலைகளிலும், மதிற்புறத்தேயுள்ள புண்ணியத் தானங்களிலும், நல்லறம் போதிக்கும் செயல் நடைபெறுவதை இந்திர விழவூரெடுத்த காதையால் அறியலாம்.

          இவ்வாறே மதுரைக் காண்டத்திலும் வஞ்சிக்காண்டத்திலும் கட்டடக்கலைக் குறிப்புகள் நிரம்ப உள்ளன. அவற்றுள் சிறப்பாகச் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குப் ‘பத்தினிக் கோட்டம்’ எடுத்தது நினைவிற் கொள்ளத்தக்கது.

          மணிமேகலைக் காப்பியத்திலும் சிலப்பதிகாரத்திலும் கூறப்பட்ட பளிக்கறை மண்டபம், தாமரைப் பீடிகை, புத்த பீடிகை, சக்கர வாளக்கோட்டம், கந்திற்பாவை, சிறைக்கோட்டம் முதலியவையெல்லாம் கட்டடக் கலைச் செய்திகளேயாகும்.

      • ஆடல் அரங்கங்கள் - கட்டட அமைப்பு

          சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை முதலிய குழு ஆடல்கள் நடைபெற்ற செய்திகள் கிடைக்கின்றன. இவ்வாறான ஆடல்களை மேடையின்றியும் சமமான தரையிலும் ஆடிக் காட்டலாம். ஆனால், மாதவி ஆடிய பதினோராடல்களையும் ஆடிக்காட்டுவதற்கு ஆடுகளம் தேவைப்படும். நாடக அரங்கினைத் திருவள்ளுவர் ‘கூத்தாட்டவை’ எனக்குறிப்பிட்டுள்ளார்.

      ‘ஆடுகளம்’ எனும் சொல்லாட்சியைப் பெரும்பாணாற்றுப்படையில்,

      நாடக மகளிர் ஆடுகளத் தெடுத்த (55)

      எனவரும் அடியால் தெரிந்து கொள்ளலாம்.

          நாடக அரங்கு பற்றி இளங்கோவடிகள், எண்ணப்பட்ட சிற்ப நூலாசிரியர் வகுத்த விதி்யின் படி, குற்றமில்லாத நல்லதோரிடத்திலே நிலம் வகுத்துக் கொண்டு, பொதியில் முதலாகிய மலோன மலைப்பக்க மூங்கிலில் கணுக்களுக்கிடையே ஒரு சாண் அமையுமாறு உள்ள மூங்கிலை (அரங்கம் இயற்றுவதற்கு அளக்குங்கோல் கைப்பெருவிரல் 24 கொண்டதாக) அளவுடன் நறுக்கி, அந்த அளவு கோலால் ஏழுகோல் அகலமும் எட்டுக்கோல் நீளமும் ஒரு கோல் குறட்டுயரமுமாக அமைத்து, தூணின் மீது வைத்த உத்தரப் பலகைக்கும் அரங்கின் தளத்திற்கிட்ட பலகைக்குமிடையே நான்கு கோல் அளவினதாகவும் அரங்கு அமையும். அரங்கத்திலே நால்வகை வருண பூதரையும் ஓவியத்தில் எழுதி மேற்பக்கம் வைக்கப்படும். தூண்களின் நிழல் நாயகப்பத்தியின் கண்ணும் அவையோரிடத்தும் படாதபடி மிக உயர்ந்த நிலை விளக்கை நிறுத்தி வைப்பர். இடப்பக்கத் தூணிடம் உருவு திரையாக ஒரு முக எழினியும் (ஒருபக்கத்திலிருந்து இழுக்கப்படும் திரை), பொருமுக எழினியும், (இருபக்கத்திலிருந்தும் இழுக்கப்படும் திரை) கரந்து வரலெழினியும் (மறைவாக இருந்து வெளிப்படும் திரை) சித்திர விதானம் முதலிய அலங்கரித்தலும் செய்தனர் (95-113) என்பதைப் பாடியுள்ளார்.

      2.1.2 காஞ்சிபுரத்தில் கட்டிடக் கலை

          காஞ்சிபுரம் சங்க காலத்திலும், சங்கம் மருவிய காலத்திலும், பல்லவர் காலத்திலுமாகப் பல காலகட்டங்களில் படிப்படியே வளர்ச்சி பெற்ற மிகச் சிறந்த நகராகும்.

          சீத்தலைச் சாத்தனார் எழுதிய மணிமேகலைக் காப்பியமும் காஞ்சிபுரத்தைச் சிறப்பாக குறிப்பிடுகிறது. துறவறம் பூண்ட மணிமேகலை காஞ்சிபுரத்திற்கு வந்து தருமதவனம் என்ற இடத்தில் தங்கியிருக்கையில், மணிமேகலா தெய்வம் அவளை அன்புடன் அழைத்துச் சென்று, தான் அமைத்திருந்த மணிபல்லவப் பொழிலையும் கோமுகிப் பொய்கையையும் கண்டு மகிழுமாறு செய்தது.

          காஞ்சி மாநகர் பௌத்தர்களுக்கேயன்றிச் சமணக் கோட்பாடு உடையவர்களுக்கும் இடந்தந்த சிறப்பினையுடையது. சைவமும் வைணவமும் சாக்கதமும் (காமாட்சியம்மன் கோயிலும்) கௌமாரமும் (குமர கோட்டமும்) பௌத்தமும் சமணமும் தத்தம் கொள்கைகளைப் பரப்புவதற்கு வாய்ப்பளித்த இடமாக விளங்கியது. தமிழ்நாட்டிலேயே கல்வியும் சமயஞானமும் போதிக்கும் கடிகை (பல்கலைக் கழகம் போன்ற நிறுவனம்) இங்கிருந்து செயற்பட்டது என வரலாற்றால் தெரிய வருவதால், இவற்றுக்கெல்லாம் இடங்கொடுக்கும் பலவகைக் கட்டடங்கள் தோன்றியதில் வியப்பில்லை.

          மேலும், காஞ்சியைச் சுற்றிலும் பல கோட்டைகள் இருந்ததால் காஞ்சி உள்ளிட்ட தொண்டை நாட்டின் ஒரு பகுதியை ‘எயிற் கோட்டம்’ என்றும், காஞ்சியை ‘எயிற்பதி’ என்றும் அழைத்தனர்.

      2.1.3 மதுரையில் கட்டிடக் கலை

          சிலப்பதிகாரத்து ஊர் காண்காதையில், கட்டடக் கலைக்குரிய செய்திகள் பல உள்ளன. கவுந்தியடிகளிடம் விடைபெற்றுக் கொண்டு, மதுரையைச் சுற்றிப் பார்க்கச் செல்லுகின்றான் கோவலன். அவன் கண்டு மகிழ்ந்ததாக கட்டடங்கள் பல கூறப்படுகின்றன. அவற்றுள், சிவன் கோயிலும் திருமால் கோயிலும் பலராமன் கோயிலும் முருகன் கோயிலும் அறநெறிக்கண் நிற்கும் முனிவர் பள்ளியும், பாண்டியன் அரண்மனையும் இடம் பெறுகின்றன.

          மேலும், மதுரையில் செழுங்குடிச் செல்வரும் மன்னரும் விரும்பும் வீதியும், பரத்தையரின் இருபெரும் வீதியும் செல்வம் குவிந்துள்ள அங்காடி வீதியும் இரத்தினக் கடை வீதியும் தானியம் விற்கும் கூல வீதியும் நால்வேறு தெருவும் சதுக்கமும் சந்தியும் மன்றமும் பலபிரிவுகளையுடைய தெருக்களும் திரித்து கோவலன் புறஞ்சேரிக்குத் திரும்பினான். இவ்வாறு கூறுமிடத்து பல்வகைக் கட்டடங்கள் மதுரையை அணி செய்தன என்பது புலனாகும்.

      தன் மதிப்பீடு : வினாக்கள் - I
      1.
      ‘ஜலதுர்க்கம்’ என்றால் என்ன?
      2.

      பூம்புகார் நகரம் எந்தப் பெயர்களில் இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது?
      3.
      பிறவாயாக்கைப் பெரியோன் யார்?
      4.
      வச்சிரக்கோட்டம் எந்தத் தெய்வத்திற்குரியது?
      5.
      பூம்புகாரிலுள்ள ஐவகை மன்றங்கள் யாவை?
      6.
      நீலமேனி நெடியோன் யார்?
      7.
      திருவெஃகா என்றால் என்ன?
      8.
      கோமுகிப் பொய்கை எங்கு உள்ளது?
புதுப்பிக்கபட்ட நாள் : 05-08-2018 16:17:50(இந்திய நேரம்)