Primary tabs
-
4.7 தொகுப்புரை
கருநாடக இசை முறையில் தமிழ்க் கீர்த்தனைகள் பாடிய முத்துத்தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்தாபிள்ளை ஆகிய மூவரும் "ஆதி மும்மூர்த்திகள்" என்று அழைக்கப்படுவர். இம் மூவரில் காலத்தால் மூத்தவர் முத்துத்தாண்டவர். மற்றைய இருவரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள். இவர்கள் மூவரும் இயல், இசைப் புலமையோடு இறை உணர்வு மிக்கோராய் விளங்கினர். முத்துத்தாண்டவர் கீர்த்தனைகளில் ‘தாண்டவக் கீர்த்தனைகள்’ தனிச் சிறப்பு வாய்ந்தவை. நல்ல கருத்துள்ள ஒரு கதையை இசைப்பாடல்களால் இனிமையாகச் சொல்ல முடியும் என்பதைக் கீர்த்தனைகளால் முதல் முதலில் இசை நாடகம் அமைத்துக் காட்டினார் அருணாசலக் கவிராயர். இறைவனை நேரடியாகப் புகழ்வதை விட இகழ்வது போல் புகழ்வதில் சுவை உண்டு என்பதை மாரிமுத்தாபிள்ளை தமது நிந்தாதுதிக் கீர்த்தனைகளில் காட்டினார்.
கருநாடக இசையின் வளமைக்குத் தமிழ்க் கீர்த்தனையாளர் மூவரும் தனித் தனிப் பங்காற்றியுள்ளனர். ஏறக்குறைய இருநூறு முந்நூறு ஆண்டுகள் கழிந்தும் இவர்களது சில கீர்த்தனைகள் இன்றும் பாடப்பட்டு வருகின்றன. அவை பக்திச்சுவை தரும் இராகங்களில் அமைந்திருக்கின்றன.
கோபாலகிருஷ்ண பாரதியார் பக்திச் சுவை மிகுந்த கீர்த்தனைகள் பாடினார். சிவத்தொண்டர்களின் கதைகளைக் கீர்த்தனைகளாகப் பாடினார். மக்களுக்கு இசை வழியால் இறை உணர்வை ஊட்டினார். இவரைப் பிற்காலக் கீர்த்தனையாளர்களில் ஓர் இசை மேதை எனத் தனித்து இனங்காணலாம்.