தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சங்க இலக்கியத்தின் யாப்பு

  • 1.5 சங்க இலக்கியத்தின் யாப்பு

    சங்க இலக்கியப் பாடல்கள் தனிப்பாடல்களாக அமைந்துள்ளவை இவற்றைத் தன்னுணர்ச்சிப் பாடல்கள் என்று கூறுவர். எட்டுத் தொகை பத்துப்பாட்டு என்று அழைக்கப்படும் இப்பதினெண்மேற் கணக்கு நூல்களும் மூவகைப் பா வகைகளில் அமைந்துள்ளன. அகவற்பா, வஞ்சிப்பா, கலிப்பா என்னும் பாவகைகளில், பெரும்பாலான சங்கப்பாடல்கள் ஆசிரியப்பா வடிவிலேயே பாடப்பட்டுள்ளன.

    ஆசிரியப்பா என்றாலும் அகவற்பா என்றாலும் ஒன்றே ஆகும். இப்பாட்டு வகை இசையுடன் பாடவும் ஏற்ற வகையாகும். ஆசிரியர்கள் மிகச் சிறப்பாக எடுத்துச் சொல்லும் சிறப்புப் பெற்றதால் இது ஆசிரியப்பா ஆயிற்று எனவும் கூறுவர்.

    ஆசிரியப்பாவை அடுத்து வஞ்சிப்பா இசையோடு பாடுவதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. பட்டினப்பாலை ஆசிரியப்பாவும் வஞ்சிப்பாவும் இணைந்து பாடப்பெற்ற பாடலாகும். 301 அடிகளை உடைய இப்பாவில் 163 அடிகள் வஞ்சிப்பா அடிகளாகவும் 138 அடிகள் ஆசிரியப்பா அடிகளாகவும் உள்ளன. புறநானூற்றில் 2 ஆம் பாடலில் உள்ள

    மண்டிணிந்த நிலனும்
    நிலனேந்திய விசும்பும்
    விசும்பு தைவரு வளியும்
    வளித் தலைஇய தீயும்
    தீ முரணிய நீரும். . .

    என்னும் அடிகள் வஞ்சிப்பா வகையைச் சார்ந்தவை.

    கலிப்பாவில் அமைந்த சங்க இலக்கியம் கலித்தொகையாகும். கலித்தொகையில் உள்ள 150 பாடல்களும் கலிப்பாவாலேயே ஆகியவை. நாடக முறையில் அகப்பொருளைப் பாடுவதற்கு இப்பாடல் வகை பயன்பட்டது.

    எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான பரிபாடல் வெண்பா யாப்பிலும், ஆசிரியப்பா யாப்பிலும் அமைந்துள்ளது. சங்க இலக்கியத்தில் வெண்பா தனிச் சிறப்புப் பெற்ற யாப்பாக விளங்கவில்லை. சங்க காலத்திற்குப் பிறகே வெண்பா யாப்பில் பாடும்பாடல்கள் நிறையப் பாடப்பட்டன.

புதுப்பிக்கபட்ட நாள் : 22-08-2018 16:13:52(இந்திய நேரம்)