Primary tabs
-
4.3 உரைநடையின் பண்புகள்
உரைநடையின் பண்புகளாக வழுவின்மை, சுருங்கக் கூறல், விளங்க வைத்தல், இனிமை தருதல், பயன் தருதல் முதலியனவற்றைப் பரிமேலழகர் குறிப்பிடுவார். திருமணம் செல்வக்கேசவராய முதலியார் பொருட்சுவை, சொற்சுவை என்னும் இரண்டும் இயைந்து நடத்தலே உரைநடையின் பண்பாகக் கொள்வார்.
ஒழுங்கு, ஓர் உருப்படுத்துதல், நுட்பம், சமநிலை என இவையே உரைநடையின் பண்புகள் என்பார் மாத்யூ ஆர்னால்டு.
மேலை நாட்டு அறிஞர் சாப்மென் நுட்பம், எளிமை, நயம் என மூன்றும் உரைநடையின் இயல்புகள் என்பார்.
ஜோசப் சுந்தரராசு அவர்கள் ‘கருத்து, தெளிவு, சந்தம், உணர்ச்சி’ ஆகிய நான்கும் உரைநடையின் இன்றியமையாப் பண்புகள் எனக் கூறுவார். வ.சு.செங்கல்வராய பிள்ளை, மா.இராமலிங்கம் முதலியோரும் உரைநடைக்குத் தேவையான பண்புகளைக் கூறியுள்ளனர்.
உரைநடையின் ஒரு கூறாக நடை பற்றி நடையியல் என்ற நூலை ஜெ.நீதிவாணன் எழுதியுள்ளார். அதில் உரைநடை வகை பற்றிக் கூறும் போது, ‘பொதுவாக எளிய நடை, இனிமையான நடை, அருமையான நடை, மனதைக் கவரும் நடை, கடுமையான நடை, விளக்க நடை, வருணனை நடை’ எனப் பலவித நடைகள் உள்ளதாகக் கூறுவார். பொதுவாக உரைநடையின் வகைகளை ஆறு பிரிவுகளாகக் கூறுவதுண்டு. அவை பின்வருமாறு அமையும்.
விளக்க உரைநடை
ஏதாவது ஒரு பொருளையோ, கருத்தையோ விளக்கிக் காட்டுவது போல் எழுதப்படும் அனைத்துமே விளக்க உரைநடைகள்தாம். பள்ளிக்கூட, கல்லூரிப் பாடப் புத்தகங்கள், அறிவியல் நூல்கள், கலைக்களஞ்சியங்கள், பல்வேறு தொழில்களைப் பற்றியும் கலைகளைப் பற்றியும் எழுதப்படும் விவர விளக்கங்கள் முதலியன இவ்வகையில் அடங்கும். மனிதனின் தேடுதலான அறிவுப் பசிக்கு விருந்தாக அமைவது இவ்வகை உரைநடையே ஆகும்.
அளவை உரைநடை
விவாதிக்கும் போக்கில் அமைவது அளவை உரைநடையாகும். ஓர் உட்கோளைப் படிப்போர் இணங்கி ஏற்றுக் கொள்ளும் வகையில் அமையும். நல்ல முறையில் எழுதப்பட்ட அளவை உரைநடை அறிவைத் தூண்டுவதோடு அமையாமல் உணர்ச்சிக்கும் விருந்து தரும். மேலும், படிக்கும் வாசகனைப் பிரச்சினைகளை நுணுக்கமாய்ப் புரிந்து கொள்ளும் வகையில் சிந்திக்கத் தூண்டும்.
எடுத்துரை உரைநடை
கதை கூறும் எல்லா நூல்களும் எடுத்துரை உரைநடையே ஆகும். வேறு எந்த வகையான உரைநடையையும் விட மக்கள் இதையே விரும்பிப் படிக்கின்றனர். வெறும் நிகழ்ச்சிகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிக் காட்டி அச்சத்தையும், புதிரையும் தரும் துப்பறியும் கதை முதல் சிறந்த இலக்கியத் தன்மையுடைய கதை வரை எல்லாமே எடுத்துரை உரைநடையிலேயே அமையும்.
வருணனை உரைநடை
புலன்உணர்வு மூலம் ஏற்படும் அனுபவங்களை வருணித்துக் காட்டும் உரைநடையை வருணனை உரைநடை என்பர். மனிதர்களையும், பொருள்களையும் இது வருணிக்கும். படிப்போரின் உணர்வுகளைத் தட்டி எழுப்பும் ஆற்றல் இதற்கு உண்டு.
நாடக உரைநடை
நாடகத்தில் இடம்பெறும் பாத்திரங்களின் உரையாடல்கள், இடையிடையே நாடக ஆசிரியர் தரும் மேடை விளக்கக் குறிப்புகள் ஆகியவற்றை நாடக உரையாடல் எனலாம். நாடக உரைநடை பேச்சு வழக்கை ஒட்டியே அமையும்.
சிந்தனை உரைநடை
எழுதும் எழுத்தாளனின் சொந்த ஆளுமை வெளிப்படும் படியாக எழுதப்படுவது சிந்தனை உரைநடையாகும். தன்னுணர்ச்சிப் பாங்கான கட்டுரைகள், ஆன்மிக அனுபவங்களை உணர்த்தும் கட்டுரைகள் முதலியன இவ்வகையில் அடங்கும்.
உரைநடை ஒரே தன்மையில் அமைவது இல்லை. ஆசிரியர், காலம், நோக்கம், கருத்து, இடம், மக்கள் முதலியவற்றால் அதன் நடையின் தன்மை வேறுபடுகின்றது என்பர் அறிஞர்.
மறைமலையடிகள் நடைக்கும், எழுத்தாளர் சுஜாதா நடைக்கும் வேறுபாடுகள் நிறைய உண்டு. இது ஆசிரியர்களால் ஏற்படும் உரைநடை வேறுபாடு.
வைணவ உரைக்கும், இன்றைய உரைநடைக்கும் வேறுபாடுகள் உண்டு. இது காலத்தால் உண்டானது.
தூய தமிழில் எழுத வேண்டும் என எழுதிய மறைமலையடிகளார் நடைக்கும், ஆங்கிலம் கலந்து எழுதும் இன்றைய நடைக்கும் நோக்கங்கள் அடிப்படையில் வேறுபாடு காணலாம்.
பைபிள் மொழி நடைக்கும், பாரதி உரைநடைக்கும் கருத்தைக் கூறும் முறையில் வேறுபாடுகள் ஏற்படுகின்றன.
கி.ராஜநாராயணனின் கரிசல் வட்டார உரைநடைக்கும், ஜெயகாந்தனின் சென்னை வட்டார உரைநடைக்கும் இடத்தின் அடிப்படையில் வேறுபாடுகள் காணலாம்.
தினத்தந்தியின் எளிய நடைக்கும், தினமணியின் செறிவான நடைக்கும், படிக்கும் வாசகர்களைக் கொண்டே வேறுபாடுகள் காணப்படுகின்றன.
உரைநடை - வேறுபாட்டின் காரணங்கள்
உரைநடை வேறுபாடுகளைக் கண்டோம். அந்த வேறுபாடுகளுக்கும் காரணங்கள் உண்டு. உரைநடையில் அமையும் நடை எந்தெந்தக் காரணங்களால் வேறுபடுகின்றன என்பதை வையாபுரிப் பிள்ளை அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
வாசகர்களுக்குத் தக்கபடி நடைவேறுபடுகிறது.
சொல்லக்கூடிய விஷயங்களுக்குத் தக்கபடியும் நடை வேறுபடும்.
சொல்லும் நோக்கத்துக்குத் தக்கபடியும் நடை மாறுபடும்.
தன் சொல்வன்மையால் வாசிப்போரை வசீகரித்து அவர்களை ஊக்கப்படுத்துவதற்கு முயலும்போதும் நடை வேறுபடும்.
எதையேனும் ஒன்றை விளங்கச் செய்யும் போதும், சொல்லும் முறைக்கு ஏற்றபடியும் நடை வேறுபடும்.
உரையாடல் வடிவத்தில் எழுதும் நடையும் வேறுபடும்.
கடித வடிவத்தில் எழுதும் நடையும் மாறுபடும்.
ஆசிரியர்களுடைய மனநிலைக்கு ஏற்றபடியும் நடை வேறுபடுவதுண்டு.