Primary tabs
-
4.6 தொகுப்புரை
மொழி வளம் பெற்றபோது கவிதை பிறந்தது. கவிதையிலிருந்து உரைநடை தோன்றியது. உலகெங்கும் கவிதையைச் சார்ந்தே உரைநடை வளர்ச்சி பெற்றது.
உரைநடை மெல்ல, மெல்லச் செய்யுளிலிருந்து வேறுபட்டு மாற்றங்கள் பெற்றது. உரை நூல்கள் தோன்றின. செய்யுளை விளக்க உரைகள் எழுதப்பட்டன. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்கள் காப்பியங்களில் பயன்படுத்தப்பட்டன.
உரைநடை பலவகைகளைக் கொண்டதாக அமைந்தது. தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்றன உரைநடை பற்றிய குறிப்புக்களையும், உரைநடை வரிகளையும் தந்தன.
இறையனார் களவியல் உரை, பாரத வெண்பா போன்றன தெளிவான ‘உரைநடை’யை அறிமுகப்படுத்தின. கல்வெட்டுகள் பெரும்பாலும் உரைநடையிலேயே பொறிக்கப்பட்டன. மணிப்பிரவாள நடை பிறமொழிக் கலப்பால் உருவானது.
உரையாசிரியர்கள் காலம் ‘உரைநடை’க்குப் புதிய எழுச்சியைத் தந்தது.
உரைநடையின் முக்கியத்துவம் இக்காலத்தில் உணரப்பட்டது. உரைநடை, ‘இலக்கியம்’ என்ற தன்மையை இக்காலத்தில்தான் பெற்றது.
மேலைநாட்டார் வரவு உரைநடையின் திசையை மாற்றியது. ‘எளிய தமிழ் உரைநடை’ என எல்லா மக்களும் படிக்கும்படி ஆனது. ஆங்கிலக் கல்வி, அச்சு இயந்திர வருகை ஆகியன உரைநடையைப் பொதுமக்கள் சொத்தாக மாற்றியது.
பேச்சு உரைநடை, எழுத்து நடை எனப் பிரிந்து நிற்கும் தமிழில் இன்று, ஊடகங்கள் பேச்சு உரைநடையையே முன் நிறுத்துவதைக் காணலாம்.