தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 6.3-பொருந்துபவை

  • 6.3 பொருந்துபவை


        வள்ளுவரின் கருத்துகள் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதற்குக்
    காரணம், அவை இன்றுள்ள நடைமுறை வாழ்வோடு பொருந்தும்
    தன்மை உடையனவாகத் திகழ்கின்றன. தனிமனித வாழ்க்கையிலும்,
    சமுதாயமாகக் கூடிவாழும் நிலையிலும் மக்கள் பின்பற்ற வேண்டிய
    அல்லது நடைமுறைப்படுத்த வேண்டிய கூறுகள் பல இருக்கின்றன.
    அவை உலகிலுள்ள அனைவருக்கும் பொருந்தும் தன்மை உடையன
    என்று சொல்ல இயலாது. அவை, எல்லாக் காலத்திற்கும் பொருந்தும்
    தன்மை உடையன என்றும் சொல்ல இயலாது. அவை, மனிதருக்கு
    மனிதர், நாட்டிற்கு நாடு, காலத்திற்குக் காலம் வேறுபடும் தன்மை
    உடையன. எல்லோருக்கும் எல்லாக் காலத்திற்கும் பொருந்தும்
    வகையில் தொடர்புடைய வகையில் அமைவது மிகவும் அரிது.
    ஆனால்,     இன்றைக்கும்     தொடர்புடையனவாக,
    பொருந்துகின்றனவாகவுள்ள பலகருத்துகளை வழங்கியுள்ளார்
    வள்ளுவர்.

    6.3.1 அறிவு (wisdom)


        பட்டறிவு (experience), சிந்தனை போன்றவற்றின் வாயிலாக,
    அறிந்து வைத்திருப்பதை அறிவு என்பர். அத்தகைய அறிவு வளர
    வளரத் தனிமனிதன் உயர்வடைகிறான்; அவன் சார்ந்த சமுதாயமும்
    அவனால் பயன்பெற்று வளர்கிறது. அறிவாளிகளின் பணிகளால்
    உலகம் முன்னேறுகிறது. இன்றைக்கு உலகில் காணப்படும் பல்வேறு
    வகையான வளர்ச்சிக்கும், அறிவியல் சாதனைகளுக்கும் அடிப்படைக்
    காரணம் அறிவாளிகளே. சாதனை பல புரிந்த இந்த அறிவாளிகள்
    எவ்வாறு அறிவு பெற்றார்கள்? தாம்பெற்ற அறிவின் வாயிலான
    சாதனைகளை எவ்வாறு படைத்தனர்? யார் எதைச் சொன்னாலும்,
    எந்தப் பொருள் எவ்வாறு இருந்தாலும் அதன் உண்மைத் தன்மை
    என்ன என்பதனை நன்கு ஆய்வு செய்து அறிந்த பின்னரே ஒரு
    முடிவுக்கு அல்லது தீர்மானத்திற்கு வந்தனர் - வருகின்றனர்.
    அறிவியல் கண்டு பிடிப்புகளுக்கும், நடுநிலையான தீர்ப்புகளுக்கும்
    (Judgements) சமூகம் அல்லது அரசியல் தொடர்பான பல நல்ல
    முடிவுகளுக்கும், அறிவியலாளர்களும் சான்றோர்களும் உண்மையை
    அறிவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சியே காரணமாகும். இதனையே
    வள்ளுவர்,

    எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்

    மெய்ப்பொருள் காண்பது அறிவு

    (குறள்: 423)


    (எப்பொருள் = எந்தப்பொருள், வாய் = வழி,
    மெய்ப்பொருள்
    = உண்மையானபொருள்)

    என்று குறிப்பிடுகிறார்.

    எப்பொருளை, யார் யாரிடம் கேட்டாலும், கேட்டவாறே
    கொள்ளாமல், அப்பொருளின் உண்மையான பொருளைக் காண்பதே
    அறிவு எனப்படும்.

        அறிவியல் கண்டு பிடிப்புகளில் கூட முதல்நிலையில் பல்வேறு
    வகையான யூகங்கள் தோன்றுகின்றன. பின்னர் பல்வேறு வகையான
    சோதனைகளுக்குப் பின்னரே உண்மையைக் கண்டுபிடிக்கின்றனர்.
    இந்த அறிவியல் அடிப்படையை - உண்மையைத் தான் வள்ளுவர்
    மேற்குறிப்பிட்ட குறளில் குறிப்பிடுகிறார்.

        இந்தக்குறள் இன்றைக்குள்ள அறிவியல் அணுகுமுறைக்கும் ஓர்
    இலக்கணம் போல் அமைந்துள்ளது என்கிறார் அறிவியலறிஞர்,
    வா.செ.குழந்தைசாமி அவர்கள்.

    6.3.2 தகுதி


        ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் பொழுது அல்லது ஒரு பணியை
    ஒருவரிடம் ஒப்படைக்கும் பொழுது, அவரது தகுதிகள், பின்புலம்,
    அறிவாற்றல், ஆளுமை, பண்புகள் போன்ற பல்வேறு வகையான
    கூறுகளை மனத்தில் கொள்கின்றனர். எந்த ஒரு பணியாக
    இருந்தாலும் இந்தப் பணிக்கு இவன் தகுந்தவன்தானா என்பதை
    மேற்குறிப்பிட்டவற்றின் அடிப்படையில் பல்வேறு வகையான
    சோதனைகளின் வாயிலாகவே முடிவு செய்கின்றனர். இது இன்றைய
    நடைமுறையில் இருக்கின்ற ஒன்று. இந்த நடைமுறை உண்மையை
    வள்ளுவர்,


    இதனை இதனால் இவன்முடிக்கும் என்று ஆய்ந்து
    அதனை அவன்கண் விடல்



    (குறள்: 517)


    (முடிக்கும் - செய்துமுடிப்பான், கண் - இடம், விடல் - ஒப்படைக்க
    வேண்டும்)

    என்று குறிப்பிடுகிறார்.

        இந்தத் தொழிலை அல்லது செயலை இந்தக் கருவியினால், இந்த
    ஆற்றலுள்ள இவன் செய்து முடிப்பான் என்று நன்கு ஆராய்ந்து
    அறிந்த பின்னர், அவனிடம் அந்தத் தொழிலை ஒப்படைக்க
    வேண்டும் என்பது இந்தக் குறள் தரும் பொருள்.

    • முடியாட்சி மரபும் வள்ளுவரும்

        முடியாட்சிக் காலத்தில் வாழ்ந்தவர் வள்ளுவர். முடியாட்சிக்
    காலத்தில் பல தொழில்கள், பணிகள் பரம்பரையாகத் தந்தைக்குப்
    பின் தனயனுக்கு என்ற நிலையில்தான் ஒப்படைக்கப்பட்டன.
    எனவே, அரசர்களிடையே, ஆற்றல் வாய்ந்தவர் காலத்தில்
    நல்லாட்சியும், வெற்றிகளும் கிட்டின. ஆற்றல் இல்லாதவர்
    காலத்தில், ஆட்சி நலிவுற்றதோடு, ஆட்சியும் பிறரால்
    பறிக்கப்பட்ட வரலாறுகள் பல உண்டு. ஆனால் முடியாட்சியில்
    வாழ்ந்த வள்ளுவர், மரபுவழி பாரம்பரியத்திற்கு அப்பாற்பட்ட
    நிலையில், இன்றைய நடைமுறைக்கும் பொருந்துகின்ற வகையில்,
    தகுதி படைத்தோரிடமே ஒரு தொழிலை அல்லது பணியை
    ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இரண்டாயிரம்
    ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த நூற்றாண்டிலும் பொருந்துகின்ற
    ஒரு நடைமுறை உண்மையை வள்ளுவர் கூறியுள்ளார். இன்று,
    ஒருவனின் கல்வித் தகுதிக்கும், பட்டறிவுக்கும் ஏற்பப் பணிகள்
    ஒப்படைக்கப்படுகின்றன. இன்ன இன்ன தகுதிகள்; இவனிடம்
    இருப்பதால், இந்தப்பணியை இவனிடம் ஒப்படைக்கலாம் என்று
    தகுதிக்குச் சிறப்பு கொடுத்து 2000 ஆண்டுகளுக்கு முன்னரே
    வள்ளுவர் கூறியிருப்பது ஒரு பெரும் சிறப்பு அல்லவா?

    6.3.3 முயற்சி


        ஒன்றிற்காக மேற்கொள்ளும் உழைப்பும், செயல்பாடும் முயற்சி
    எனப்படும். ‘முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்‘ என்பது
    தமிழிலுள்ள ஒரு பழமொழி. தான் மேற்கொண்ட செயலில்
    முயற்சியுடையார், எந்தச் சூழலிலும் தோல்வியும் அவமானமும்
    பெறமாட்டார்கள் என்பது இதன் பொருள். எனவே, எந்த ஒரு
    செயலிலும், பணியிலும் முயற்சியுடன் இருக்கவேண்டும். அதுதான்
    ஒருவன் வாழ்க்கையில் முன்னேறுவதற்கும், வெற்றிபெறுவதற்கும்
    அடிப்படை என்பதைத் தமிழ்ச்சான்றோர்கள் உணர்ந்திருந்தனர்.

    • முன்னேறிய நாடுகளும் முயற்சியும்

        சப்பான், இங்கிலாந்து, செர்மன், பிரஞ்சு, அமெரிக்கா, கானடா
    முதலிய நாடுகள், உலகிலுள்ள முன்னேறிய நாடுகளாகக்
    கருதப்படுகின்றன. எதன் அடிப்படையில் இவை, முன்னேறிய
    நாடுகளாகக் கூறப்படுகின்றன? பொருளாதார வளர்ச்சியின்
    அடிப்படையில் இவை முன்னேறிய நாடுகளாகக் கருதப்படுகின்றன.
    பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு அடைந்தார்கள்? தங்களது
    இடைவிடாத முயற்சியின் வாயிலாகப் பெற்றனர்.

    • அறிவியலும் முயற்சியும்

        அறிவியலிலும், அளவிடற்கு அரிய பல சாதனைகள் நிகழ்ந்துள்ளன.
    இதற்குரிய காரணம் என்ன? அறிவியலாளரின் இடைவிடாத முயற்சி,
    உண்மையைத் தேடிக் கண்டு பிடிப்பதற்கு - புதிதாக ஒன்றை
    உருவாக்குவதற்கு அவர்கள் மேற்கொண்ட முயற்சி. எனவே,
    உலகிலுள்ள எல்லா முன்னேற்றங்களுக்கும், அறிவு வளர்ச்சிக்கும்,
    அறிவியல் சாதனைகளுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளது
    முயற்சி என்பது புலப்படும். இந்த நடைமுறை உண்மையை நன்கு
    அறிந்தவர் வள்ளுவர். எனவே,


    முயற்சி திருவினை ஆக்கும் முயற்று இன்மை
    இன்மை புகுத்திவிடும்



    (குறள்: 616)


    (திரு = செல்வம், ஆக்கும் = உண்டாக்கும், முயற்று = முயற்சி,
    இன்மை
    = இல்லாமை/வறுமை, புகுத்திவிடும் = சேர்த்துவிடும்)

    என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர். முயற்சி உடைமை, செல்வத்தை
    உருவாக்கும். அம்முயற்சி இல்லாமை ஒருவனை வறுமைக்குள்
    செலுத்தி விடும்.

        இந்தக் குறளின் இறுதியில் ‘புகுத்திவிடும்‘ என்று குறிப்பிடுகிறார்
    வள்ளுவர். கட்டாயமாக ஒன்றைத் திணித்தலையே ‘புகுத்துதல்‘
    என்று குறிப்பிடுவோம். முயற்சி இல்லாமல் சோம்பி இருந்தால்,
    செல்வம் கிட்டாது; செல்வம் கிட்டாவிட்டால் வறுமை வருவதைத்
    தவிர வேறு வழியில்லை. எனவே, உறுதியாக உனக்கு வறுமை
    வந்துவிடும் என்பதை உணர்த்தவே ‘புகுத்திவிடும்‘ என்ற சொல்லை
    வள்ளுவர் பயன்படுத்தியுள்ளார். தேர்ந்தெடுத்த சொற்களையே
    வள்ளுவர் கையாள்வார் என்பதற்கு இது ஒரு சிறந்த
    எடுத்துக்காட்டு. முயற்சியின் பயனை நுகரும் ஒவ்வொரு கணமும்,
    வள்ளுவர் கருத்து வாழ்வதை - கருத்தினால் வள்ளுவர் வாழ்ந்து
    கொண்டிருப்பதை - நம்மால் உணரமுடியும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:58:40(இந்திய நேரம்)