தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மனித வடிவ ஓவியங்கள்

  • 1.3 மனித வடிவ ஓவியங்கள்

    மனித வடிவ ஓவியங்களை நோக்கும் போது அவை விலங்கு
    மற்றும் பறவை முகம் கொண்ட மனித உருவங்கள், விலங்குகளை
    வேட்டையாடும் மனித உருவங்கள் எனப் பல நிலைகளில்
    வரையப்பட்டுள்ளன. இத்தகு ஓவியங்கள் தமிழகத்தில் பரவலாகக்
    கிடைத்துள்ளன.

    1.3.1 விலங்கு முக மனித ஓவியம்

    கீழ்வாலை என்னும் இடத்தில் (தென்னார்க்காடு மாவட்டம்)
    விலங்கு முக மனித ஓவியங்கள் கிடைத்துள்ளன. ஓர் ஓவியத்தில்
    குதிரையின் மீது ஒரு மனிதன் அமர்ந்திருக்க, அக்குதிரையின்
    கடிவாளத்தைப் பிடித்து ஒருவர் அழைத்துச் செல்வது போல
    அமைந்துள்ளது. இதனருகே     மற்றுமோர்     உருவமும்
    காணப்படுகிறது. இந்த மூன்று மனிதர்களது முகங்களும் விலங்கின் முகங்களாக அமைந்துள்ளன.

    விலங்கு போன்று வேடம் அணிந்து ஆடுதல் என்னும் வேட்டைச் சடங்குகளைப்     பிரதிபலிக்கும் ஓவியங்களாக இவற்றைக் கருதலாம்.
    குதிரையின் மீது மனிதன் - கீழ்வாலை

    அடுத்ததாகப் படகு ஒன்றில் நான்கு மனிதர்கள் செல்வது
    போன்ற ஓவியம் காணப்படுகிறது. இதில் நான்கு மனிதர்களது
    முகங்களும் பறவை முகங்களாகவே     காணப்படுகின்றன.

    கீழ்வாலையில் காணப்படும் மனித உருவங்களில் ஓர் உருவம்
    மட்டும் பெரியதாக உள்ளது; அம்மனிதனின் நீண்ட தலைமுடி இரு
    பகுதிகளாகப்     பிரிக்கப்பட்டுக்     காணப்படுகிறது. இது
    அவ்வுருவத்திற்குரிய சிறப்பைச் சுட்டுவதாக அமைகிறது.
    அவ்வுருவத்தை அக்குழுவின் தலைவன் என்றோ அல்லது
    முன்னோரது நினைவுச்     சின்னம் என்றோ கருதலாம்.

    1.3.2 மனித வடிவங்கள்

    மதுரைக்கு அருகில் முத்துப் பட்டி என்னும் ஊரின்
    அருகே உள்ள குன்றில் காணப்படும் மனித உருவம் ஒன்று
    சிறிய வட்ட வடிவத் தலையும், குச்சி போன்ற கைகளும், அகன்ற
    உடல் அமைப்பும் கொண்டதாகக் காணப்படுகிறது. உடலின்
    மீது வரிவரியாகக் கோடிடப்பட்டுள்ளது. இவ்வுருவத்தின் நடுவில்
    ஒரு வரைகோடு     வரையப்பட்டுள்ளது. சிவப்பு நிறத்தில்
    வரையப்பட்டுள்ள இதன் அருகே சில சிறிய மனித உருவங்கள்
    காணப்படுகின்றன. இந்த ஓவியங்கள் வரலாற்றுக்கு முற்பட்ட
    காலத்தைச் சேர்ந்தவை என்று டாக்டர். ஆர் வெங்கட்ராமன்
    கருதுகிறார்.

    மதுரை மாவட்டத்தில் திருமலை என்னும் இடத்தில் கிடைத்த
    பாறை     ஓவியத்தில்     இரண்டு மனிதர்கள் நின்று
    கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய கையில் வில் போன்ற
    ஒருவகை ஆயுதம் உள்ளது. இவ்வோவியம் வெள்ளை நிறத்தில்
    வரையப்பட்டுள்ளது. இவ்விரு மனித வடிவங்களுக்கு இடையே
    மூன்று கோடுகள் நீர் வீழ்வது போன்றும் அலை போன்றும்
    காட்டப்பட்டுள்ளன.

    திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை ஓவியத்தை மதுரை காமராசர்
    பல்கலைக்கழகத்தைச்     சேர்ந்த     பேராசிரியர்
    டாக்டர்.கோ.விசய வேணுகோபால் அவர்கள் கண்டுபிடித்தார்.
    இவ்வோவியத்தில் மனித உருவங்கள் இடம் பெற்றுள்ளன.
    தொன்மையான ஓவியங்களில் காணப்படும் தட்டையான
    உடலமைப்பை உடைய உருவங்களாக இவை உள்ளன.
    வேட்டைக் காட்சி, ஆட்டுச் சண்டை ஆகிய இரு நிகழ்வினைக்
    காட்டும் ஓவியங்களில் மனித உருவங்கள் சிறப்பாக
    வரையப்பட்டுள்ளன. இவை வெள்ளை மற்றும் செந்நிறத்தால்
    அடர்த்தியான     பூச்சு முறையில் அமைந்துள்ளன. மனித
    உருவங்களின் தலையைச் சுற்றி வட்ட வடிவக் கோடுகள்
    அமைக்கப்பட்டுள்ளன. சில உருவங்கள்     தலைப்பாகை
    அணிந்திருப்பது போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கின்றன.
    இவற்றின் அருகே இனக்குழுத் தலைவன் எனக் கருதப்படும் பெரிய மனித உருவம் வரையப்பட்டுள்ளது.

    தேனி மாவட்டம் காமயக் கவுண்டன் பட்டியில் கிடைத்துள்ள
    ஓவியத்தில் படகில் மனிதன் நின்றிருப்பது போன்ற காட்சி இடம்
    பெற்றுள்ளது. இம்மனித     உருவம் கோட்டோவியமாக
    அமைந்துள்ளது.

    கோயம்புத்தூருக்கு அருகே     உள்ள வெள்ளருக்கம் பாளையத்தில் மனிதர் எழுவர் ஒன்று சேர்ந்து கைகோத்து வரிசையாகச் செல்வது போன்று வரையப்பட்டுள்ளது. இதனை
    நடன நிகழ்ச்சியாகக் கருதலாம்.

    நீலகிரி மாவட்டம் கொணவக்கரையில் உள்ள ஓவியத்தில்
    பெரிய,சிறிய உருவங்களாக மனித உருவங்கள் காட்டப்பட்டுள்ளன.
    கைகள் உயர்ந்த நிலையிலும் கைவிரல்கள் தெளிவாகவும்
    வரையப்பட்டுள்ளன. விரல்களின் நகங்கள் கூடத் தெளிவாகக்
    காட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கதாகும். இதனை
    அடுத்து வரிசையாக நின்றிருக்கும் மனித உருவங்கள் இடம்
    பெற்றுள்ளன. ஒரு பெரிய உருவத்தின் முன் பல சிறிய
    உருவங்கள் கையில் சிறிய வில்லுடன் நிற்கும் நிலையில் உள்ளன.

    கிருஷ்ணகிரிக்கு அருகே மயிலாடும் பாறை
    என்னும் ஊரில் உள்ள ஓவியத்தில் இருவர்
    எதிரெதிராக     இணைந்த     நிலையில்
    வரையப்பட்டுள்ளனர். இதனை உடலுறவுக் காட்சி என்று கருதுவர். இத்தகு ஓவியம் தமிழகத்தில் கிடைத்துள்ள ஓவியங்களில் அரிதான ஒன்றாகும்.
    மனித வடிவங்கள்
    - மயிலாடும்பாறை

    இவை தவிரச் சிறுமலை, வெள்ளருக்கம் பாளையம், மல்லபாடி
    போன்ற இடங்களில் வேட்டையாடும் மனித ஓவியங்களைக்
    காணலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 15:37:22(இந்திய நேரம்)