தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிற ஓவியங்கள்

  • 1.4 பிற ஓவியங்கள்

    பாறை ஓவியங்களில் மனிதன், விலங்கு, முதலிய ஓவியங்கள்
    தவிர வேறு பல உருவங்களும் காணப்படுகின்றன. அவற்றை
    இங்குக் காண்போம்.
    1.4.1 சூரியன்

    கீழ்வாலையில் சூரிய வடிவம் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது.
    இது பதினேழு குறுக்குக் கோடுகளைக் கொண்டு காணப்படுகிறது.
    இயற்கையை வணங்கிய பழங்கால மனிதன் சூரியனை இங்கு
    வரைந்திருக்கலாம்.
    1.4.2 ஆயுதம்

    கீழ்வாலையில் காணப்படும் மற்றோர் ஓவியம் இது. இதில்
    மனிதன் ஒருவன் கையில் ஆயுதம் வைத்திருப்பது போன்று
    காணப்படுகிறது. இந்த ஆயுதம் பலியிடுதல்     என்னும்
    சடங்கிற்காகவோ வேட்டைக்கு உரியதாகவோ இருக்கலாம்.

    செத்தவரை என்னுமிடத்தில் உள்ள ஓவியத்தில் கேடயம்,
    வேல் ஆகிய வடிவங்கள் வரையப்பட்டுள்ளன. இவை தவிர
    வேட்டைக் காட்சி தொடர்பான ஓவியங்கள் பலவற்றில் வாள்
    மற்றும் எறிபடை முதலான கருவிகளும் இடம் பெற்றுள்ளன.

    1.4.3 படகு

    கீழ்வாலை மற்றும் காமயக் கவுண்டன் பட்டி ஆகிய
    இடங்களில் படகு ஓவியம் காணப்படுகிறது. இப்படகு அக்கால
    மனிதனின் போக்குவரத்துச் சாதனமாகப்     பயன்படுத்தப்
    பட்டிருக்கலாம். அல்லது மீன் பிடிப்பதற்காகப் பயன்படுத்தப்
    பட்டிருக்கலாம்.

    1.4.4 மான்தோல்

    மான்தோல் தரைவிரிப்பு - பாடியந்தல்

    தென்னார்க்காடு மாவட்டம் பாடியந்தல் என்னுமிடத்தில்
    மான்தோல் போன்ற வடிவுடைய ஒரு விரிப்பைக் காண முடிகிறது.
    தரை விரிப்புப் பற்றித் தமிழகத்தில் கிடைக்கப் பெற்ற முதல்
    ஓவியம் இதுவேயாகும்.

    1.4.5 குறியீடுகள்

    கீழ்வாலை ஓவியத்தில் ஐந்து குறியீடுகள் காணப்படுகின்றன
    இவை எழுத்துத் தொடர்பான குறியீடுகளாக இருக்கலாம் எனக்
    கருதப்படுகின்றன.     சிந்துவெளியில்     கிடைக்கப் பெற்ற
    வரி வடிங்களைப் போன்று இவை அமைந்துள்ளமையால்
    முக்கியத்துவம் வாய்ந்ததனவாகக் கருதப்படுகின்றன.

    முதலாவது குறியீடானது, நீண்ட கோடும் அதனிடையே நான்கு
    குறுக்குக் கோடுகளும் கொண்டது. இது இடி அல்லது இடியுடன்
    கூடிய மழைக் காலத்தைச் சுட்டுவதாகக் கருதலாம். இரண்டாம்
    குறியீடு எட்டு எனும் எண் சற்று வலப்பக்கம் சாய்ந்து இருப்பது
    போல் காணப்படுகிறது. ஒரு தலைவனின் கீழ் ஊர்வலமாகச்
    செல்லுதல்     எனப் பொருள் கொள்ளலாம்     என்கிறார் ராசு.பவுன்துரை.

    மூன்றாவது குறியீடு வடதிசையை நோக்கிச் செல்லுதல்
    என்பதைக் குறிக்கிறது எனவும், நான்காவது குறியீடு இசையொலி
    எழுப்புதல் என்னும் பொருளைக் குறிக்கிறது எனவும் ஐந்தாவது
    குறியீடு விழாக்காலம் என்பதைக் குறிக்கிறது எனவும் கொள்ளலாம்
    என்று மேற்சொன்ன ஆசிரியர் சுட்டுகிறார்.

    இவை தவிரப் படகில் பயன்படுத்தப்படும் திசை திருப்பும்
    கருவி போன்ற ஒரு கருவியும் ஓவியமாக இங்குத்
    தீட்டப்பட்டுள்ளது.

    1.4.6 கை வடிவம்

    பாறை ஓவியங்களில் குறிப்பிடத் தக்க ஒரு வகையாகக் 'கை'
    ஓவியத்தைக் கூறலாம். வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய மனிதன்
    தூரிகையைக் கொண்டு வரைந்தான் என்பதற்கான ஆதாரம்
    கிட்டவில்லை. அன்றைய மனிதர் இயற்கையாகப் பூமியில்
    கிடைக்கும் நிறப் பொருள்களைக் கையில் எடுத்துக் கை
    விரல்களால் வரைந்திருப்பர். அவர்களுக்குரிய தூரிகையாக
    விரல்கள் அமைந்தன. அவ்வாறு வரைந்தபொழுது கையில்
    படிந்த வண்ணத்தை அப்படியே பாறையில் பதித்திருப்பர்.
    கைஓவியமானது பிரான்ஸ் மற்றும் வடக்கு ஸ்பெயின் நாடுகளில்
    கிடைத்துள்ளது.

    தமிழகத்தில் தென்னார்க்காடு மாவட்டத்தில் செத்தவரை
    என்னுமிடத்தில் கை வடிவம் காணப்படுகிறது. இக்கை
    அடர்த்தியான வண்ணப் பூச்சு முறையில் தீட்டப்பட்டுள்ளது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 15:37:26(இந்திய நேரம்)