தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பகுதி 1.5

  • 1.5 அரசனும் அமைச்சனும்

    ஓர் அரசனுக்குப் பொருளாதாரத்திற்கு அடுத்த நிலையில் முக்கியம்
    வாய்ந்தது, அவனுக்குத் துணையாகச் செயல்படும் அமைச்சர்.

    நல்ல படையும், நல்ல மக்களும், நல்ல முறையில் சேகரித்த
    பொருளும், சிதையாமல், சிறப்பாக அமைய வேண்டுமானால்,
    ஆட்சி செலுத்தும் மன்னனும், நல்ல அறிவுரை கூறி அவனை
    நெறிப்படுத்தும் அமைச்சர்களும் தேவை.

    அரசனை நெறிப்படுத்தும் இயல்பு அல்லது ஆற்றல் யாரிடம்
    இருக்கும்? நல்ல பண்பட்ட உள்ளம் படைத்தவர்களிடம் - நல்ல
    பண்பாடு உடைய குடியில் பிறந்தவர்களிடம்தாம் அந்த ஆற்றலைப்
    பார்க்க முடியும்.


    1.5.1 அமைச்சருக்கான இலக்கணம்

    ஒரு செயலைச் செய்வதற்குத் தேவையான கருவிகளையும், அதைச்
    செயல்படுத்துவதற்கு உரிய பருவ காலத்தையும், செயல்படுத்தும்
    போது கையாளும் நுட்பங்களையும், செயல்முறைகளையும் நன்கு
    ஆராய்ந்து செயல்படுபவனே அமைச்சர் ஆவதற்குத் தகுதி
    உடையவன் என வள்ளுவர் வரையறை செய்கிறார்.


    கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
    அரு வினையும் மாண்டது அமைச்சு.


    (குறள்:631)


    (மாண்டது = பொருந்தியது)

    மேலும், மன உறுதியும், குடிப்பிறப்பின் மானம், அரசியல் கல்வி
    அறிவு,     விடாமுயற்சி,     சூழ்ச்சித்திறன்     முதலியனவும்
    அமைச்சர்களுக்குத் தேவையானவையாக வள்ளுவர் சுட்டுகிறார்
    (குறள்: 632).


    1.5.2 அமைச்சரின் சொல்லாற்றல்

    தான் நினைத்த கருத்தைத் தெளிவாகவும், பிறரை ஈர்க்குமாறும்,
    பிறர் விரும்பும் வகையிலும் சொல்லக் கூடிய சொல்வன்மையும்
    அமைச்சருக்கு இருக்க வேண்டிய தகுதியாகச் சுட்டப்படுகிறது.
    இதனை,


    கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் களோரும்
    வேட்ப மொழிவது ஆம்சொல்


    (குறள்: 643)


    (பிணிக்கும் = ஈர்க்கும் ; வேட்ப = விரும்பும்படியாக)

    என்று குறிப்பிடுகிறார். தன் சொல்லை விரும்பிக் கேட்டோரைத்
    தன்னிடம் ஈர்த்துக் கொள்ளும் நல்ல திறன் வேண்டும். அதோடு,
    தன் பேச்சைக் கேட்காமல் புறக்கணிக்க எண்ணுபவர்களும், ‘இவர்
    சொல்வதைக் கேட்க வேண்டும்’ என விரும்பும்படியாகப் பேசுவதே
    சிறந்த சொல்வன்மை என்கிறார் வள்ளுவர்.

    மேற்குறிப்பிட்ட வகையில்     சொல்வன்மை உடையவனை,
    அமைச்சனாகக் கொண்ட மன்னனால், மக்களுக்குச் சிறந்த
    ஆட்சியை வழங்க இயலும் என்று கருதுகிறார் வள்ளுவர்.

    • செயலும் ஆற்றலும்
    ஓர் அமைச்சனைத் தேர்ந்து எடுப்பதிலேயே மன்னர்கள் இவ்வளவு
    கவனம் செலுத்துபவர்களாக இருந்தால் ஆட்சி செலுத்துவதில்
    எவ்வளவு கவனமாக இருந்திருப்பார்கள் என்பது புலப்படும். இது
    எதைக் காட்டுகிறது?     பண்டைத்     தமிழ் மன்னர்களின்
    ஆட்சிமுறையையும்     ஆட்சி     அமைப்பதையும், ஆட்சி
    நடத்துவதையும், ஓர் அறமாகக் கொண்ட தமிழர்களின் பண்பாடு
    இதன்     வழியாக வெளிப்படுகிறது. இந்தப் பண்பாட்டின்
    அடிப்படையிலேயே வள்ளுவர் அமைச்சர்களின் தகுதிகளை
    வரையறை செய்திருக்கிறார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:08:22(இந்திய நேரம்)