தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பகுதி 2.1

  • 2.1 அரசனின் இயல்புகள்

    ஒரு நாட்டை ஆளும் அரசனுக்குச் சில இயல்புகள் இருக்க
    வேண்டும். அவனுக்கு உரிய பண்புகளாகச் சில அமைய வேண்டும்.
    இவை பொருந்தி இருப்பவனே நாட்டை ஆளும் மன்னனாகத்
    திகழ்வதற்கு உரியவன் என்பது வள்ளுவர் கருத்து.

    சில இயல்புகள், நம்மிடம் இயற்கையாகவே அமைந்திருக்கும். சில
    நாமாக முயன்று பெறக் கூடியவையாக இருக்கும். பின்னர் அவை
    நம் பண்பாக மாறி அமையும் தன்மை உடையன. வள்ளுவர்,
    மன்னனுக்குரிய பண்புகளாகச் சிலவற்றைக் குறிப்பிடுகின்றார் அவை
    முறையே அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம், ஆகிய நான்கும்
    ஆகும். இவைகளை உடையவனே மன்னனாக ஏற்றுக்
    கொள்ளத்தகுந்தவன் என்பது வள்ளுவர் கருத்து.


    அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் இந்நான்கும்
    எஞ்சாமை வேந்தற்கு இயல்பு


    (குறள்: 382)


    எதனையும் அஞ்சாமல் எதிர்க்கும் ஆற்றலும், பிறருக்குக்
    கொடுக்கும் ஈகைத் தன்மையும், நூற்களைக் கற்றுப் பெறும்
    அறிவும் ஊக்கமும் மன்னனுக்கு முழுமையாக அமைந்திருக்க
    வேண்டிய இயல்புகள்.


    2.1.1 அஞ்சாமை

    நல்லவனாக இருந்தாலும் வல்லவனாக இருக்க வேண்டும் என்று
    பொதுவாகக் குறிப்பிடுவர். இதற்கு என்ன காரணம்? நல்ல
    இயல்புகள் ஒருவன் கொண்டிருந்தாலும், அவன் கோழையாக
    இருந்தால் அவனால் எதையும் செயல்படுத்த முடியாது. எந்தச்
    சூழலாக இருந்தாலும் எதையும் சமாளிக்கக்கூடிய மனத்திண்மை
    (Boldness) அல்லது வீரம் வேண்டும். அப்பொழுதுதான்
    நினைத்ததை ஒருவனால் செய்ய முடியும். இந்தத் மனத்திண்மை
    அல்லது வீரத்தைத்தான் வள்ளுவர் அஞ்சாமை என்று
    குறிப்பிடுகிறார்.

    செய்யும் பணியின் வெற்றி மனத்திண்மையுடன் அஞ்சாமல்
    செயல்படும் தன்மையில்தான் அமைந்துள்ளது. எனவே எந்த ஒரு
    செயலில் ஈடுபட்டாலும், அஞ்சாத் தன்மையுடன் ஈடுபட வேண்டும்.
    அப்பொழுதுதான் அவன் செய்யும் வினை அல்லது செயல்
    வெற்றிபெறும். மனத்திண்மையில்தான் வினைத் திட்பம்
    அமைந்திருக்கிறது என்கிறார் வள்ளுவர்.


    வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
    மற்றைய எல்லாம் பிற


    (குறள்: 661)


    ஒருவனது செயல்பாட்டில், அவனது மனத்திண்மையாகிய
    அஞ்சாமையே முதன்மையானது. ஏனையவை எல்லாம் அதற்குப்
    பின்னர்தான் என்பது வள்ளுவர் கருத்து. இது அரசர்களுக்கு உரிய
    இயல்புகளில் முதன்மையானது.


    2.1.2 ஈகை

    வறுமையைப் பற்றி இன்னோர் இடத்தில் கூறும் பொழுது
    வள்ளுவர், பற்றினால் நம்மை அழிக்கக் கூடிய தீயினுள் கூட
    ஒருவன் தூங்கலாம், ஆனால் நம் உடலில் பசி என்ற ஒன்று
    இருந்தால் தூங்க முடியாது என்று குறிப்பிடுவார். அத்தகைய
    கொடுமை வாய்ந்தது பசி. மணிமேகலை என்னும் காப்பியத்தை
    இயற்றிய சீத்தலைச் சாத்தனார் கூட பசியின் கொடுமையை
    உணர்ந்து, ‘பசிப்பிணி எனும் பாவி’ என்று கூறுவார்.

    இத்தகைய துன்பம் மிகுந்த பசியைப் போக்குவது ஒரு சிறந்த
    செயல். அவ்வாறு செய்வது வறுமையோடு வருந்தும் ஒருவனை
    இறப்பிலிருந்து மீட்டுக் கொண்டு வருவதாகும். எனவே சீத்தலைச்
    சாத்தனார்.


    மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம் உண்டி கொடுத்தோர்
    உயிர் கொடுத்தோரே’

    (மணிமேகலை : 11: 95?96)


    என்று குறிப்பிடுகிறார்.

    வறுமையின் அல்லது பசியின் கொடுமையை உணர்ந்தவர்
    வள்ளுவர். எனவே பிறர் துன்பத்தை நீக்கும் இரக்க உணர்வு,
    நாட்டை ஆளும் மன்னனுக்கு இயற்கையாக அமைந்திருக்க
    வேண்டிய இயல்புகளில் ஒன்று என்று குறிப்பிடுகிறார்.

    இரக்க உணர்வு கொண்டவன்தான் பிறர் துன்பத்தைப் போக்கும்
    ஈகை உள்ளம் கொண்டவன். தன் ஆட்சிக்கு உட்பட்ட மக்களின்
    வறுமையை - துன்பத்தை நீக்க வேண்டியது மன்னனின்
    முதன்மையான கடமை. அந்தக் கடமையைத் தனக்கு இருக்கும்
    ஈகைக் குணத்தால் அல்லது இயல்பால்தான் நிறைவேற்ற முடியும்.
    அந்த ஈகைக் குணம் எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்பதனை


    அற்றார் அழிபசி தீர்த்தல் அஃது ஒருவன்
    பெற்றான் பொருள் வைப்பு உழி


    (குறள்: 226)


    என்று குறிப்பிடுகிறார்.

    (அற்றார் = வறியவர், அழி = அழிவைத் தரக் கூடிய,
    வைப்புஉழி = சேமித்து வைக்கும் இடம் (உழி - இடம்) (Savings
    Bank)

    வறியவர்களது அழிவு தரக்கூடிய பசியை நீக்க வேண்டும்.
    இத்தகைய செயல், தான் ஈட்டிய பொருளைத் தனக்கு உதவும்படி
    சேமித்து வைக்கும் வைப்பு நிதி போன்றது என்கிறார் வள்ளுவர்.

    எனவே, ஒரு நாட்டை ஆளும் அரசனுக்கு நாட்டிலுள்ள மக்களின்
    வறுமையைப் போக்க வேண்டும் என்ற இயல்பு இருக்க வேண்டும்.
    அந்த இயல்பு வருங்காலத்தில் நாட்டைப் பாதுகாப்பதற்குச்
    சேமித்து வைக்கும் செல்வம் போல் பயன்தரும். அது எவ்வாறு?

    உலகில் நிகழும் பல்வேறு வகையான தீய செயல்களுக்கும்,
    வன்முறைகளுக்கும் அடிப்படைக் காரணம் எது? வறுமை.
    திருடினவனைப் பார்த்து ‘நீ ஏன் திருடினாய்?’ என்று கேட்டால்
    ‘வறுமை’ என்று குறிப்பிடுவான். இதைப் போல் பிற தீய
    செயல்களில் பலவும் வறுமையின் காரணமாக நிகழ்கின்றன. எனவே
    தீமைகளுக்குக் காரணமான வறுமையை ஒரு மன்னன் ஈகை
    என்னும் தன் இயல்பால் நீக்கினால், அவன் நாட்டில் நிகழும் தீய
    செயல்கள் குறையும் இல்லையா? அதன் காரணமாக அந்த நாடு
    நலம் பெறும். அந்த இயல்பு வருங்காலத் தலைமுறையினருக்கு ஒரு
    சேமிப்பு நிதி போன்றது தானே? எனவேதான் வள்ளுவர்,
    மன்னனுக்கு இயல்பாக ஈகை செய்யும் இயல்பு இருக்க வேண்டும்
    என்கிறார்.


    2.1.3 அறிவு

    சில இயல்புகள் தானாகவே நம்மிடம் அமைந்திருக்கும். சில நம்
    முயற்சிகளினால் பெறக்கூடியவை. அவற்றுள் ஒன்று நாம் பெறும்
    அறிவு. நம் கல்வியினாலும், பட்டறிவினாலும், தொடர்பாலும் பல
    நிலையில் நம் அறிவைப் பெருக்கிக் கொள்கிறோம். அதனால்
    நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் நன்மைகள் பல
    ஏற்படுகின்றன. ஒரு நாட்டை ஆட்சி செய்யும் மன்னனும்
    அறிவுடையவனாக இருக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

    மேலும், அறிவுடைய ஒருவனால், நன்மை எது, தீமை எது என
    இனம் காண இயலும். நாட்டை ஆட்சி செய்யும் மன்னனுக்கு
    இத்தகைய இயல்பு மிகவும் இன்றியமையாதது. தீயவர்களையும்
    நல்லவர்களையும் பிரித்து அறியும் ஆற்றல் பெறுவதோடு, யார்
    யார் பொய் பேசுகிறார்கள் யார் யார் உண்மை பேசுகிறார்கள்
    என்றும் பகுத்து அறிய முடியும். எனவே வள்ளுவர்.


    எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும், அப்பொருள்

    மெய்ப்பொருள் காண்பது அறிவு

    (குறள்: 423)


    என்று குறிப்பிடுகிறார்.


    அதை அப்படியே     ஏற்றுக்கொள்ளாமல், அதில் இருக்கும்
    உண்மையை அறிய வேண்டும். அவ்வாறு அறியும் திறனே ஒருவன்
    பெற்ற அறிவாகக் கருதப்படுகிறது. அந்த அறிவு மக்களுக்கு
    மட்டுமல்ல மன்னனுக்கும் இருக்க வேண்டியது மிகவும்
    இன்றியமையாதது. ஏன் என்றால், நாட்டை ஆளும் மன்னனின்
    தீர்ப்பு அல்லது முடிவு அல்லது செயல் ஒரு நாட்டைப் பெரும்
    அளவில் பாதிக்கும். எனவே உண்மைப் பொருளை ஆராய்ந்து
    அறியும் தன்மையாகிய அறிவு ஒரு மன்னனுக்கு வேண்டும்
    என்கிறார் வள்ளுவர்.


    2.1.4 ஊக்கம்

    ஒரு செயலில் எந்தவிதத் தளர்ச்சியும் இல்லாமல், மன
    எழுச்சியுடன் செயல்படுவதையே ஊக்கம் என்கிறோம். ஒரு
    மனிதனிடம் செல்வம் வந்து சேரும், விட்டுப் போகும். ஆனால்
    ஒருவன் இயற்கையாகவே பெற்றிருக்கும் ஊக்கம், எந்த ஒரு
    சூழலிலும் அவனை விட்டுச் செல்லாமல் நிலைத்து நிற்கும்.

    பிற எந்தச் செல்வங்கள் இருந்தாலும் ஊக்கம் உடைமை என்னும்
    செல்வமே சிறந்த செல்வமாகவும், நிலைத்த செல்வமாகவும்
    கருதப்படுகிறது. எனவே, ஒருவர் உடைமை (belongings) பல
    உடையவராக இருந்தாலும், ஊக்கம், உடையவரே, ‘உடையவர்’
    என்று சொல்லத் தக்கவர் என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.


    உடையர் எனப்படுவது ஊக்கம் அஃது இல்லார்
    உடையது உடையரோ மற்று


    (குறள்: 591)


    (உடையர் = செல்வம் உடையவர், உடையது = (வேறு ஏதும்)
    உடையது ஆனாலும்)

    ஒருவருக்கு உடைமை என்பது ஊக்கம் உடைமை. அது இல்லாமல்
    பிற எந்த உடைமைப் பொருள் இருந்தாலும், அதை உடைமைப்
    பொருளாகக் கொள்ள இயலாது. அவர்கள் செல்வம் உடையவர்கள்
    அல்ல என்பது வள்ளுவர் கருத்து.

    ஓர் அரசன் பிற எல்லா விதச் செல்வங்களும் அல்லது
    உடைமைகளும் பெற்றிருந்தாலும் ஊக்கம் உடைமையை அவன்
    பெற்றிருக்க வேண்டும். ஏன் என்றால், மன ஊக்கம் இல்லாத
    மன்னனால், தான் நினைத்ததைச் செயல்படுத்த முடியாது. எனவே
    மன்னனுக்கு உரிய உடைமைகளுள் ஊக்கம் உடைமையே
    முதன்மையானது என்கிறார் வள்ளுவர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:09:56(இந்திய நேரம்)