தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இளநாகனார்


இளநாகனார்

151. குறிஞ்சி
நல் நுதல் பசப்பினும், பெருந் தோள் நெகிழினும்,
கொல் முரண் இரும் புலி அரும் புழைத் தாக்கிச்
செம் மறுக் கொண்ட வெண் கோட்டு யானை
கல் மிசை அருவியின் கழூஉஞ் சாரல்
5
வாரற்கதில்ல-தோழி!-கடுவன்,
முறி ஆர் பெருங் கிளை அறிதல் அஞ்சி,
கறி வளர் அடுக்கத்து, களவினில் புணர்ந்த
செம் முக மந்தி செய்குறி, கருங் கால்
பொன் இணர் வேங்கைப் பூஞ் சினைச் செலீஇயர்,
10
குண்டு நீர் நெடுஞ் சுனை நோக்கிக் கவிழ்ந்து, தன்
புன் தலைப் பாறு மயிர் திருத்தும்
குன்ற நாடன் இரவினானே!
இரவுக்குறிச்சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.-இளநாகனார்

205. பாலை
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து,
ஆளி நன் மான், வேட்டு எழு கோள் உகிர்ப்
பூம் பொறி உழுவை தொலைச்சிய, வைந் நுதி
ஏந்து வெண் கோட்டு, வயக் களிறு இழுக்கும்
5
துன் அருங் கானம் என்னாய், நீயே
குவளை உண்கண் இவள் ஈண்டு ஒழிய,
ஆள்வினைக்கு அகறிஆயின், இன்றொடு
போயின்றுகொல்லோ தானே-படப்பைக்
கொடு முள் ஈங்கை நெடு மா அம் தளிர்
10
நீர் மலி கதழ் பெயல் தலைஇய
ஆய் நிறம் புரையும் இவள் மாமைக் கவினே!
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லி, செலவு அழுங்கியது. தோழி செலவு அழுங்கச் சொல்லியதூஉம் ஆம்.-இளநாகனார்

231. நெய்தல்
மை அற விளங்கிய மணி நிற விசும்பில்
கைதொழும் மரபின் எழு மீன் போல,
பெருங் கடற் பரப்பின் இரும் புறம் தோய,
சிறு வெண் காக்கை பலவுடன் ஆடும்
5
துறை புலம்பு உடைத்தே-தோழி!-பண்டும்,
உள் ஊர்க் குரீஇக் கரு உடைத்தன்ன,
பெரும் போது அவிழ்ந்த கருந் தாட் புன்னைக்
கானல்அம் கொண்கன் தந்த
காதல் நம்மொடு நீங்காமாறே.
சிறைப்புறமாகத் தோழி சொல்லி, வரைவு கடாயது.-இளநாகனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:16:12(இந்திய நேரம்)