காப்பிய இலக்கியம்
பாடல்
Poem

கூவாமுன்னம், இளையோன் குறுகி, ‘நீ
ஆவான் யார்?’ என, அன்பின் இறைஞ்சினான் ;
‘தேவா ! நின் கழல் சேவிக்க வந்தனன் ;
நாவாய் வேட்டுவன், நாய் அடியேன்’ என்றான். - 1
‘நிற்றி நிண்டு’, என்று, புக்கு நெடியவன் தொழுது, தம்பி
‘கொற்றவ ! நின்னைக் காணக் குறுகினன், நிமிர்ந்த கூட்டச்
சுற்றமும், தானும் ; உள்ளம் தூயன் ; தாயின் நல்லான் ;
எற்றுநீர்க் கங்கை நாவாய்க்கு இறை ; குகன் ஒருவன்’என்றான். - 2
அண்ணலும் விரும்பி, ‘என்பால் அழைத்தி, நீ அவனை’ என்ன
பண்ணவன் ‘வருக’ என்ன, பரிவினன் விரைவில் புக்கான் ;
கண்ணனைக் கண்ணின் நோக்கிக் கனிந்தனன் ; இருண்ட குஞ்சி
மண்உறப் பணிந்து, மேனிவளைத்து, வாய் புதைத்து நின்றான். - 3
‘இருத்தி ஈண்டு’ என்னலோடும் இருந்திலன் ; எல்லை நீத்த
அருத்தியன், ‘தேனும் மீனும் அமுதினுக்கு அமைவது ஆகத்
திருத்தினென் கொணர்ந்தேன் ; என்கொல் திருவுளம்?’ என்ன, வீரன்
விருத்தமாதவரை நோக்கி முறுவலன், விளம்பல் உற்றான் ; - 4
அரிய தாம் உவப்ப, உள்ளத்து அன்பினால் அமைந்த காதல்
தெரிதரக் கொணர்ந்த என்றால், அமிழ்தினும் சீர்த்த அன்றே?
பரிவினின் தழீஇய என்னின் பவித்திரம் ; எம்மனோர்க்கும்
உரியன ; இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ?’ என்றான். - 5