49. முல்லை நிலங் கடந்தது
 

இதன்கண்: உதயணன் வாசவதத்தையைக் கைப்பற்றிக் கொண்டு செல்லும் நெறியிலே எதிர்ப்பட்ட முல்லை நிலத்தைக் கடந்தமை கூறப்படும்.
 
              இருள்இடை மருங்கின் இருநிலம் தழீஇய
            அருமதில் படப்பை அருட்ட நகர்அகம்
            உருள்படல் ஒற்றி ஊடுஎழுப் போக்கிக்
            கருங்கண் பம்பை நெருங்கக் கொட்டி
        5   அழற்படு சீற்றத்து அஞ்சுவளி செலவின்
            கழல்கால் இளையர் கலங்காக் காப்பின்
            இயற்றப் பட்ட இயற்கை இற்றென
            வயத்தகு நோன்தாள் வயந்தக குமரன்
            ஆழ்கடல் பௌவத்து அரும்கலம் இயக்கும்
       10   நீயான் போல நெஞ்சுஉணர் மதிப்பினன்
 
              தெய்வப் பேர்யாழ் கைவயின் நீக்கி
            வீக்குறு புரோசை வாய்ப்பொன் பந்தத்து
            யாப்புற அமைத்துக் காப்புறு தொழிலின்
            நீர்நிறைக் கொளீஇய தாமரைக் கம்மத்துக்
       15   கூர்இலைக் கொலைவாள் வார்மயிர் வட்டத்துச்
            சேடக அரணமொடு ஈடுபட விரைஇ
            இறைமகன் கேட்ப இற்றென வுரைக்கும்
 
              துறைவளங் கவினிய நிறைவளப் படுவில்
            செல்வ மருதத்து ஒல்லையுள் இருந்த
       20   தொல்அருஞ் சிறப்பின்இம் மல்லல் மாநகர்
           அகப்பட்டு இயங்குநர் அச்சம் நீக்கிப்
            புறப்பட்டு இடியங்குநர்ப் புன்கண் செய்யும்
            காப்புவினை உடைத்தே யாப்புற இதனை
            இடத்திட்டு ஏகுதும் எனினே எங்கும்
 
         25   முடத்தாள் தாழை மொய்ந்தெழு முழுச்சிறைத்
            தோட்டமும் படுவும் கோட்டகக் கோடும்
            பிரம்பெழு பெரும்பார் அடைந்துமிசைச் செற்றிச்
            செதும்புபரந்து எங்கும் சேற்றுஇழுக்கு உடைத்தாய்
            வாய்க்கால் நிறைந்த போக்கரும் பணையொடு
       30   வரம்புஇடை விலங்கி வழங்குதற்கு அரிதாய்
            நிரம்பாச் செலவின் நீத்தருஞ் சிறுநெறி
            நலத்தகு புகழோய் நடத்தற்கு ஆகாது
 
              வலத்திட்டு ஊடூர்ந்து வழிமுதல் கோடுமென்று
            உரைப்பக் கேட்டே உதயண குமரன்
       35   குறிவழிக் காட்டிய கொலைத்தொழில் நகரம்
            அறிதல் அஞ்சி அடியிசைக் கேட்கும்
            எல்லை அகன்று வல்லைமருங்கு ஓட்டி
            முதல்நெறிக் கொண்டு முந்நால் காவதம்
            கதழ்வொடு கடக்குங் காலை அவ்வழி
 
         40   ஒருபால் படாதோர் ருள்ளம் போல
            இருபால் பட்ட இயற்கைத்து ஆகிய
            நெறிவயின் ஏதங் குறிவயின் காட்டி
            வடுவின் அண்பின் வயந்தகன் உரைக்கும்
            இடுகல் முதலன இடவயின் கிடந்தது
       45   இன்னாப் பேர்தேர் இயற்கைத்து எண்மதி
            ஒன்னா மன்னற்கு உற்றது செய்யும்
            யாப்பில் ஆலாளர் காப்பிற்று ஆகி
            ஏற்றமும் இழிவும் இடைஇடைப் பல்கி
            ஊன நாடும் உளவழிச் சில்கி
       50  நீரும் நிழலும் நீங்கிற்று ஆகி
            வெவ்விளை யாளர் அல்லது விழுமிய
            செவ்வினை யாளர் சேரார் நம்பதிக்கு
            அணித்து மன்றது மணிப்பூண் மார்ப
 
              வலத்திற் கிடந்த வழிவகை தானே
       55   வளைந்த செலவிற்று ஆகித் தலைத்தலைக்
            கடுஞ்சின வென்றிக் காவல் ஆடவர்
            கொடுஞ்சிநல் தேரும் குதிரையும் யானையும்
            காலாள் குழாத்தொடு நால்வகைப் படையும்
            ஒருநிரல் செல்லும் உள்அகல் உடைத்தாய்த்
       60  திருநிலை பெற்றுத் தீயோர் உன்னார்
            நருமதை காறு நாட்டக மப்பால் 
 
              வஞ்சர் வாழும் அஞ்சுவரு தீநிலத்து
            அகல்இடம் தானும் பகல்இடத்து இயங்குநர்க்கு
            கின்ப மாகிய வேம வெண்குடை
       65   மன்பெருஞ் சிறப்பின் மண்ணகக் கிழமை
            ஒருகோ லோச்சிய திருவார் மார்பநின்
            முன்னோர் காலைப் பன்நூல் பயிற்றிய
            நல்லிசை நாட்டத் துல்லியன் கண்ட
            குளமும் பொய்கையுங் கூவலும் வாவியும்
       70   அளவிறந்து இனியவை அசைவிடத்து உடைத்தாய்ப்
            பயப்பறு பாலை நிலனும் ஒருபால்
            இகக்கல் ஆகா இரண்டினுள் உவப்பதை
            ஓட்டுக வல்லிரைந்து என்றலி உதயணன்
 
              காட்டுப் பெருவழி கடத்தல் மேவான்
       75   நாட்டுப் பெருவழி நணுகக் காட்டிப்
            பொருள்வயின் பிரிவோர் வரவுஎதிர் ஏற்கும்
            கற்புடை மாதரிற் கதுமென உரறி
            முற்றுநீர் வையகம் முழுதும் உவப்பக்
            கருவி மாமழை பருவமொடு எதிரப்
       80   பரவைப் பௌவம் பருகுபு நிமிர்ந்து
            கொண்மூ விதானம் தண்ணிதின் கோலித்
            திருவில் தாமம் உருவுபட நாற்றி
            விடுசுடர் மின்னொளி விளக்க மாட்டி
 
              ஆலி வெண்மணல் அணிபெறத் தூஉய்க்
       85   கோல வனப்பில் கோடணை போக்கி
            அதிர்குரல் முரசின் அதிர்தல் ஆனாது
            தூநிறத் தண்துளி தான்நின்று சொரிந்து
            வேனில் தாங்கி மேனி வாடிய
            மண்ணக மடந்தையை மண்ணும்நீ ராட்டி
       90   முல்லைக் கிழத்தி முன்னருள் அதிரப்
            பல்லோர் விரும்பப் பரந்துகண் அகன்று
            பொருள்வயின பிரிந்து பொலங்கல வெறுக்கையொடு
            இருள்வயின் வந்த இன்னுயிர்க் காதலன்
            மார்பகம் மணந்த நேரிழை மடந்தையர்
       95   மருங்குல் போலப் பெருங்கவின் எய்திய
            சிறுகொடி ஊழ்ஊழ் பரப்பி மற்றவர்
            முறுவல் அரும்பிய முல்லை அயல்
 
              குரவும் தளவும் குருந்தும் கோடலும்
            அரவுகொண்டு அரும்ப அறுகால் வண்டினம்
      100    அவிழ்பதம் பார்த்து மகிழ்வன முரலக்
            கார்வளம் பழுனிக் கவினிய கானத்து
            ஏர்வளம் படுத்த எல்லைய வாகி
            உறங்குபிடித் தடக்கை ஒருக்குநிரைத் தவைபோல்
            இறங்குகுரல் இறடி இறுங்குகடை நீடிக்
      105    கவைக்கதிர் வரகும் கார்பயில் எள்ளும்
            புகர்ப்பூ அவரையும் பொங்குகுலைப் பயறும்
            உழுந்தும் கொள்ளும் கொழுந்துபடு சணாயும்
            தோரையும் துவரையும் ஆயவும் பிறவும்
 
              அடக்கல் ஆகா விடற்கரு விளையுள்
      110   கொல்லை பயின்று வல்லை ஓங்கிய
            வரையின் அருகா மரைஆ மடப்பிணை
            செருத்தல் தீம்பால் செதும்புபடப் பிலிற்றி
            வெண்பூ முசுண்டைப் பைங்குழை மேயச்
            சிறுபிணை தழீஇய திரிமருப்பு இரலை
      115    செறிஇலைக் காயா சிறுபுறத்து உறைப்பத்
            தடவுநிலைக் கொன்றையொடு பிடவுதலைப் பிணங்கிய
            நகைப்பூம் புறவில் பகல்துயில் அமரா
            வரித்தார் அணிந்த விரிப்பூந் தொழுதிப்
            புல்லுதள் இனத்தொடு புகன்றுவிளை யாடும்
      120    பல்இணர்ப் படப்பைப் படிஅணை பெருங்கடி
            பகர்விலைப் பண்டமொடு பல்லோர் குழீஇ
            நகரங் கூஉ நாற்றம் நந்திப்
            பல்லாப் படுநிரைப் பயம்படு வாழ்க்கைக்
            கொல்லைப் பெருங்குடிக் கோவலர் குழீஇய
      125    முல்லைப் பெருந்திணை புல்லுபு கிடந்த
            ஐம்பதின் இரட்டியொடு ¬¬ஐந்து எல்லையுள்
            மன்பெருஞ் சிறப்பின் மாலை யாமத்துச்
            சென்றது மாதோ சிறுபிடி விரைந்துஎன்.