57. படை வீடு

இதன்கண்: உதயணனும் வாசவதத்தையும் தம்இளைப்பு நீங்குதற்பொருட்டு இடபகன் படைகளோடே சென்று சயந்தி நகரத்தைச் சார்ந்த மலைச்சாரலின்கண்  இடபகன் அமைத்துத் தந்த படைவீட்டின்கண் தங்கியது கூறப்படும்.
 
              பொருபடை இளையர் புகன்றனர் சூழ்ந்து
            செருவடு செம்மலைச் செல்லல் ஓம்பிக்
            கூப்பிய கையினர் காப்பொடு புரிய
            வண்டுஅலர் படலை வயந்தக குமரனும்
        5   தண்டத் தலைவனும் தலைப்பெய்து ஈண்டிக்
            கனிபடு கிளவியைக் கைஅகப் படுத்துத்
            துனிவொடு போந்த தோழனைத் துன்னி
            இழுக்கா இயல்பின் ஒழுக்கம் ஓம்பி
 
              வஞ்சமில் பெரும்புகழ் வத்தவர் இறைவனும்
       10   நெஞ்ச மகிழ்ந்து நீத்துமிகம் உடைய
            துன்பப் பெருங்கடல் துறைக்கண் பொருந்திய
            இன்பப் பெரும்புணை ஆயினிர் எமக்கென
            அன்புடை அருள்மொழி நன்புபல பயிற்றி
            ஆர்வத் தோழரை ஆர்தல் ஆற்றான்
       15   வீரத் தானை வேந்தன் விரும்பி
            நறைமலர்ச் சோலை இறைகொண்டு இருப்பப்
 
              பெருமூ தாளரும் பெருங்கிளைச் சுற்றமும்
            திருமா தேவிக்குத் தெரிவனர் அமைத்த
            வண்ண மகளிரொடு வையம் முந்துறீஇ
       20   வந்தொருங்கு ஈண்டிய பின்றைச் சயந்தி
            நாடுவண்டு அரற்றும் கோடுயர் சாரல்
            இறைமகன் விட்டிட உறையுள் முறைமையின்
            மறுகு முற்றமும் மாண்பட வகுத்துக்
            தறிமிசைக் கொளீஇய செறிநூன் மாடமொடு
       25   நிரைநிரை கொண்ட நுரைபுரை திருநகர்
            பசும்பொன் புளகம் விசும்புபூத் ததுபோல்
            பரந்த பாடி நிரந்தவை தோன்றப்
 
              பேணார்க் கடந்த பிரச்சோ தனன்மகள்
            பூணார் ஆகத்துப் பொங்கிள வனமுலை
       30   வள்ளிதழ்க் கோதை வாசவ தத்தைக்குப்
            பள்ளி மாடமும் பால்பட அமைத்துப்
            பாவையும் முற்றிலும் பூவையும் குழலும்
            பைம்பொன் கவறும் பளிக்குமணி நாயும்
            சந்தனப் பலகையும் சந்தப் பேழையும்
       35   சாந்துஅரை அம்மியும் தேங்கண் காழ்அகில்
            புகைத்துளை அகலும் சிகைத்தொழிற் சிக்கமும்
            கோதைச் செப்பும் கொடிக்கொட்ட டகரமும்
            கிளியு மயிலுந்....................................
            தெளிமொழிப் பூவையும் செம்பொன் கரண்டமும்
 
         40   மணிக்கலப் பேழையும் மணிக்கண் ணாடியும்
            மணிதிகழ் விளக்கும் மயிர்வினைத் தவிசும்
            இருக்கைக் கட்டிலும் அடைப்பைத் தானமும்
            செங்கோ டிகமும் வெண்பால் தவிசும்
            முட்டிணை வட்டும் பட்டிணை அமளியும்
       45   ஆல வட்டமும் மணிச்சாந்து ஆற்றியும்
            மாலைப் பந்தும் ஏனைய பிறவும்
            ஏந்திய கையர் மாந்தளிர் மேனி
            மடத்தகை மகளிர் படைப்பொலிந்து இயல
 
              அரைசியல் முறைமையின் அண்ணல் சுமைந்த
       50   விரைபரி மாவும் வேழமும் தேரும்
            தெள்ளொளித் திரள்கால் திகழ்பொன் அல்கிய
            வெள்ளிப் போர்வை உள்ஒளிப் படலத்து
            வள்ளிக் கைவினை வனப்புஅமை கட்டிலும்
            விளங்குமணி முகட்டின் துளங்குகதிர் நித்திலக்
       55   கோவைத் தரளம் கொட்டையொடு துயல்வரும்
            கொற்றக் குடையும் வெற்றி வேலும்
            கொடியும் கவரியும் இடிஉறழ் முரசும்
            சங்க படவமும் கம்பல விதானமும்
            அங்காந்து இயன்ற அழல்உமிழ் பேழ்வாய்ச்
       60   சிங்கா சனமும் பொங்குபூந் தவிசும்
            பள்ளிப் பலவகைப் படுப்பவும் பிறவும்
            வள்ளிப் போர்வையும் வகைவகை அமைத்துத்
 
              தெளியப் படூஉ முளிவில் செய்தொழில்
            சிலதரும் இயவரும் சிந்து தேசப்
       65   பலவகை மரபில் பாடை மாக்களும்
            ஆய்நல மகளிர் வேய்நலம் பழித்த
            தோடர வந்த ஆய்தொழி லாளரோடு
            என்னோர் பிறரும் துன்னினர் சுற்ற
            ஏவற்கு அமைந்த காவல் தொழிலொடு
       70   கைக்கோல் இளையரும் கணக்குவினை யாளரும்
            மெய்க்கோள் மள்ளரும் மீளி மாந்தரும்
 
              புற்றகத்து ஒடுங்கி முற்றிய காலை
            ஈரம் பார்க்கும் ஈயற் கணம்போல்
            நேரம் பார்த்து நெடுந்தகைக் குரிசிலை
       75   மீட்டிடம் பெற்றுக் கூட்டிடம் கூடிக்
            கடிதுசெல் இயற்கைப் பிடிமிசை இருந்த
            வருத்தம் அறிந்து மருத்துவர் வகுத்த
            அரும்பெறல் அடிசில் அவிழ்பதம் கொள்ளும்
            பெரும்பகல் நாழிகை பிழையாது அளக்குநர்
       80   செவ்வி அறிந்து கவ்விதின் மொழிய
 
              நள்ளிருள் நிடைப்பிடி ஊர்ந்த நலிவினும்
            பள்ளி கொள்ளாப் பரிவிடை மெலிவினும்
            கவர்கணை வேடரொடு அமர்வினை வழியினும்
            பல்பொழுது உண்ணாப் பசியினும் வருந்திய
       85   செலவக் காளை வல்லவன் வகுத்த
            வாச வெண்ணெய் பூசிப் புனைந்த
            காப்புடை நறுநீர் காதலின் ஆடி
            யாப்புடைத் தோழரொடு அடிசில் அயில
 
              நிறைத்துவர் நறுநீர் சிறப்பொடு ஆடிய
       90   தாமரை முகத்தியைத் தமனியப் பாவையிற்
            காமர் கற்சுனைத் தானம்முதல் நிறீஇத்
            தன்ன மகவயின் தவாஅத் தாதைக்கு
            முன்னர் எழுந்த முழுக்கதம் போலப்
            புறவயின் பொம்மென வெம்பி அகவயின்
       95   தண்மை அடக்கிய நுண்நிறைத் தெண்ணீர்
            வரிவளைப் பணைத்தோள் வண்ண மகளிர்
            சொரிவனர் ஆட்டித் தூசுவிரித்து உடீஇக்
            கோங்கின் தட்டமும் குரவின் பாவையும்
            வாங்கிக் கொண்டு வாருபு முடித்து
 
        100    மணிமா ராட்டத்து அணிபெற வழுத்திக்
            காவலன் மகளைக் கைதொழுது ஏத்தி
            ஆய்பத அடிசில் மேயதை ஊட்டி
            அவிழ்மலர்ப் படலைத் தந்தை அகவயின்
            நிகழ்வதை நிகழ்த்திப் புகழ்வரும் பொலிவொடு
      105    பரிசனம் சூழ்ந்து பரிவுநன்கு ஓம்ப
            அன்றை அப்பக அசைஇ ஒன்றிய
            துன்பப் பெருங்கடல் நீந்தி இன்பத்து
            ஏம நெடுங்கரை எய்தி யாமத்து
 
              மதியம் பெற்ற வானகம் போலப்
      110    பொதிஅவிழ் பூந்தார் புரவலன் தழீஇச்
            சுரமுதல் நிவந்த மரமுதல் தோறும்
            பால்வெண் கடலின் பனித்திரை அன்ன
            நூல்வெண் மாடம் கோலோடு கொளீஇ
            மொய்த்த மாக்கட் டாகிஎத் திசையும்
      115    மத்த யானை முழங்கு மாநகர்
            உத்தர குருவின் ஒளிஒத் தன்றால்
            வித்தக வீரண் விறல்படை வீடுஎன்.