தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

tamilnadu_temples_new

அருள்மிகு மன்னார்கோவில் இராஜகோபாலசுவாமி குலசேகரஆழ்வார் திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

வேறு பெயர்கள் :

வேதநாராயணர்

ஊர் :

மன்னார்கோவில்

வட்டம் :

அம்பாசமுத்திரம்

மாவட்டம் :

திருநெல்வேலி

சமய உட்பிரிவு - திருக்கோயிலில் உள்ள மூலவர் சமய உட்பிரிவு விவரம் (சைவம் / வைணவம் / அம்மன் / முருகன் / கிராமதெய்வம் / சமணம் / பௌத்தம் / இதரவகை) :

வைணவம்-பெருமாள்

மூலவர் பெயர் :

வேதநாராயணர்

உலாப் படிமம் பெயர் :

தாயார் / அம்மன் பெயர் :

வேதவல்லி, புவனவல்லி

தலமரம் :

பலா, செண்பகம்

திருக்குளம் / ஆறு :

ப்ருகு தீர்த்தம்

ஆகமம் :

வைகானச ஆகமம்

பூசைக்காலம் :

விஸ்வரூபம், காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்

திருவிழாக்கள் :

குலசேகராழ்வார் அவதரித்த நாள் மாசி, புனர்பூசம், மாசித் தெப்பம், வைகுண்ட ஏகாதசி, குலசேகராழ்வார் முக்தியடைந்த நாள் தை, திருவாதிரை

தலவரலாறு :

புராணக்காலத்தில் வேதபுரி எனவும், சோழர்கள் காலத்தில் “இராஜேந்திர விண்ணகர்“ என்றும் அழைக்கப்பட்ட இக்கோயில் திருவரங்கம் கோயிலுக்கு இணையானது. இக்கோயில் மூலவர் மற்றும் தாயார் சிலைகளை நிறுவியவர்கள் ப்ருகு மகரிஷியும், மார்க்கண்டேய மகரிஷியும் ஆவர். இக்கோயில் காண்பதற்கு அரிய வகையான அஷ்டாங்க விமானத்தின் கீழ் அமைந்துள்ளது. அஷ்டாங்கம் என்பது எட்டு அங்கங்களை உடையது ஆகும். திராவிடபாணி கட்டடக்கலை என்று இதனைக் கூறுவர். இக்கோயிலின் அஷ்டாங்க விமானத்திற்கு கீழ் பெருமாள் நின்று, இருந்து, கிடந்த கோலங்களில் அருள் பாலிக்கிறார். ஏழு பிரகாரங்களை இக்கோயில் உள்ளடக்கியுள்ளது. குலசேகரஆழ்வார் அரச பதவியினைத் துறந்து இக்கோயிலில் வந்து மங்களாசாசனம் பாடி, முக்தியடைந்தார். அவர் வணங்கிய பெருமாளின் திருவுருங்கள் இன்றும் கோயிலில் உள்ளன.

பாதுகாக்கும் நிறுவனம் :

இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.

அருகில் உள்ள கோவில்கள் / தொல்லியல் சின்னங்கள் :

கிருஷ்ணசுவாமி கோயில், அம்பை காசிப நாதர் கோயில், பாபநாசம் சிவன் கோயில்

சுருக்கம் :

சோழர்கள் காலத்தில் இக்கோயில் “இராஜேந்திர விண்ணகர்“ என்றழைக்கப்பட்டுள்ளது. இவ்வூர் வேதபுரி என்று வழங்கப்பட்டுள்ளது. குலசேகர ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. 108 திவ்யதேசங்களுள் ஒன்றாகும். குலசேகரஆழ்வார் பூசித்து வந்த பெருமாள் திருவுருவம் இன்றும் இக்கோயிலில் உள்ளது. இக்கோயில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும். இக்கோயில் தாங்குதளத்தில் யாளி வரிகளும், யானைகளும் காட்டப்பட்டுள்ளன. மேலும் பாதகண்டப்பகுதியில் சதுர வடிவ புடைப்புச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மூன்று நிலையில் இங்கு இறைவன் அருள்பாலிக்கிறார். நின்று, இருந்து, கிடந்த கோலங்களில் திருவுருவங்கள் உள்ளன. மேலும் இக்கோயிலின் விமானம் வில்வண்டியின் இருபுறம் போன்று இலாட வடிவில் நீண்ட செவ்வகமாக அமைக்கப்பட்டுள்ளது. திருமாலின் கிடந்த கோலத்திற்கேற்ப இவ்வகை விமானம் அமைக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் இவ்வகையான விமானத்தை பீமரதத்தில் காணலாம். அது திருமாலுக்கானது. மூன்று அடுக்குகளைக் கொண்ட கருவறைகளை கொண்டதாக விமானம் அமைந்துள்ளது. அஷ்டாங்க விமானம் அதாவது எட்டுப்பட்டையுடைய விமானம் இங்கு அமைந்திருப்பது தனிச்சிறப்பு. மண்டபங்களில் அமைந்துள்ள எழில்மிகு பெண் உருவங்கள் மற்றும் அரச உருவங்கள் அழகுடையதாகும்.

காலம் / ஆட்சியாளர் :

கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர் (முதலாம் பராந்தகனாய் இருக்கலாம்)

கல்வெட்டு / செப்பேடு :

கருவறை விமானத்தின் தாங்குதளத்தின் உறுப்புகளான ஜகதியிலும், குமுதத்திலும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கல்வெட்டுகளில் இக்கோயில் இராஜேந்திர விண்ணகர் என்றும், இவ்வூர் வேதபுரி என்றும் வழங்கப்படுகிறது.

சுவரோவியங்கள் :

இல்லை

சிற்பங்கள் :

இக்கோயிலின் கருவறை விமானத்தின் தாங்குதளத்தில் யாளி, யானை வடிவங்கள் புடைப்புச் சிற்பங்களாகக் காணப்படுகின்றன. கூரைப்பகுதியில் உள்ள கூடுமுகங்களில் திருமால் வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நுழைவுவாயிலின் இருபுறமும் அமைந்துள்ள கைப்பிடிகள் யாளிப்பிடிகளாக உள்ளன. மேலும் மண்டபங்களில் அரசத் திருவுருவங்களும், பெண்களும், அடியார்களும் நின்ற கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளனர். எழில்மிகு பெண்கள் சிற்பம் இங்கு நின்றவண்ணம் உள்ளன. காமச் சிற்பங்களும் ஆங்காங்கே காட்டப்பட்டுள்ளன.

கோயிலின் அமைப்பு :

இக்கோயிலின் கருவறை விமானம் மூன்று அடுக்குகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. இலாட வடிவில் விமானம் அமைந்துள்ளது. அதாவது வில்வண்டியின் இருபுறமும் போல விமானத்தின் சிகரம் அமைந்துள்ளது. பெருமாளின் கிடந்த கோலத்திற்கேற்ப நீண்ட செவ்வகவடிவில் கருவறை அமைந்துள்ளது. தாங்குதளத்தில் இருந்து கூரைப்பகுதி வரை கற்றளியாகவும் அதன் மேற்பகுதி சுதையாகவும் அமைக்கப்பட்டுள்ளது. தாங்குதளத்தின் வேதிகை உறுப்பின் கீழ் அமைந்த பாத கண்டப்பகுதியில் சதுர வடிவ புடைப்புச் சிற்பங்கள் கருவறையைச் சுற்றிலும் அமைந்துள்ளன. மேலும் தாங்குதளத்தின் குமுத உறுப்பினைத் தொடர்ந்து உள்ள பாதகண்டப்பகுதியில் யாளிவரிகள் செல்கின்றன. இவை மிகவும் எழில் வாய்ந்தவை. மிகுந்த வழவழப்புத் தன்மை கொண்டவையாக அமைக்கப்பட்டுள்ளது. இராமானுஜருக்கு தனி திருமுன் அமைக்கப்பட்டுள்ளது. இத்திருமுன்னின் முன்னால் மிக உயரத் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. தாயாருக்கு தனி திருமுன் அமைந்துள்ளது. ஆழ்வார்களின் வரிசை காணப்படுகின்றது. விஸ்வக்சேனருக்கு சிறிய கருவறை காட்டப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு கிழக்குமுகத்தில் இராஜகோபுரம் அமைந்துள்ளது.

அமைவிடம் :

அருள்மிகு இராஜகோபாலசுவாமி குலசேகர ஆழ்வார் திருக்கோயில், மன்னார்கோவில், திருநெல்வேலி-627 413

தொலைபேசி :

04634-253921

இணையதளம் :

மின்னஞ்சல் :

கோவில் திறக்கும் நேரம் :

காலை 6.00 -10.00 முதல் மாலை 5.30-8.30 வரை

செல்லும் வழி :

திருநெல்வேலி-பாபநாசம் நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள அம்பாசமுத்திரத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் தென்காசி செல்லும் வழியில் இக்கோயில் அமைந்துள்ளது.

அருகிலுள்ள பேருந்து நிலையம் :

அம்பாசமுத்திரம், தென்காசி, திருநெல்வேலி

அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் :

அம்பாசமுத்திரம், தென்காசி, திருநெல்வேலி

அருகிலுள்ள விமான நிலையம் :

மதுரை

தங்கும் வசதி :

அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, தென்காசி, திருநெல்வேலி
சாலை வரைபடம்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:44(இந்திய நேரம்)