தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • தமிழ்
  • English

4.2 சிலப்பதிகாரத்தின் சிறப்புச் செய்திகள்

  • 4.2 சிலப்பதிகாரத்தின் சிறப்புச் செய்திகள்

    இளங்கோவடிகளின் கற்பனைத் திறன், பக்தி இலக்கிய
    முன்னோடியாக அமைந்தமை, பத்தினியின் பெருமை, முத்தமிழ்த்
    தன்மை, வரலாற்றுச் சிறப்பு ஆகிய சிறப்புச் செய்திகளைப் பற்றிப்
    பார்ப்போம்.

    4.2.1 இளங்கோவடிகளின் கற்பனைத் திறன்

    சிலப்பதிகாரம் உலகப் பெருங்காப்பியங்களுள் ஒன்று. ஒரு
    பேரிலக்கியத்தில் எதிர்பார்க்கும் அனைத்துச் சுவைகளும் இதில்
    உண்டு. அடிகளின் கற்பனை வளத்திற்குச் சில எடுத்துக்காட்டுக்கள்
    காண்போம்.

    அடிகளின் கற்பனைத் திறத்திற்கு நல்ல சான்றாக அமைவது
    அவருடைய வையை வருணனையாகும். “வையை என்னும்
    பொய்யாக் குலக்கொடி, புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி”
    என்று புகழும் அடிகள், அக்கொடியின் பேரழகினை வருணிக்கும்
    அழகே அழகு!

    இவ்வாறே மதுரைக் கோட்டையின் மீது பறக்கும் பாண்டியனின்
    வெற்றிக் கொடிகளைப் பாராட்டும் அடிகள்,
    போருழந்து எடுத்த ஆர்எயில் நெடுங்கொடி
    வாரல் என்பன போல் மறித்துக்கை காட்ட

    (மதுரைக்காண்டம், புறஞ்சேரியிறுத்த காதை,
    வரிகள்: 189-190)

    என்றார். பாண்டியன் கோட்டை மீது நாட்டிய வெற்றிக் கொடிகள்,
    கண்ணகிக்கும், கோவலனுக்கும் விரைவில் வரப் போகும்
    துயரத்தை மனம் கொண்டு அவர்களை நோக்கி “ மதுரைக்கு
    வாராது நீங்குக” என்பது போல் மறித்து ஆடின என்கின்றார்.
    இவ்வாறே வையை, தன் உடம்பைப் பூவாடையால் போர்த்துக்
    கொண்டும், தன் தண்ணீரை அடக்கிக் கொண்டும் சென்றாள்
    என்கிறார். அடிகளின் கற்பனை ஆற்றலை வரிப்பாடல்களால்
    தெளிவாக உணரலாம்.

    4.2.2 பக்தி இலக்கிய முன்னோடி

    அடிகளின் ஆய்ச்சியர் குரவையும், வேட்டுவ வரியும், குன்றக்
    குரவையும் பல்லவர் காலத்துப் பக்திப் பாடலாசிரியர்களாம்
    நாயன்மார்கட்கும் ஆழ்வார்கட்கும் வழிகாட்டியாய் அமைகின்றன.
    பின்வரும் பாடல்களைக் காண்க.
    மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
    தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் தான் போந்து
    சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
    சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே
    திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே!

    (மதுரைக்காண்டம், ஆய்ச்சியார் குரவை)

    இது திருமால் துதியாகும்.

    அணிமுகங்கள் ஓராறும் ஈராறு கையும்
    இணையின்றித் தானுடையான் ஏந்திய வேலன்றே
    பிணிமுகம் மேற் கொண்டு அவுணர் பீடு அழியும் வண்ணம்
    அணிவிசும்பின் கோன் ஏத்த மாறட்ட வெள்வேலே

    (மதுரைக்காண்டம், குன்றக் குரவை)

    இது முருகப் பெருமான் புகழ்ச்சியாகும்.

    4.2.3 பத்தினியின் பெருமை

    பெண்ணின் பெருமை பேச வந்த காப்பியம் சிலப்பதிகார
    மாகும். மதுரை மாநகரைக் காவல் செய்த தெய்வம் கண்ணகியின்
    முன் தோன்றுவதற்கு அஞ்சுகிறது. பின்பக்கமாக நின்று பேசுகிறது.
    தீக்கடவுள் அவள் ஏவல் கேட்கின்றது. தேவர்கள் விண்ணூர்தியில்
    வந்து கண்ணகியை அழைத்துச் செல்கின்றனர். இப்படித்
    தெய்வங்கட்குத் தெய்வமாகக் கண்ணகியைக் காட்டுகிறார் அடிகள்.
    விண்ணரசு போற்றும் தெய்வத்தை மண்ணரசர் போற்றுவதில்
    உயர்வில்லையே! சேரன் எடுத்த பத்தினிக் கோட்டத்திற்குக்
    கொங்கனும், ஈழ மன்னரும் வருகின்றனர்; மாளுவ நாட்டரசன்
    வருகின்றான். இப்படி, பத்தினி வழிபாட்டை முதன் முதலாக
    அறிமுகம் செய்கிறார் இளங்கோவடிகள்.
    வானம் பொய்யாது வளம்பிழைப்பு அறியாது
    நீள்நில வேந்தர் கொற்றம் சிதையாது
    பத்தினிப் பெண்டிர் இருந்தநாடு.

    (மதுரைக்காண்டம், அடைக்கலக்காதை, வரிகள்: 145 -147)

    என்பது அடிகள் வாக்கு.

    கற்புக்கடம் பூண்ட இத்தெய்வம் அல்லது
    பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலமால்

    (மதுரைக்காண்டம், அடைக்கலக்காதை, வரிகள்: 143 -144)

    என்று துறவியான கவுந்தியடிகளைச் சொல்ல வைத்துள்ளார்
    அடிகள்.

    4.2.4 முத்தமிழ்க் காப்பியம்

    சிலப்பதிகாரத்திற்குப் பல சிறப்புகள் உண்டு. அவற்றுள்
    ஒன்று அது முத்தமிழ்க் காப்பியம் என்பது. செஞ்சொற்களால்,
    கற்பனை சிறக்கப் பாடப்பட்ட இயற்றமிழ்க் காப்பியத்தில்
    முத்தமிழின் சிறந்த கூறுகளான இசைத்தமிழ்க் கூறுகளும்
    நாடகத்தமிழ்க் கூறுகளும் செறிந்து கிடக்கின்றன.

    பண்டையத் தமிழக மக்கள் நாட்டுப்புறங்களில் பாடியும்,
    ஆடியும் களித்தனர். அக்களிப்பினை நேரில் கண்ட அடிகள்
    அவர்தம் ஆடலுக்கும், பாடலுக்கும் முதன்முறையாக இலக்கிய
    வடிவம் தந்தார். அவைகளே கானல் வரியும், வேட்டுவ வரியும்,
    ஆய்ச்சியர் குரவையும், அம்மானையும், கந்துக வரியும், ஊசல்
    வரியும்.

    தமிழிசையின் கூறுகளான பண், திறம், தூக்கு ஆகியனவும்,
    குரல், முதலிய ஏழு சுரங்களும், ஏழு பாலைப் பாடல்களும்,
    பாடலாசிரியன், யாழாசிரியன், குழலாசிரியன் தண்ணுமை
    ஆசிரியன் ஆகியோரின் இலக்கணங்கள் ஆகியவையும்
    அரங்கேற்று காதையில் விளக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறே மாதவி ஆடிய அல்லியம், கொடுகொட்டி,
    பாண்டரங்கம், முதலிய பதினொருவகை ஆடலையும் தேசி,
    மார்க்கம், வேத்தியல், பொதுவியல் என்று பாகுபாடு செய்யப்பட்ட
    பல்வேறு ஆடல் மரபுகளையும் ஆசிரியர் இக்காதையில்
    விளங்கியுள்ளார்.

    நாடக மேடையின் அமைப்பு, அதில் தூணின் நிழல்
    புறம்படுமாறு விளக்கமைத்தல், மூன்று வகையான திரைச்சீலைகள்
    முதலிய கூறுகள் பலவற்றையும் ஆசிரியர் இந்நூலில் பொதிந்து
    வைத்துள்ளார்.
    குழல்வழி நின்றது யாழே யாழ்வழித்
    தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப்
    பின்வழி நின்றது முழவே முழவொடு
    கூடி நின்று இசைத்த தாமந் திரிகை

    (புகார்க்காண்டம், அரங்கேற்றுக்காதை, வரிகள்: 139 -142)

    என்ற பகுதி பல கருவிகளும் கூடி இசைக்கும் அழகைக் கூறுவது
    காண்க.

  • குடிமக்கள் காப்பியம்

  • உலகமொழிகள் பலவற்றிலும் காப்பியங்கள் உண்டு. அவையாவும்
    பெரும்பாலும் மன்னர் குடும்பத்தினரையே தலைமக்களாய்க்
    கொண்டவை. ஆனால் தமிழின் முதற்காப்பியமோ குடிமக்கள்
    காப்பியமாகத் திகழ்கின்றது. நாடாளும் மன்னன், குடிமக்களுள்
    ஒரு பெண்ணிடம் தோற்றுப் போகிறான். முடி மன்னர்களுக்கு
    வரம் கொடுக்கும் கடவுளாகக் குடிமகள் ஒருத்தி உயர்ந்து
    நிற்கிறாள் என்று காட்டும் சிலம்பு தனிச்சிறப்பு மிக்க காப்பியமாம்.
    4.2.5 ஒற்றுமைக் காப்பியம்

    தமிழின ஒற்றுமையையும், சமய ஒற்றுமையையும் வலியுறுத்தும்
    முதற்காப்பியம் சிலப்பதிகாரம்.
  • தமிழ் இன ஒற்றுமை

  • சிலப்பதிகாரமே முதலில் தமிழகத்தை ஒன்றாகக் கண்டது;
    தமிழன் என்ற இன உணர்ச்சிக்கு வித்திட்டது; பிறவிப்
    பகைவர்களாகத் தம்முள் போரிட்டழிந்தனர் தமிழ் மன்னர்கள்.
    அடிகேளா பாண்டியன் அவல முடிவைக் கேட்டுச் சேரன்
    வருந்துவதனைக் காட்டியுள்ளார். தமிழரசர் வீரத்தை இகழ்ந்த
    ஆரிய மன்னரை அடக்க ஒன்றுபட்ட தமிழ் இனத்தின்
    சார்பாளனாக வடநாடு சென்றான் சேரமன்னன்.

    வாழ்த்துக் காதையில் சேரநாட்டுப் பெண்கள் சோழநாட்டுப்
    பெண்கேளாடு கூடிநின்று மூவேந்தர் புகழையும் பாடி
    மகிழ்கின்றனர். இப்படி, தம் காப்பியத்தைக் கருவியாகக் கொண்டு
    ஒன்றுபட்ட தமிழகத்தை நமக்கு முதன்முதலில் அறிமுகம் செய்து
    வைத்த இளங்கோவடிகள் பாராட்டுக்கு உரியவர்.
  • சமய ஒற்றுமை

  • சிலம்புக்குள்ள     இன்னொரு     சிறப்பாவது     அது
    சமயங்களுக்கிடையே சகிப்புத் தன்மையை வற்புறுத்துவதாக
    அமைந்துள்ளது. அடிகள் சமணர். ஆனால் பிற சமய வெறுப்பை
    ஓரிடத்தும் காட்டவில்லை. சமணத் துறவி கண்ணனை வழிபடும்
    மாதரியிடம் மதிப்புக் கொண்டுள்ளார். மாதரியும் சமணத்
    துறவியைக் கண்டு காலில் வீழ்ந்து பணிகின்றாள். குன்றக்
    குரவையில் முருகனையும், வேட்டுவ வரியில் கொற்றவையையும்,
    ஆய்ச்சியர் குரவையில் திருமாலையும் அடிகள் வாழ்த்துகிறார்.
    அவ்வக் கடவுளையும்     பாடும்பொழுது சமமான பக்தி
    கொண்டவராக அடிகள் தோன்றுகின்றார். சாவக நோன்பியான
    கோவலன் வைதீக அந்தணர்களிடம் பரிவு காட்டுகிறான்;
    அவர்களுக்குச் செல்வத்தை வாரி வழங்குகின்றான். மாடல
    மறையோன் என்ற அந்தணன் கோவலனை உளமார
    வாழ்த்துகின்றான். இங்ஙனம் பல நிலையினரும் பகையின்றிக் கூடி
    வாழும் இனிய நிலையினை ஒரு சமரச ஞானியைத் தவிரப் பிறர்
    யாரும் காட்ட முடியாது.
    4.2.6 வரலாற்றுப் பெட்டகம்

    எல்லாவற்றுக்கும் மேலாக, சிலப்பதிகாரம் பண்டைத்
    தமிழரின் வரலாற்றையும், பண்பாட்டையும் உணர உதவும்
    பெட்டகமாக விளங்குகின்றது. சேர சோழ பாண்டிய மரபினர்
    பலருடைய போர் வெற்றியும், அவர் தம் தலைநகர்களின்
    அமைப்பும், வளமும், தமிழரின் வணிகச் சிறப்பும், சமய
    வாழ்க்கையும், கலைமரபும், நம்பிக்கையும், பழக்க வழக்கங்களும்
    மிக விரிவாக விளக்கப்பட்ட ஒரு தலைசிறந்த காப்பியமாகச்
    சிலப்பதிகாரம்
    விளங்குகின்றது. தமிழர் திருமணத்தில் நான்மறை
    அந்தணர் சடங்கு செய்தலைச் சிலப்பதிகாரமே முதலில்
    கூறுகின்றது. இந்திரவிழாவைத் தமிழர் கொண்டாடியது பற்றிய
    விரிவான செய்தி இந்நூலில் தான் முதன்முதல் சொல்லப்படுகிறது.
    தமிழரின் இசை, கூத்து ஆகிய கலைகள் பற்றிய முழுமையான
    செய்திகளை விரிவாகத் தருவதும் இந்நூலேயாகும். சுருங்கச்
    சொன்னால் சிலப்பதிகாரம் தமிழர் தம் அரசியல், மற்றும்
    பண்பாட்டு வரலாற்றுப் பெட்டகம் ஆகும்.
    1.
    இளங்கோவடிகள் மூவேந்தர் மரபுகளில் எதனைச்
    சார்ந்தவர்?
    2.
    இளங்கோவடிகளின் தந்தை பெயர் யாது?
    3.
    இளங்கோவடிகள் எந்தச் சமயத்தினைத் தழுவியவர்?
    4.
    இளங்கோவடிகள் தவம் செய்த இடம் எது?
    5.
    கண்ணகியை அடைக்கலமாக ஏற்றவள் யார்? அவள்
    எக்குலத்தினள்?
    6.
    புகார்க் காண்டத்தில் உள்ள உட்பிரிவுகள் எத்தனை?
    7.
    சிலப்பதிகாரத்தில் உள்ள வரிப்பாடல்கள் இரண்டைக்
    குறிப்பிடுக.
    8.
    கண்ணகிக் கோட்டத்தில் பூசைகள் செய்த பெண்ணின்
    பெயர் யாது?
    9.
    பத்தினிக் கோட்ட விழாவிற்கு வந்த இலங்கை வேந்தன்
    பெயர் யாது?
    10.
    மாதவி எந்தச் சமயத்தைத் தழுவினாள்?
புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 23:02:14(இந்திய நேரம்)