Primary tabs
-
5.0 பாட முன்னுரை
கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் தமிழகம் முதன்முறையாக அயலவர்க்கு அடிமையாயிற்று. பாண்டிய நாடும் சோழநாடும் களப்பிரர் என்ற கூட்டத்தார்க்கு அடிமைப்பட்டன. நடுநாடும் தொண்டைநாடும் பல்லவர்க்கு அடிமைப்பட்டன. இவர்கள் இருவரும் வேற்றுமொழியினர். பிராகிருதம் இவர்களின் ஆட்சிமொழியாயிற்று. பாலிமொழியும் வடமொழியும் இவர்களால் பேணப்பட்டன. தமிழ் வளர்ச்சி இதனால் தடைப்பட்டது. சமணமும் பௌத்தமும் வைதீக மதத்தை எதிர்த்துப் போராடிய காலம் இதுவாகும். காஞ்சியில் வடமொழிக் கல்லூரி செயல்பட்டது. அது கடிகா எனப்பட்டது. புதுச்சேரியை அடுத்த பாகூரிலும், தொண்டை நாட்டுச் சோழ சிங்கபுரத்திலும் வடமொழிக் கல்லூரிகள் இருந்தன. தமிழ் மொழிக்கு இத்தகைய வாய்ப்புச் சிறிதும் இல்லை. மாறாக மதுரையில் இருந்த தமிழ்ச்சங்கம் வீழ்ச்சியுற்றது. இத்தகைய இருண்ட சூழ்நிலையில், சமணர், பௌத்தர், சைவர், வைணவர் ஆகிய சமயத்தவர் தத்தம் சமயக் கொள்கைகளைப் பரப்பும் நோக்குடன் நூல்கள் இயற்றினர். அவர்களுள் சைவ சமய முன்னோடிகளாகத் திகழ்ந்தோர் இருவர். அவர்கள் காரைக்கால் அம்மையாரும், திருமூலநாயனாரும் ஆவர். இவ்விருவரும் களப்பிரர் தமிழ் நாட்டைக் கைப்பற்றி ஆண்ட இருண்ட காலப்பகுதியில் வாழ்ந்து, சைவ சமயத்தின் எழுச்சிக்கு அடிக்கல் நாட்டினர். இவர்கள் காலத்தில் வாழ்ந்த சமணச் சான்றோர் சிலர் எலி விருத்தம், கிளி விருத்தம், நரி விருத்தம் என்ற பெயர் கொண்ட நூல்களை இயற்றியுள்ளனர். சமயச் சார்பற்ற நூல்கள் பல இயற்றப்பட்டிருப்பினும் அவை கிட்டாது மறைந்தன. எஞ்சியது முத்தொள்ளாயிரம் என்னும் நூலின் ஒரு பகுதி மட்டுமே.
இப்பாடம் சைவ சமய முன்னோடிகளில் ஒருவரான திருமூலரது அருளிச் செயல் பற்றியும், முத்தொள்ளாயிரம் பற்றியும் விளக்குகின்றது.