தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4-4:4-குயில்பாட்டு

  • 4.4 குயில்பாட்டு

    பாரதி 1921 இல் அமரர் ஆனார். அவரது ‘குயில் பாட்டு’ 1923இல் அச்சேறியது. இந்தப் பாட்டுக்குப் பாரதியார் தந்த தலைப்புக் ‘குயில்’ என்பதே. பாரதியாரின் ‘குயில்’ கையெழுத்துப் படியில் ‘இது எழுதப்பட்ட காலம் 1914 அல்லது 1915’ என்று குறிக்கப்பட்டிருப்பதாகச் சீனி.விசுவநாதன் குறிக்கின்றார்.

    (மகாகவி பாரதி - சில புதிய உண்மைகள் பக்.129)

    புதுவையில் முத்தியாலுப்பேட்டை என்றொரு பகுதி நகரின் மேற்கே உள்ளது. அங்கு கிருஷ்ணசாமிசெட்டியார் என்பவருக்கு ஒரு தோப்பு இருந்தது. மரங்கள் அடர்ந்து செழித்த அங்கு இயற்கையின் முழு எழில் கோலமிட்டிருந்தது. அந்தத் தோப்பிற்குச் சென்ற பாரதியார் அதன் இயற்கை அழகில் மயங்கினார்; அங்குத் தொடர்ந்து குயில் கூவுவதைக் கேட்டார். குயில் பாட்டு உடனே பாரதியாரிடம் தோன்றி விட்டது. புதுவையில் அவரோடு இருந்த வ.ரா.என்று பெயர் பெற்ற வ.ராமசாமி ஐயங்கார் கூறுகின்றார்;

    "முத்தையாலுப்பேட்டை கிருஷ்ணசாமி செட்டியாரின் தோட்டத்திலே நோக்கி நோக்கிக் களியாட்டம் ஆடுவார் பாரதியார். அவருடைய ஆனந்தம் வர்ஷ தாரையாகப் பெருக்கடையும். உன்மத்தனைப் போலச் சில சமயங்களில் அவர் ஆகி விடுவார்....குரலிலே ஸரிக-க-காமா; காலிலே தாளம்; கைகள் கொட்டி முழங்கும். உடல் முழுதும் அபிநயந்தான் ... குழந்தை பிறந்தவுடன் சோர்ந்து நித்திரையில் ஆழ்ந்துவிடும் தாய்மார்களைப் போல, கவிதை பிறந்தவுடன் பாரதியார் சோர்ந்து போய் மண் தரையில் படுத்துக் கொள்வார்"

    - (மகாகவி பாரதியார், பக்.87)

    இவ்வாறு தான் குயில்பாட்டுத் தோன்றியது. இது பட்டப் பகலில் பாவலர்க்குத் தோன்றுவதாம் நெட்டைக் கனவின் விளைச்சல். "உண்மையிலேயே இது ஒரு கனவு; மதுமயக்கத்தில் உண்டாகும் மிகைப் பேச்சுப் போல, கவிக்கு அருள் வந்த வேளையில் மெய்மறந்து கொட்டிய கற்பனை" என்கிறார் கு.ப.ராஜகோபாலன் ( கண்ணன் என் கவி.பக்.35)

    4.4.1 குயிலின் கதை

    குயில் பாட்டின் கதை விந்தையானது. புதுவை நகரின் மேற்கில் ஒரு மாஞ்சோலை. அங்கு வேடர் வாராத ஒரு நாளில் விந்தைக் குயிலொன்று பாடியது.

    காதல் காதல் காதல்
    காதல் போயின் காதல் போயின்
    சாதல் சாதல் சாதல்

    (குயிலின் பாட்டு - 1)

    என்று துள்ளும் இன்ப வெறியும் துயரும் கலந்த குரலில் குயில் பாடியதைக் கவிஞன் கேட்டான். குயிலே! உன் துயரம் யாது என்று அதனிடம் வினவினான். நான் மனிதர்களின் மொழியெல்லாம் அறியும் பேறு பெற்றேன்; பாட்டில் நெஞ்சைப் பறி கொடுத்தேன்; இப்போது காதலை வேண்டிக் கரைகின்றேன் என்றது அந்தப் பெண் குயில். கவிஞனுக்குக் குயிலின் மீது அடங்காக் காதல் பிறந்து விட்டது. அந்த நேரத்தில் மற்ற பறவைகளெல்லாம் சோலைக்கு வந்துவிட்டன. காதலுக்குரிய தனிமை போய்விட்ட சூழலில் குயில் கவிஞரை நான்காம் நாள் அவ்விடத்திற்கு மறவாமல் வந்து விடக்கூறி மறைந்து விடுகிறது.

    கவிஞனின் காதல் மனம் உறங்கவில்லை; காதலியைப் பிரிந்த துயர் வருத்த மறுநாளே சோலைக்குச் செல்கின்றான். அங்குக் குயில் ஒரு குரங்கோடு காதல்மொழி பேசிக் கொண்டிருந்தது. நீசக் கருங்குயில் நெருப்புச் சுவைக் குரலில் "காதல் காதல் காதல்", என்ற முன்னாள் இசைத்த அதே பாட்டைப் பாடிக் குரங்கின் அழகைப் பாராட்டிக் கொண்டிருந்தது. கவிஞன் வாளை உருவிக் குரங்கின மீது வீச, குரங்கு தாவி ஒளிந்தது. குயிலும் பிற பறவைகளும் மறைந்தன.

    இரவு முழுவதும் துயில் கொள்ளாமல் இருந்து மூன்றாம் நாட் காலையில் கவிஞன் சோலைக்குச் சென்றான். அப்போது குயில் கிழக் காளை மாடு ஒன்றோடு காதல் மொழி பேசிக்கரைந்து கொண்டிருந்தது. ‘காதல் காதல் காதல்’ என்ற அதே பாட்டில் சோலை முழுவதையும் குயில் சொக்க வைத்துக் கொண்டிருந்தது. கவிஞன் சினம் பெருக வாளை உருவிக் காளையின் மீது வீச, காளை ஓடிவிடக் குயிலும் மற்றைப் பறவைகளும் மறைந்தன.

    நான்காம் நாள் கவிஞன், சோலையிலே குயிலைச் சந்தித்து அதன் வஞ்சகப் பொய்ம்மையை எடுத்துரைக்கின்றான். குயில் கண்ணில் நீர் சிந்தத் தன் முற்பிறவிக் கதையைக் கூறுகின்றது. "சேரநாட்டின் மலைச் சாரலில் பிறந்த சின்னக்குயிலி என்பாள், தன் மாமன் மகன் மாடன் என்பவனையும் தனக்காக மணம் நிச்சயிக்கப்பட்ட நெட்டைக் குரங்கன் என்பவனையும் புறக்கணித்து விட்டு மலைச்சாரலுக்கு வரும் சேர இளவரசன்பால் மையல் கொள்கிறாள். மாடனும் குரங்கனும் சேர இளவலை வெட்டி வீழ்த்துகின்றனர். மறுபிறப்பில் சந்திப்பதாகக் கூறி இளவரசன் விழி மூடுகின்றான். மறு பிறப்பிலும் காதலர் சேர முடியாதவாறு மாடனும் குரங்கனும் இடையூறு செய்கின்றனர். குயிலியைக் குயிலாக மாற்றி விடுகின்றனர்". இந்தக் கதையைப் பொதிகை மலை முனிவர் குயிலிடம் கூறி விட்டு அதன் சாபம் தொண்டை நாட்டு மாஞ் சோலையில் தீருமென்றும் கூறுகிறார்.

    கவிஞன் குயிலின் பழம்பிறப்பையும் மாடன் குரங்கனின் மாமாயச் செயல்களையும் உணர்ந்து தெளிகிறான். குயிலை முத்தமிடுகிறான். குயில் மறைந்து அங்கே கொள்ளை வனப்புடைய பெண் நிற்கிறாள். அப்பெண்ணைத் தழுவி முத்தமிட்டு மோகப் பெருமயக்கில் ஆழ்ந்திருக்கும் போது, பெண், சோலை ஆகிய எல்லாம் மறைந்து விடக் கவிஞன் சுவடி, எழுதுகோல், பத்திரிகை, பழம்பாய் ஆகியவை சூழ்ந்த தன் வீட்டில் இருப்பதைக் கண்டான்.

    4.4.2 உள்ளுறையும் தத்துவமும்

    குயிலின் கதை முடிந்த பிறகு குயில் பாட்டின் இறுதியில் கவிஞர் மூன்று அடிகளில் ஒரு வினாவை எழுப்புகின்றார்.

    ஆன்ற தமிழ்ப் புலவீர்! கற்பனையே ஆனாலும்
    வேதாந்தமாக விரித்துப் பொருள் உரைக்க
    யாதானும் சற்றே இடமிருந்தாற் கூறீரோ!

    (குயில் பாட்டு, இறுதி அடிகள்)

    இவ்வினாவே இப்பாட்டு ஓர் உள்ளுறை உடையது என்பதைக் காட்டி விடுகிறது. எனவே இப்பாட்டு வேதாந்த உள்ளுறை உடையது என்று கருதினர் சிலர்; வேறு சிலர் இதில் சித்தாந்த உள்ளுறை அமைந்திருப்பதாகக் கூறினர். எவ்வாறாயினும், குயில், மாடு, குரங்கு என்பவற்றைக் குறியீடுகளாகக் கருதும் நிலையில் இப்பாட்டு ஒரு தத்துவ உள்ளுறை உடையதே என்பது புலப்படும்.

    குயில்பாட்டு வேதாந்தக் குறியீடுகள்

    குயில்

    இறைவன்

    குரங்கு, மாடு

    மாயை

    வாள்

    அறிவு (ஞானம்)



    வேதாந்த நெறிப்படி இறைவனும் உயிரும் வேறு வேறு அல்ல. இரண்டையும் வேறு வேறாகக் காட்டுவது மாயையின் செயல். இந்த மாயை பக்தி, ஞான, கர்மயோகங்களால் விலகும். இதன்படி நோக்கக் குயில் நாத வடிவான இறைவனின் குறியீடு என்பது விளங்கும். கவிஞன் பாட்டின் பொருண்மை எனில், குயில் அப்பாட்டின் நாதம். இரண்டும் ஒன்றுபடத் தடையாயிருப்பது மாயை. மாயை மாடாகவும் குரங்காகவும் வந்து பொய்த் தோற்றங்களைப் படைக்கின்றது. அறிவு என்ற வாளின் வீச்சிலே பொய்த் தோற்றம் கலைகிறது.

    எத்தனை கோடி படை கொண்டு வந்தாலும்
          மாயையே - நீ
    சித்தம் தெளிவெனும் தீயின்முன்
          நிற்பாயோ - மாயையே

    (மாயையைப் பழித்தல் - 1)

    என்று பாரதி தெய்வப் பாடல்களில் மாயை குறித்துப் பாடியுள்ளார். மாயை வகுத்தளிக்கும் பொய்க்காட்சி, புலனின்பம் ஆகியவற்றைத் தாண்டி உயிர் இறைவனைச் சேர்தலை இப்பாட்டு விளக்குவதாக அறிஞர் கருதுவர்.

    குயில்பாட்டின் தத்துவ உள்ளுறை

    குயில்

    சீவான்மா (உயிர்) (Soul)

    கவிஞன்

    பரமாத்மா (கடவுள்) (God)

    குரங்கு

    மனம் (mind)

    மாடு

    ஐம்பொறி (Senses)

    உடைவாள்

    ஞானம் (மெய்யறிவு) (Real Knowledge)

    ஏனைய பறவைகள்

    உலகியல் (Worldly life)

    சோலை

    பிரபஞ்சம் (Universe)

    நான்குநாள்

    சீவன் பக்குவம்
    பெறுவதற்குரிய காலம்
    (Time required for the
    soul to be fit)

    இப்பாட்டில் குயில் - சீவான்மா, கவிஞன் - பரமாத்மா, குரங்கு- மனம், மாடு-ஐம்பொறி, உடைவாள்-ஞானம், ஏனைய பறவைகள்- உலகியல், சோலை-பிரபஞ்சம், நான்கு நாள்- சீவான்மா பக்குவம் பெறுவதற்குரிய காலம் என்ற வகையில் தத்துவம் அடங்கியதாகக் கருதுவர்.

    இப்பாடலைச் சைவ சித்தாந்த நோக்கில் கணிப்பவர்,

    "ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலங்களில் காதலை மாயா சக்தியாகவும் ஆணவம், கன்மம், என்பவைகளை மாடனும் குரங்கனுமாகப் பாவித்து, குயிலைப் பசுவாக ஆன்மாவாகப் பாவித்து மன்னவன் மகனைப் பதியாகப் பாவித்துப் பொருள்கொள்ளுவதே பொருத்தமுடைத்தாம்

    - (பாரதியார் வரலாறும் கவிதையும், பக்.110)

    குயில்பாட்டு : சைவசித்தாந்த நோக்கு

    காதல்

    மாயை

    மாடன்

    ஆணவம்

    குரங்கு

    கன்மம்

    குயில்

    பசு

    சேர இளவரசன்

    பதி

    என்று பேராசிரியர் சுந்தரம் விளக்குகின்றார். இப்பாட்டு, நாட்டு விடுதலையை உள்ளடக்கிய ஓர் ஆன்ம விடுதலை நோக்கமுடையது என்று கூறுவதையும் காணலாம். தேச விடுதலை என்ற நிலையிலிருந்து அதன் மேற் பரிணாம நிலையாகிய ஆன்ம விடுதலை முயற்சியில் இறங்கிய அரவிந்தரைப் போலவே, பாரதியும் எண்ணியதன் விளைவாகப் பாரதி இப்பாட்டைப் பாடியிருக்கலாம். (ஆய்வுக் களங்கள்; கு.வெ. பாலசுப்பிரமணியன், பக்.120)

    4.4.3 கற்பனை வீச்சு

    பாரதியின் பாடல்களிலேயே மிக நீண்ட பாட்டுக் குயில்பாட்டேயாகும். கீட்ஸ் பாடிய நைட்டிங்கேல் பறவைப் பாட்டு இப்பாட்டை இசைக்கத் தூண்டுகோலாய் இருந்திருக்கலாம். ஆனால் கற்பனை வீச்சில் குயில்பாட்டு எல்லா எல்லைகளையும் தாண்டிச் செல்கிறது. குயில் குரங்கைப் பாராட்டுகிறது.

    வேகமுறத் தாவுகையில் வீசி எழுவதற்கே
    தெய்வம் கொடுத்த திருவாலைப் போலாமோ?
    சைவசுத்த போசனமும், சாதுரியப் பார்வைகளும்
    வானரர்போற் சாதியொன்று மண்ணுலகின் மீதுளதோ?

    (குயிலும் குரங்கும் - 5)

    கற்பனை வேகத்தில் குரங்கின் வால் கூடத் திரு என்ற அடைமொழி பெறுகின்றது. காலைப் பொழுதின் இளவெயில் வானத்தில் மேகங்களைப் பல நிறங்களாகக் காட்டுகின்றது.

    தங்கம் உருக்கித் தழல் குறைத்துத் தேனாக்கி
    எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ?

    (இருளும் ஒளியும் - 5)

    தங்கத்தை உருக்கினால் போதுமா? சூட்டை மாற்றித் தேனைப்போல இனிமை பொங்க எங்கும் பரவச் செய்த அழகு என்கிறார் கவிஞர். உலகையும் உலகிலுள்ள பல்வேறு இயற்கைக் கூறுகளையும் இறைவன் படைத்திருக்கலாம். ஆனால் அவன் படைப்புகளிலேயே மிக உயர்ந்தது பாட்டு என்னும் கலையேயாம் என்கிறார் கவிஞர்.

    ஆனாலும் நின்றன் அதிசயங்கள் யாவினுமே
    கானாமுதம் படைத்த காட்சிமிக விந்தையடா!
    காட்டு நெடுவானம் கடலெல்லாம் விந்தையெனில்
    பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா!

    (குயிலும் மாடும் - 7)

    என்று பாட்டுக் கலையைப் போற்றும் கவிஞர் அந்தப் பாட்டுக் கலைக்குரிய நாதம்-இசைக்கூறு, அதனையுடைய குயில், கவிஞனின் கை தீண்டியவுடன் பெண்ணாய் உருச்சமைந்து பேசாத எழிலோவியமாய்த் தம் முன்னே நிற்பதாகக் கற்பனை செய்கிறார். அவள் எப்படி இருந்தாள்?

    கற்றவர்க்குச் சொல்வேன்; கவிதைக் கனிபிழிந்த
    சாற்றினிலே, பண்கூத்துஎனும் இவற்றின் சாரமெலாம்
    ஏற்று, அதனோடே இன்னமுதைத் தான் கலந்து
    காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால்
    மாதவளின் மேனி வகுத்தான் பிரமன்என்பேன்

    (குயில் பாட்டு - 9)

    என்கிறார். ஒரு பெண்ணின் வடிவத்தை இவ்வளவு கற்பனை வீச்சுக் கொள்ளும்படி யாரும் புனையவில்லை. குயில்பாட்டு ஒரு கற்பனைக் களஞ்சியம் எனில் மிகையில்லை.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:56:28(இந்திய நேரம்)