Primary tabs
-
6.0 பாட முன்னுரை
பழமொழி நானூறு என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூல் பழமொழி என்றும் வழங்கப்படும். இந்நூலில் கடவுள் வாழ்த்து நீங்கலாக உள்ள நானூறு வெண்பாக்களும் நானூறு பழமொழிகளைக் கொண்டு விளங்குகின்றன. ஒவ்வொரு வெண்பாவும் ஒவ்வொரு சிறந்த கருத்தை உணர்த்துகிறது. படிப்பவர் எளிமையாகக் கற்கும் வண்ணம் சொல்லும் கருத்துகளின் அடிப்படையில் 34 அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சில அதிகாரங்கள் 10 வெண்பாக்களைக் கொண்டுள்ளன. சில அதிகாரங்களில் 10-க்கு மேற்பட்ட வெண்பாக்கள் உள்ளன. எஞ்சியவற்றில் 10-க்குக் குறைவான வெண்பாக்கள் உள்ளன. இவற்றைப் பற்றிய கருத்துகள் இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.
இந்நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார். முன்றுறை என்பது ஊர். அரையனார் என்பதால் சிற்றரசராக இருக்கலாம். சமண சமயத்தைச் சேர்ந்த இவர் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தார்.