Primary tabs
1.5 சொல் இலக்கண அறிமுகம்
எழுத்து இலக்கணத்திற்கு அடுத்து, எழுத்துகளால் ஆன சொல்லின் இலக்கணம் கூறப்படுகிறது. சொல்லுக்கு இருவகையான விளக்கம் தரப்படுகிறது.
1. சொல் எழுத்துகளால் உருவானதாக இருக்க வேண்டும்.
சொல், எழுத்து இலக்கணத்தில் சொல்லப்பட்ட உயிர், மெய், உயிர்மெய், ஆய்தம் முதலிய எழுத்துகளால் உருவானதாக இருக்க வேண்டும். எழுத்துகள் அல்லாமல் வேறு ஓசைகளால் வருபவற்றைச் சொல் என்று கூறுவதில்லை.
தொண்டையைக் கனைத்தல்முக்குதல்சீழ்க்கைஇவற்றைச் சொல் என்று கூறுவதில்லை.
2. சொல் பொருள் தருவதாக இருக்க வேண்டும்.
எழுத்துகளால் உருவானதாக இருந்தாலும் பொருள் தருவதாக இருந்தால் மட்டுமே அது சொல் எனப்படுகிறது. பொருள் தராதவை சொல் எனப்படுவது இல்லை.
னேரூவீ லோபுவெ
இவை எழுத்துகளால் உருவாக்கப் பட்டிருந்தாலும் பொருள் தரவில்லை. எனவே இவற்றைச் சொல் என்று கூறுவதில்லை.
திணை
மக்கள், தேவர், நரகர் ஆகியவர்கள் உயர்திணை எனப்படுவர். இவர்களைத் தவிர்த்து உலகில் இருக்கும் உயிர் உள்ளவை, உயிர் அற்றவை யாவும் அஃறிணை எனப்படும்.
பால்
ஆண்பால், பெண்பால், பலர்பால் ஆகிய மூன்றும் உயர்திணை ஆகும். ஒன்றன்பால், பலவின்பால் ஆகிய இரண்டும் அஃறிணை எனப்படும்.
எண்
ஒன்று என்கிற எண்ணைக் குறிப்பது ஒருமை ஆகும். மற்ற அனைத்தும் பன்மை ஆகும். இவற்றைப் பின்வருமாறு காட்டலாம்.
முருகன் வந்தான்உயர்திணைஆண்பால்ஒருமைநங்கை வந்தாள்உயர்திணைபெண்பால்ஒருமைமனிதர்கள் வந்தனர்உயர்திணைபலர்பால்பன்மைமாடு வந்ததுஅஃறிணைஒன்றன்பால்ஒருமைநாய்கள் வந்தனஅஃறிணைபலவின்பால்பன்மைஇடம்
இடம் மூன்று வகைப்படும். அவை தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகியனவாகும்.
பேசுபவர் தன்னைக் குறிப்பது தன்மை ஆகும்.
நான், நாம்
பேசுபவர் தன் முன் உள்ளவரைக் குறிப்பது முன்னிலை ஆகும்.
நீ, நீர்
பேசுபவர் தன்னையோ முன் உள்ளவரையோ குறிக்காமல் தொலைவில் உள்ளவரைக் குறிப்பது படர்க்கை ஆகும்.
அவன், அவள்
1.5.1 செய்யுளில் வரும் சொற்கள்
இலக்கியங்களில் வரும் சொற்கள் நான்கு வகைப்படும்.
1. இயற்சொல் 2. திரிசொல் 3. திசைச்சொல் 4. வடசொல்
• இயற்சொல்
செந்தமிழ் நாட்டில் வழங்கி, எல்லோருக்கும் இயல்பாகப் பொருள் விளங்கும்படி உள்ள சொல் இயற்சொல் எனப்படும்.
கல், மண், மரம், நிலம், அவன், நான், நீ முதலியன இயற்சொற்கள் ஆகும்.
• திரிசொல்
ஒரு பொருள் தரும் பல சொல்லாகவும், பல பொருள் தரும் ஒரு சொல்லாகவும் வந்து, எளிதாகப் பொருள் உணர முடியாதபடி உள்ள சொற்கள் திரிசொற்கள் ஆகும்.
ஒரு பொருள் தரும் பல சொல்: வெற்பு, விலங்கல், பொருப்பு, பொறை, நவிரம், குன்று முதலிய சொற்கள் மலை என்ற ஒரே பொருள் தருகின்றன.
பல பொருள் தரும் ஒரு சொல்: வாரணம் என்ற சொல் கோழி, சங்கு, யானை, பன்றி ஆகிய பொருள்களைத் தரும்.
இவ்வாறு எளிதில் பொருள் உணர இயலாமல் வரும் சொற்கள் திரிசொற்கள் எனப்படும்.
• திசைச்சொல்
செந்தமிழ் நிலத்தைச் சுற்றியுள்ள மற்ற நாடுகளில் பேசப்படும் மொழிகளில் இருந்து வந்து தமிழில் வழங்கும் சொற்கள் திசைச்சொற்கள் எனப்படுகின்றன.
சொல்பொருள்நாடுதள்ளை=தாய்=குட்ட நாடுஅச்சன்=தந்தை=குட நாடுகேணி=கிணறு=அருவாநாடுஎலுவன்=தோழன்=சீதநாடு• வடசொல்
சமஸ்கிருத மொழியை வடமொழி என்று குறிப்பிடுகிறோம். அந்த வடமொழியிலிருந்து வந்து தமிழில் வழங்கும் சொற்களை வடசொற்கள் என்று கூறுவர்.
கந்தம், ஞானம், வீரம், சுகம், புராணம் முதலியன வடசொற்கள் ஆகும்.
இலக்கண அமைப்புப்படி சொற்களை,
1. பெயர்ச்சொல்
2. வினைச்சொல்
3. இடைச்சொல்
4. உரிச்சொல்என்று நான்கு வகையாகப் பிரிப்பார்கள்.
• பெயர்ச்சொல்
ஒன்றன் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லுவது பெயர்ச்சொல் ஆகும். மரம், கல், மண் முதலியன பெயர்ச்சொற்கள் ஆகும். பெயர்ச் சொற்களுக்கு இரண்டு வகையாக இலக்கணம் சொல்லப்படுகிறது.
1. பெயர்ச் சொல் வேற்றுமையை ஏற்கும்.
2. பெயர்ச் சொல் காலம் காட்டாது.பெயர்ச் சொற்களுக்குப் பின் வேற்றுமை உருபுகள் வந்து நிற்கும்.
நாய் என்பது ஒரு பெயர்ச் சொல். இதனுடன் வேற்றுமை உருபுகள் சேர்ந்து பின்வருமாறு அமையும்.
நாய் + ஐ = நாயை - (இரண்டாம் வேற்றுமை)
நாய் + ஒடு = நாயொடு - (மூன்றாம் வேற்றுமை)
நாய் + கு = நாய்க்கு - (நான்காம் வேற்றுமை)நாய், கல், மரம், முதலிய பெயர்ச் சொற்கள் காலத்தைக் காட்டவில்லை என்பதை அறியலாம்.
பெயர்ச் சொற்களை ஆறு வகையாகப் பிரிக்கலாம்.
பொருள் பெயர்-மரம், மாடு, பாண்டியன், குழலிஇடப்பெயர்-ஊர், சென்னை, மேடு, மதுரை.காலப்பெயர்-ஆண்டு, வெள்ளிக்கிழமை, சித்திரை, காலை.சினைப்பெயர்-கை, கண், மூக்கு, வால், கிளை, வேர்.குணப்பெயர்-நன்மை, வெண்மை, தண்மை, கருமை.தொழில் பெயர்-நடத்தல், கொடுத்தல், செய்தல், கற்றல்.• வினைச் சொல்
ஒரு செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.
கற்றான், நிற்கிறாள், வருவார் முதலியன வினைச் சொற்கள் ஆகும். வினைச் சொல்லின் இலக்கணம் பின்வருமாறு.
1. வினைச்சொல் காலம் காட்டும்
2. வினைச்சொல் வேற்றுமையை ஏற்காது.வினைச் சொற்கள் காலத்தைக் காட்டும் தன்மை கொண்டவை. காலம் மூன்று வகைப்படும்.
- இறந்தகாலம் - சென்றான், உண்டான், வந்தாள், படித்தார்.
- நிகழ்காலம் - செல்கிறான், உண்கிறான், வருகின்றாள், படிக்கிறார்.
- எதிர்காலம் - செல்வான், உண்பான், வருவாள், படிப்பார்.
மேலே காட்டிய வினைச் சொற்களுடன் வேற்றுமை உருபுகளைச் சேர்க்க முடியாது. எனவே, அவை வேற்றுமை உருபுகளை ஏற்காது என்பதை அறியலாம்.
வினைச் சொற்கள் எதிர் மறையாகவும் வரும்.
செல்லும்Xசெல்லாதுநிற்கும்Xநிற்காதுஓடும்Xஓடாதுநடக்கும்Xநடக்காதுவினைச் சொற்களில் பல வகைகள் உள்ளன.
முற்று
முற்றுப் பெறுகின்ற வினை, முற்றுவினை எனப்படும்.
நான் நம்பியைப் பார்த்தேன்.
இதில் பார்த்தேன் என்னும் சொல்லில் பார்த்தல் என்னும் செயல் முற்றுப் பெற்றுள்ளது. எனவே இது முற்று வினை எனப்படும்.
எச்சம்
முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் வினை, எச்ச வினை எனப்படும்
மணி வந்து போனான்.
மரத்திலிருந்து உதிர்ந்த பழம்.இந்தத் தொடர்களில் உள்ள வந்து என்ற வினையும் உதிர்ந்த என்ற வினையும் முற்றுப் பெறாமல் உள்ளன. எனவே இவை எச்ச வினை எனப்படும். எச்ச வினை பெயரைக் கொண்டும் முடியும்; வினையைக் கொண்டும் முடியும். பெயரைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் எனப்படும். வினையைக் கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம் எனப்படும்.
ஓடிய குதிரை.
பாடிய பாட்டு.
பாய்கின்ற வெள்ளம்.
பெய்யும் மழை.இவை எல்லாம் பெயரைக் கொண்டு முடிவதால் பெயரெச்சம் எனப்படும்.
சென்று பேசினான்.
வந்து போனான்.
கற்றுத் தேர்ந்தான்.இவை எல்லாம் வினையைக் கொண்டு முடிவதால் வினையெச்சம் எனப்படும்.
• இடைச்சொல்
தனித்து இயங்காமல் பெயருடன் அல்லது வினையுடன் சேர்ந்து வரும் சொற்கள் இடைச்சொற்கள் எனப்படும். இடைச்சொற்கள் தனித்துப் பொருள் தருவதில்லை.
இடைச் சொற்கள் எட்டு வகைப்படும்.
1. வேற்றுமை உருபுகள்
முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபுகள் இல்லை. இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை வரை உள்ள ஆறு வேற்றுமைகளுக்கும் உருபுகள் உண்டு. அவை,
இரண்டாம் வேற்றுமை-ஐமூன்றாம் வேற்றுமை-ஆல்நான்காம் வேற்றுமை-குஐந்தாம் வேற்றுமை-இன்ஆறாம் வேற்றுமை-அதுஏழாம் வேற்றுமை-கண்என அமைந்துள்ளன.
2. காலம் காட்டும் இடைநிலைகளும் விகுதிகளும்.
வினைச் சொற்களில் வரும் காலம் காட்டுகின்ற இடைநிலைகளும் விகுதிகளும் இடைச் சொற்கள் ஆகும். கிறு, கின்று, ஆநின்று முதலியவை காலம் காட்டும் இடைநிலைகள். அன், ஆன் முதலியவை விகுதிகள்.
3. உவம உருபுகள்
உவமைத் தொடர்களில் வரும் உவம உருபுகள்.
தாமரை போல் மலர்ந்த முகம்.
இதில் போல் என்பது உவம உருபு
4. சாரியைகள்
சந்தி இலக்கணத்தில் வரும் சாரியைகள்.
ஆல்+அம்+காடு = ஆலங்காடு
என்பதில் அம் சாரியை ஆகும்.
5. தத்தம் பொருளை உணர்த்தி வருபவை
ஏ, ஓ, உம் முதலிய இடைச் சொற்கள் தத்தம் பொருளை உணர்த்தி வருபவை.
அவனே கொண்டான்-ஏஅவனோ கொண்டான்-ஓஅவனும் வந்தான்-உம்6. இசைநிறை
ஏ, ஒடு முதலிய இடைச் சொற்கள் இசைநிறையாக வரும்.
ஏஏ இவள் ஒருத்தி பேடியோ-ஏஇவளொடு-ஒடு7. அசைநிலை
மன், மற்று, கொல் ஆகிய இடைச் சொற்கள் அசைநிலையாக வருபவை.
ஒப்பர்மன்-மன்மற்றுஎன்-மற்றுஆய்மயில்கொல்-கொல்8. குறிப்பால் பொருள் உணர்த்துபவை
பொள்ளென, கதும்என, சரேல்என இவற்றில் வரும் என என்பது குறிப்புப் பொருள் உணர்த்தும் இடைச்சொல் ஆகும். மேலே காட்டியவாறு இடைச்சொல் எட்டு வகைகளில் அமைந்துள்ளது.
• உரிச்சொல்
உரிச்சொல் இலக்கணம் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
1.பல வகைப்பட்ட பண்புகளையும் உணர்த்தி வரும். (பண்பு - குணம்)2.பெயர்ச் சொல்லையும் வினைச் சொல்லையும் சார்ந்து வரும்.3.ஒரு சொல் ஒரு பொருளை உணர்த்துவதாகவும், ஒருசொல் பல பொருளை உணர்த்துவதாகவும் இருக்கும்.4.செய்யுளுக்கு உரியதாய் வரும்.மேலே காட்டியபடி உரிச்சொல்,
1. ஒரு குணம் தழுவிய உரிச்சொல்
2. பல குணம் தழுவிய உரிச்சொல்என இரண்டு வகைப்படும்.
1. ஒரு குணம் தழுவிய உரிச்சொல்
ஒரு குணம் தழுவிய உரிச்சொல் என்பது, ஒரு பொருள்தரும் பல சொற்களைக் குறிக்கும்.
எடுத்துக்காட்டு
சால, உறு, தவ, நனி, கூர், கழி ஆகிய சொற்கள் மிகுதி என்ற ஒரே பொருள் தரும்.
எனவே இவற்றை ஒரு குணம் தழுவிய உரிச்சொல் எனலாம்.
2. பல குணம் தழுவிய உரிச்சொல்
பல பொருள்களைத் தரும் ஒரு சொல்லைப் பல குணம் தழுவிய உரிச்சொல் என்று கூறுவர்.
எடுத்துக்காட்டு
கடி என்ற சொல் காப்பு, கூர்மை, மிகுதி, விரைவு, அச்சம், சிறப்பு முதலிய பல பொருள்களைத் தரும்.
எனவே இதைப் பல குணம் தழுவிய உரிச்சொல் எனலாம்.