Primary tabs
-
6.0 பாட முன்னுரை
உலகில் மிகவும் இன்றியமையாத ஒரு தொழில் வேளாண்மை. வேளாண்மைத் தொழில் இல்லாமல் உலகில் உணவு உற்பத்தி இல்லை. உணவு இல்லாமல் எவரும் உயிர்வாழ முடியாது. அதனால்தான் சங்ககாலப் புலவர் குடபுலவியனார்
"உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே"(புறநானூறு-18)
என்று பாடினார். அவரே ‘உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே’ என்றும் பாடியுள்ளார். நீர்பாய்ச்சி நிலத்தில் வேளாண்மை செய்ய, பண்டைக் காலம் முதல் மக்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்தனர். அதனால் விளைவு பெருகியது. பெரும்பாலும் வேளாண்மை அடிப்படையாகவே வணிகமும் ஏற்பட்டது. உற்பத்தியாகும் பொருள்களை மக்களிடம் கொண்டு செலுத்துவோர் வணிகர்களே. அவர்களிடையே உள்ள பல்வேறு பிரிவுகளையும், வணிகத்தின் சிறப்பியல்புகளையும் கல்வெட்டுகள் கூறுகின்றன. வேளாண்மைச் சிறப்பையும், வணிகப் பெருமையையும் இப்பாடத்தில் நாம் காணலாம்.