தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வாழ்வியல் முறைகள்

  • 1.4 வாழ்வியல் முறைகள்

    விடுதலைக்கு முற்பட்ட காலத்தில் மக்களின் வாழ்வியல் முறை எப்படி இருந்தது என்பதைப் பற்றிக் ‘கோபல்லபுரத்து மக்கள்’ நாவல் மூலம் அறிந்து கொள்ளலாம். இல்லத்தில் அவர்கள் கடைப்பிடித்த பழக்க வழக்கங்களையும், சமுதாயத்தில் நிலவிய கல்வி முறைகளையும் ஒரு சில உதாரணங்கள் மூலம் தெளிவுபடுத்தலாம்.

    1.4.1 பழக்க வழக்கங்கள்

    அக்காலச் சமுதாயத்தில் காணப்பட்ட பழக்க வழக்கங்கள் நாவலில் இடம் பெற்றுள்ளன. அவை பின்வருமாறு

    • நெருப்புதானம்

    தானம் பலவகைப்படும். அதில் நெருப்பு தானமும் ஒன்று. நெருப்பைப் பாதுகாத்து வைத்து இல்லாதவர்கள் வந்து கேட்கும்போது சிறிது கொடுப்பது ரேணம்மாவின் வேலையாக இருந்தது. அக்கால மக்கள் தானங்களில் சிறந்தது நெருப்புதானம் என்று கருதினர்.

    • வைகறைத் துயிலெழல்

    இந்நாவலில் மக்கள் வைகறையில் கோழி கூவியவுடன் துயிலெழுவதையே பெருமையாகக் கருதினர். பொழுது விடிந்து எழுந்தால் அது அம்மக்களுக்கு அவமானமாக இருக்கிறது என்பது இதன்மூலம் புலப்படுகிறது.

    • செவ்வாய்க்கிழமை விரதம்

    இந்நாவலில் இடம்பெறும் பெண்களால் ஆடி, தை, மாசி மாதங்களில் செவ்வாய்க்கிழமை இரவு விரதம் கடைப்பிடிக்கப்படுவதால், ஆண்கள் எல்லாம் மடத்தில் சென்று படுத்து விடுவார்கள். இந்த விரதத்தைப் பற்றி ஆண்கள் கூட்டத்தில் பேச்சுகள் யூகமாகவும் கற்பனையாகவும் தான் இருந்தது. பெண்கள் செவ்வாய்க்கிழமைகளில் செய்யும் கொழுக்கட்டைகளை ஆண்களுக்குக் கொடுத்தால் கண் தெரியாமல் போய்விடும் என்று கருதினர். இந்த விரதம் இன்றும் கிராமப்புறங்களில் நடைமுறையில் உள்ளது.

    1.4.2 கல்வியும் பயிற்சியும்

    ஏட்டுப் பள்ளிக்கூடத்தில் பூமணல் அடித்து அதில் விரலால் கோடு கிழித்து எழுதிப் படித்தனர். பிறகுதான் எழுத்தாணி பிடித்து ஓலை ஏட்டில் எழுதப் பயிற்சி அளிக்கப்பட்டது. ஊருக்கு ஏட்டுப்பள்ளி வந்த விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த மாணவன் அதிகாலையில் எழுந்து முதலில் பள்ளிக்கு வருகிறானோ அவனுக்கு ‘ஏரான்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஏட்டுப்பள்ளிக்குச் சாமிக்கண்ணாசாரி ஆசிரியராக வருகிறார். அவர் உருவாக்கிய சரஸ்வதி தேவியை அலங்கரிக்கப்பட்ட தேரில் ஊர்வலமாகக் கொண்டு வந்து பாட்டுப்பாடிக் கொண்டே சுற்றிலும் கோலாட்டம் அடிப்பர். வன்னிமரம் நடப்பட்டிருக்கும் இடத்திற்குத் தேர்வந்து சேரும். ஆசிரியர் வன்னிமரத்தின் மீது வில்லை வளைத்து அம்பு எய்வார். அதைத் தொடர்ந்து வன்னிமரம் பிடுங்கப்படும். இந்த ‘மா நோன்பு ஊர்வலம்’ வருடாவருடம் நடைபெறுகிறது.

    • சிலம்பப் பயிற்சி (கம்பு சுற்றி ஆடும் ஆட்டம்)


     
    ஏட்டுக்கல்வியைப் பகலிலும், சிலம்பப் பயிற்சியை இரவிலும் சாமிக்கண்ணு மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கிறார். ஆசிரியர் சிலம்பப் பயிற்சி கொடுப்பதற்கு முன் தினமும் அவர் தனியாகத் தானே பயிற்சி எடுத்துக் கொள்வார் என்று குறிப்பிட்டிருப்பதிலிருந்து நாள்தோறும் பயிற்சி செய்துவிட்டு, பிறகு மற்றவர்களுக்குப் பயிற்றுவிக்க வேண்டும் என்ற கருத்து புலனாகிறது. ஒரு கலையை மற்றவர்களுக்குப் பயிற்றுவிக்கும் குரு தான் முதலில் பயிற்சி செய்ய வேண்டிய கடமையுணர்வுடையவர் ஆகின்றார்.

    • கவிராயர்கள்

    பொருநராற்றுப்படையில் ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர் என்ற இருவகையான கவிராயர்கள் உள்ளனர். அந்த வகையில் ஏர்க்களம் பாடும் கவிராயர்கள் இந்த நாவலில் ‘கம்பர்’ என்று அழைக்கப்படுகின்றனர். இந்தக் கவிராயர்கள் மிகுந்த மரியாதையோடு நடத்தப்பட்டனர். அவர்கள் தங்களுக்குத் தேவையான கம்பினை (ஒரு வகை தானியம்) தாங்களே எடுத்துக் கொள்ள அனுமதிக்கப் பெற்றிருந்தனர். இந்த நிகழ்ச்சி கவிராயரின் செல்வாக்கைக் காட்டுகிறது. இவ்வாறு கோபல்லபுரத்து மக்களின் வாழ்க்கை முறை இருந்தது.

    1.4.3 வாழ்வியல் மாற்றம்

    மேற்குறிப்பிட்ட வாழ்வியல் முறைகளைக் கடைப்பிடித்த மக்களின் வாழ்க்கையில் சில மாற்றங்களும் ஏற்பட்டன. நடைமுறைப் பழக்க வழக்கங்களிலும் சிலவற்றை நாகரிகம் என்று கருதினர். படித்தவர்கள் சட்டை போட்டுக் கொள்வதோடு அதில் ஒரு பவுண்டன் பேனாவையும் சொருகிக் கொண்டனர்.

    • புதுமைக்கு மறுப்பு

    எந்தப் புதுசு வந்தாலும் முதலில் அதைச் சந்தேகிக்கிறதும் அதையே குறைபேசிப் பரப்புகிறதும், பிறகு தயக்கத்தோடு வழியில்லாமல் ஏற்றுக் கொள்கிறதுமே, ஏற்றுக்கொண்டபிறகு புதிய வியாதிகள் அதனால்தான் பரவுவதாகச் சொல்லுவதும் வழக்கம். கோபல்லபுரத்துப் பெரிய குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பையன்கள் முதன்முதலில் ஊரைவிட்டு வெளியூர் போய்ப் படிக்க ஆரம்பித்தனர். ஆங்கிலக் கல்வி பயின்ற பிறகு தலையிலிருந்த குடுமியைக் ‘கிராப்’பாக வெட்டிக் கொண்டனர். அதைக் கண்ட ஊரார் ‘என்ன இது அசிங்கம்’ என்று முகம் சுளித்தனர். பாட்டிமார் ‘குய்யோ முறையோ’ என்று புலம்பினர். இவ்வாறு புதிய நிகழ்வுகளுக்கு ஊரில் ஏற்பட்ட எதிர்ப்புகளைப் பல இடங்களில் சுவையாகக் கூறியுள்ளார் ஆசிரியர்.

    • புதிய பொருள்களைக் கண்டு வியப்பு

                 
     

    மணிபார்க்கும் கடிகாரம், மதுரையிலிருந்து வாங்கி வந்து நுன்ன கொண்ட நாயக்கர் வீட்டில் மாட்டியிருந்தது. ஊரிலுள்ளவர்கள் அந்தக் கடிகாரத்தைக்கண்டு மகிழ்ந்ததோடு மணிபார்க்கவும் கற்றுக் கொண்டனர். “கடையில் விற்கும் தீப்பெட்டியை வாங்கி ஒரு குச்சில எடுத்து உரசினா தீப்பிடிக்கி” என்று தீப்பெட்டியை வேடிக்கைப் பொருளாகக் கண்டு வியந்தனர். தீப்பெட்டியைப் போலவே, ஜப்பானிலிருந்து வந்த ‘மௌத் ஆர்கன், ஜெர்மன் பூட்டு, பேனாக்கத்தி, மண்ணெண்ணெய் ஊற்றப்பட்ட அரிக்கன்விளக்கு, டார்ச்லைட்’ இது போன்ற பொருள்கள். மக்களின் கவனத்தைக் கவர்ந்தது. இவ்வாறு பண்பாட்டு மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்கள், புதிய பொருட்களைக் கண்டு வியப்புற்று வரவேற்புத் தந்தனர். கோபல்ல புரத்தின் தோற்றத்தைப் போலவே அந்த மக்களின் மன இயல்பும் மெதுவாக மாற்றமடைந்து கொண்டே வந்தது. பழக்கவழக்கங்களை விட ஆடை அணிகள் போன்ற உடம்பு சம்மந்தப்பட்ட காரியங்களில் மட்டும் வெகுதுரிதமான மாற்றம் காண முடிந்தது.


    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.

    கி.ரா., என்று சுருக்கமாக அழைக்கப்படுபவர் யார்?

    2.

    கி.ராஜநாராயணனின் முதல் நாவல் எது?

    3.

    கி.ராஜநாராயணனின் எந்த நாவலுக்குச் சாகித்ய அகாதெமி பரிசு கிடைத்தது?

    4.

    பள்ளிக்கு முதலில் வரும் மாணவன் எவ்வாறு அழைக்கப்பட்டான்?

    5.

    கவிராயர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

புதுப்பிக்கபட்ட நாள் : 22-08-2017 16:35:07(இந்திய நேரம்)