Primary tabs
5.6 தொகுப்புரை
வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களின் பிரச்சினைகளை மையமாக வைத்து இந்த நாவல் படைக்கப்பட்டிருப்பதால், பொன்னீலன் சமூகத்தின் மீது பற்றுடைய சமூக ஆர்வலராக விளங்குகிறார் என்பது தெளிவு. வாழ்க்கையில் எத்தனைத் துன்பங்கள் வந்தாலும் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் நின்றால்தான் வெற்றி பெற முடியும் என்பது இந்நாவலின் தலைமைப் பாத்திரத்தின் வழி புலனாகிறது. தொழிலாளி, முதலாளி வர்க்க முரண்பாட்டைச் சுட்டிக்காட்டி விமரிசனம் செய்ததோடு மக்களின் மனதில் மாற்றம் உண்டானால்தான் சமுதாயத்தில் மாற்றம் உண்டாகும் என்று இந்நாவலில் ஆசிரியர் தீர்வு காணுகின்றார். குறையற்ற சமுதாயத்திற்கு முக்கியமாக மனிதநேயம் போற்றப்பட வேண்டும்; மதிக்கப்பட வேண்டும் என்பது இந்நாவல் வழி புலனாகிறது. ஒவ்வொரு தனி மனிதனும் பொருளாதார அளவில் முன்னேற்றம் அடையவேண்டும்; அதுவே ஒட்டு மொத்த சமூக முன்னேற்றமாகக் கருதப்படும் என்ற செய்தியை இந்நாவல் மூலம் பொன்னீலன் வெளியிடுகின்றார்.