Primary tabs
-
பாடம் - 4
P10424 பாரதிதாசனின் ‘வீரத்தாய்’புரட்சிக்கவிஞன் பாரதிதாசனின் வீரத்தாய் எனும் காவியம் ஒரு பெண்ணின் பெருமையைப் பற்றி எடுத்துச் சொல்கிறது.
படைபலம், பணபலம் ஒன்றும் இல்லாமலேயே தன்தோள் வலிமை ஒன்றினாலேயே சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி காணும் பெண் ‘விஜயராணி’யைப் பற்றிப் பேசுகிறது.
நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்புள்ள அரசன், மதுவிற்கு அடிமையாகிக் கிடப்பதையும், அதனால் நாட்டை இழக்கும் சூழ்நிலையைப் பற்றியும் எடுத்துரைக்கிறது.
சூழ்ச்சி வலையால் நாட்டைக் கைப்பற்ற நினைக்கும் படைத்தலைவனைத் தன் அறிவு முதிர்ச்சியாலும் மனவுறுதியாலும் வீரமகள் விஜயராணி வெற்றி பெறுவதைச் சொல்கிறது.
கிறுக்கனாக வளர இருந்த மகனைக் கீர்த்திமிக்க கலைகளில் தேறவைத்துக் கிழவராக மாறுவேடம் பூண்டுக் காலம் பார்த்துக் கடமையை முடிக்கும் வீரத்தாயினைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
அரசியலில் ஓர் ஆண் செய்த தவற்றினை ஒரு பெண் அகற்றிக் காட்டுவதையும் காணமுடிகிறது.
பெண் என்றால் இப்படியல்லவா இருத்தல் வேண்டும் எனப் போற்றும்படி கல்வி, கேள்வி, வீரத்தில் சிறந்து விளங்கி, சூழ்ச்சியாளர்களிடமிருந்து நாட்டைப் பாதுகாத்தும், மகனுக்கு அந்நாட்டுரிமையைப் பெற்றுத் தந்தும் கடமையை நிறைவு செய்யும் பெண்மணியாக விஜயராணியைப் படைத்துப் பெண்ணின் பெருமைகளைப் பற்றியெல்லாம் எடுத்துரைக்கிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இந்தப் பாடத்தைப் படித்து, இதில் உள்ள கவிதை வரிகளைச் சிந்திப்பீர்களானால். கீழ்க்காணும் சமூக நலன்களையும் மாற்றங்களையும் பெறுவீர்கள்.
-
‘வீரத்தாய்’ காவிய நாயகன் மதுவிற்கு மயங்கிக் கிடந்ததால், நாட்டையே இழக்கும் ஆபத்து உண்டாயிற்று. இதிலிருந்து மது அருந்துவதனால் வரும் கேட்டினை அறியலாம்.
-
சங்ககாலத் தமிழ்ச் சமூகத்தில் காணலாகும் வீர மகளிரை நினைத்துப் பார்க்குமாறு செய்கிறது இக்கதை என்பதை உணரலாம்.
-
எதிரியை வீழ்த்துவதற்கு நேரம், காலம் பார்த்தல் அவசியம் என்பதை ‘வீரத்தாய்’ மூலம் அறியலாம்.
-
பெண்ணின் கடமைகளைப் பட்டியல் இடலாம்.
-
ஆண் துணையின்றிப் பெண்களே தலைமை தாங்கி நாட்டை வழிநடத்திட முடியும் என்பதனை உறுதியாக நம்பலாம்.
-
பெண்கள் கல்வி கற்றலின் அவசியத்தை இந்நூல்வலியுறுத்துவதை அறியலாம்.
-
வீரக்கலைகளிலும் பெண்கள் சிறந்து விளங்க வேண்டும் என்பதை வலியுறுத்தக் காணலாம்.
-
பொதுவுடைமை - குடியரசு தத்துவத்தினைத் தெரிந்து கொள்ளலாம்.
-