Primary tabs
-
6.4 சேரர்களின் வீரச் செயல்கள்
சேர மன்னர்களும், அவர்களது வீரர்களும் வீரத்திற்குப் பேர் போனவர்கள். கடற்போரில் வல்லவர்கள். இதனைப் பதிற்றுப்பத்து தெளிவுபடுத்துகிறது.
சேர மன்னர்களும் மறவர்களும் அறநெறி தவறாது போர் புரிந்து நின்றனர். சேர மன்னர்கள் எமனே சினம் கொண்டு வந்தாலும் அவனைப் புறமுதுகிட்டு ஓடச் செய்வார்கள்.
பகைவர் அஞ்சப் போர் செய்துள்ளனர். இதனைப் பதிற்றுப்பத்து சிறப்பாகக் கூறும். தாம் கூறிய வஞ்சினம் தவறாது எதிர்ப்பட்ட பகைவர்களை யெல்லாம் இறந்து அழியுமாறு போர் செய்தமையை
வஞ்சினம் முடித்த ஒன்றுமொழி மறவர்
முரசுடைப் பெருஞ்சமத்து அரசுபடக் கடந்து
வெவ்வர் ஓச்சம் பெருக - (பாடல்-1)(சமத்து = போரில்; வெவ்வர் = வெம்மை; ஓச்சம் = ஆக்கம், உயர்வு)
என ஐந்தாம் பத்துக் கூறுகிறது.
வீரர்கள் தமக்குச் சமமானவரோடு போர் செய்ததை,
நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின்
அம்புசேர் உடம்பினர்ச் சேர்ந்தோர் அல்லது
தும்பை சூடாது மலைந்த மாட்சி
அன்னோர் பெரும! நன்னுதல் கணவ!
அண்ணல் யானை அடுபோர்க் குட்டுவ!
(பாடல்-2, ஐந்தாம் பத்து)(வசி = தழும்பு; சேர்ந்தோர் = சமமானவர்; தும்பை = தும்பை மாலை)
என்ற பாடல் அடிகளால் அறியலாம். மேலும், செங்குட்டுவன் போரில் எதிர்ப்பவரை வெல்வதையே தொழிலாகக் கொண்டுள்ளான் என்பதை நாம் அறிய முடிகிறது.
சேர மறவர்கள் பகைவருக்கு அஞ்சாதவர்கள். இரவு நேரத்திலும் வீர வாளை வைத்து உள்ளனர். போரில் புண்பட்டு விழுவதை விருப்பமாகக் கொண்டுள்ளனர். தாம் கூறிய வஞ்சினம் தவறாமல் தாம் பிறந்த குடிக்கு நல்ல புகழை நிலை நிறுத்த, பாசறையில் உலவுவார்கள்.
மாயிருங் கங்குலும், விழுத்தொடி சுடர்வரத்
தோள்பிணி மீகையர், புகல்சிறந்து நாளும்
முடிதல் வேட்கையர், நெடிய மொழியூஉ
கெடாஅ நல்லிசைத் தன்குடி நிறுமார்
(பாடல்-1, ஒன்பதாம் பத்து)(கங்குல் = இரவு;விழுத்தொடி = வீரவளை; மீகை = தோள்களைப் பிணித் தகை: புகல் = போர் விருப்பம்; நெடிய = வஞ்சினம்; மொழியூஉ = மொழிந்து)
என்ற பாடல் அடிகள் கூறுகின்றன.