தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU

xviii

நன்னூல் மூலமும் மயிலைநாதருரையும்
 
தொல்காப்பியத்திற் குற்றியலுகரப்புணரியலிலுள்ள விதிகளை இந்நூலில் 180-ஆம் சூத்திரம் முதலியவற்றிலும், அந்நூலில் வேற்றுமையியல் முதலிய மூன்றுறுப்புக்களிலடங்கியவற்றை இந் நூலில் 290-ஆம் சூத்திரம் முதலியவற்றிலும் அடக்கியிருப்பது முதலியனவும் அந்நூலிற் சுருங்கிக்கிடந்த கால இடைநிலை முதலியவற்றை இதில் விரித்துக் கூறியிருப்பது முதலியனவும் அந்நூலில் இல்லாத வடமொழி விதிகளைப்பெயர்த்து இதில் பதவியலில் அமைத்திருத்தலும் தொகுத்தல் விரித்தல் மொழிபெயர்ப்பு என்னும் நூல்யாப்புக்கள் இந்நூலில் அமைந்திருத்தலை முறையே காட்டுகின்றன. தொகை விரியென்னும் நூல்யாப்பு சூத்திரக்கிடக்கை முறையால் இந்நூலுள் ஆங்காங்கு உணரலாகும்.     

இந்நூற் பொருளையும் இதன் பெயரையும் அமைத்து நலமுறப்பாராட்டிய
தமிழ்நூல்களுமுண்டு; அவற்றுட் சில வருமாறு:-

(பிரபுலிங்கலீலை)

‘‘ குறில்வழி லகரந் தனிநிலை யாயுங் கூடிய தகரமுன் னெழுத்தென்
றறிகுறி வடிவந் திரிதல்போ னந்தி யடல் விடை மெய்திரிந் துறினும்
நறுமலர் விழியிற் கண்டவ ரெல்லா நந்தியே யென்றுள மகிழ்ந்தார்.’’

(திருவெங்கையுலா, 393 - 4)

‘‘ புன்றுரும்பு போன்றலைந்தார் போற்றுமவி கரரிமுனஞ்
சென்று வருசொற் றிரிதல்போன் - மென்றளிராம்
மேனிதிரிந்தார்.’’

(திருத்தணிகையுலா, அரிவை).

‘‘ சிற்றதி காரங்களெலாந் தேவர் முதலாக
உற்றவதி காரிகளுக் கோர்ந்தளித்தான் - முற்றுலகாள்
பேரதிகா ரந்தனைத்தான் பேணுந் திருத்தணிகை
யூரதிகா ரன்றேர்வந் துற்றிடலும் - காரிகையு
நன்னூ லிடையைய நண்ணிப் பணிந்தெழுந்து
முன்னூ லுரையகல மோகித்தாள் - பன்னூலும்’’

(கோடீச்சுரக்கோவை, 44.)

‘‘ செறிப்புறு வான்புகழ்க் கோடீச்சு ரேசர் சிலம்பிடைநாம்
உறுப்பமை நன்னூ லிடைநீடு மைம்பா லுறுதொடர்பைச்
சிறப்புறு கேள்வி பெறுபாங்க னுக்குத் தெளிவுபெறக்
குறிம்பினு மோதும் வெளிப்படைச் சொல்லினுங் கூறுதுமே.’’


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 00:19:13(இந்திய நேரம்)