தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU

உரையாசிரியர் வரலாறு.

xxi

சில இடங்களில் நூலாசிரியர் கொள்கைக்கும் தம்முடைய கொள்கைக்கும் ஆதாரங் காட்டியிருத்தலும், ஆசிரியர் பொருள்களைத் தொகை வகை விரியாகக் கூறியிருத்தலை அங்கங்கே விளக்கிச் செல்லுதலும் பாராட்டற்பாலன.      அக்கால வழக்கங்களும், சில நூலாசிரியர் உரையாசிரியர் பெயர்களும், சில நூற்பெயர்களும், இக்காலத்து வழங்காத சில செய்யுட்கள் சில வாக்கியங்கள் சில சொற்கள் சில சொன்முடிபுகள் சில சொற்களின் உண்மைப் பொருள்கள் சில மரூஉப் பெயர்களின் பண்டை வடிவங்களும், சில தெய்வப் பெயர்கள் சில அரசர் பெயர்களும், சில ஆற்றின் பெயர்கள் சில தேயப்பெயர்கள் சில நகரப் பெயர்கள் சில ஊர்ப்பெயர்களும், சில சாதிப்பெயர்கள் சில பட்டப் பெயர்களும், சில மரபுப் பெயர்கள், சில தொகைப் பெயர்களும், சில மரங்கள் செடிகள் கொடிகளின் பெயர்களும் இவைபோல்வன பிறவும் இவ்வுரையால் தெரியவந்தன; இன்னும் சில மேற்கோள்களின் தொடக்கங்கள் இன்னவையென்றும், மேற்கோள்களுள் வேறுரைகளில் இரண்டாகக்காணப்பெற்றவை ஒன்றென்றும், சில உரை நடைக்கு ஆதாரமான சூத்திரங்களின் முழு வடிவங்கள் இன்னவையென்றும் விளங்கின.      

இதுவரையில் விளங்காதிருந்தவற்றிற் பல இவ்வுரையால் விளங்கின; அவற்றுட் சில வருமாறு:-

1. அணுத்திரளை மொழிக்கு முதற்காரணமாகக் கோடலின், அவிநய நூலாசிரியர்
சைனமதத்தினரென்பதும், ‘‘தன்னையுணர்த்தி னெழுத்தாம்’’ என்னும் வெண்பா அவிநயமென்று தெரிதலால், அதில் நூற்பாவன்றி வெண்பாவு முண்டென்பதும் (பக். 26, 44);

2. இதுவரையிற் கையெழுத்துப் பிரதியொன்றிலும் காணப்படாம லிருந்த பழமொழியின் முதற் செய்யுள் இன்ன தென்பது (பக். 228);

 3. ‘‘தாதிவர் தாமரை’’ என்னுங் கடவுள் வாழ்த்தால், எண்ணூலெனப் பண்டைக்காலத்தில் ஒரு நூல் தமிழிலிருந்ததென்பது (பக். 168);

4. ‘‘விதந்த மொழியினம் வேறுஞ் செப்பும்’’ என்பது பரிமாணநூலிலுள்ளதென்பது (பக். 219);

5. அவிநய நூலுரையாசிரியர் இன்னாரென்பது (பக். 189);

6. இளம்பூரணர் துறவியென்பது (பக். 190);

7. உரைநடையாகவுள்ள இலக்கண வாக்கியங்களுக்குரிய பழைய சூத்திரங்கள்
இன்னவையென்பது (பக். 44, 97);

புதுப்பிக்கபட்ட நாள் : 22-01-2019 18:25:37(இந்திய நேரம்)