Primary tabs
மதிற்சனகை என்று சிறப்புப் பாயிரம் பொதுவாகக் குறிப்பிடுகிறது. சனகை என்பதற்குச்
சனநாதபுரம் என்று மயிலைநாதரும் சனகாபுரம் என்று சங்கரநமச்சிவாயரும் விளக்கம்
கூறுவர். சனகாபுரம் என்ற பெயரில் மூன்று ஊர்கள் உள்ளன. பவணந்தி முனிவர்
பிறந்த ஊர் சோழசிங்கபுரத்தைச் சேர்ந்த ஊர் என்று தொண்டை மண்டல சதகம்
கூறுகிறது. ஆயின் கொங்கு மண்டல சதகம் ஈரோடு் வட்டத்தில் உள்ள ஊர் என்று
குறிப்பிடுகிறது. டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள் பவணந்தியார் பிறந்த ஊர்
மைசூர் மாநிலத்தில் உள்ள நசரபுரம் என்னும் வட்டத்தில் உள்ள ஊர் என்று
குறிப்பிடுகிறார்.
பவணந்தி முனிவர் மூன்றாம் குலோத்துங்க சோழனின் ஆட்சிக் காலத்தில்
சிற்றரசனாக விளங்கிய சீயகங்கனால் புரக்கப்பட்டவர். அவர் வேண்டுகோளுக்கு
இணங்க நன்னூல் எழுதினார். மூன்றாம் குலோத்துங்க சோழனின் காலம் கி.பி. 1178
-
1218 ஆகும். எனவே சீயகங்கன் ஆட்சி செய்த காலத்தையே பவணந்தியார் வாழ்ந்த
காலம் எனக் கொள்ளலாம்.
நன்னூல் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து
இலக்கணங்களைக் கொண்டு அமைக்கப்பெற்ற நூல் என்பர். ஆயின் இன்று கிடைக்கப்
பெறுபவை எழுத்து, சொல் என்ற இரு இயல்கள் மட்டுமே. பவணந்தி முனிவர் தம்
காலத்திற்கு முன்னர்த் தோன்றிய தொல்காப்பியத்தையும் அதற்குப் பின்னர்த் தோன்றிய
இலக்கண உரைகளையும் நன்கு கற்றவர். வடமொழியில் வல்லவர். தம் காலத்து மக்கள்
மொழி வழக்குகளை நன்கு அறிந்தவர்.
இவரை, பல்கலைக்குரிசில் பவணந்தியென்னும் பெருமான் எனவும், முன்னூல்
ஒழியப் பின்னூல் பலவினுள் நன்னூலார் தமக்கெந்த நூலாரும் இணையோ வென்னுந்
துணிவே மன்னுக என்றும் புகழ்வர். நன்னூலுக்கு மயிலைநாதர் எழுதிய உரை
தொன்மையானது. இதன் பின்னர்ச் சங்கர நமச்சிவாயர் விருத்தியுரை புகழ் பெற்றது.
தொடர்ந்து மாதவச் சிவஞான முனிவர் சங்கரநமச்சிவாயர் உரையில் சில
திருத்தங்களையும் மாற்றங்களையும் செய்து தந்த விருத்தியுரை சிறப்புப் பெற்றது.
நன்னூல் உரையாசிரியர் யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர் எழுதிய காண்டிகை
உரையும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. முகவை இராமானுசக்