Primary tabs
நூன்முகம்
தமிழ்மொழி தொன்மை சான்ற மொழியாகும். பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னரே இம் மொழியில் திருந்திய இலக்கியங்கள் பல தோன்றவே, அவற்றை ஆய்ந்து சிறந்த இலக்கண நூல்களைச் சான்றோர் பலர் இயற்றினர்.
இன்று நமக்குக் கிடைத்துள்ள இலக்கண நூல்களில் தொல்காப்பியமே மிகத் தொன்மையது. அஃது எழுத்துச் சொற் பொருள் என்ற முப் படலங்களை உடையது. தொல்காப்பியத்தை இயற்றிய தொல்காப்பியனார் காலத்தில் அணி என்பதொன்று தனியே வகுக்கப் பட்டிலது; உவமம் என்பது பொருளைப் புலப்படுத்தும் கருவிகளில் ஒன்றாகவே கொள்ளப்பட்டது. பொருட்கிடன் செய்யுளாதலின், அதனைத் தெரிப்பதும் பொருட் கூறுபாட்டில் ஒன்றாகக் கொள்ளப்பட்டது. படவே, பின்னர் வகுத்த யாப்பு அணி என்பன தொல்காப்பியப் பொருட் படலத்திலே அடக்கப்பட்டன.
தொல்காப்பியத்தை அடுத்துத் தோன்றிய இறையனார் அகப்பொருளின் காலத்தில் யாப்பு என்பது தனிப் பகுதியாகக் கொள்ளப்பட்டது. சற்றுப் பிற்பட்ட காலத்தில் அணியிலக்கணமும் தனிப் பகுதியாயிற்று.