பாட வேறுபாடுகளாகக் கொள்ளப்பெறா. வண்ணச்சரபம்
சுவாமிகளின் நூல்களில் பாடபேதம் தோன்ற வாய்ப்பே
இல்லை என்பது மகிழ்ச்சிக்குரியது.
இப்பதிப்பு பெரும்பாலும் நூற்பா, பொழிப்புரை,
வேண்டு மிடங்களில் விளக்கம், இன்றியமையாதபோது
எடுத்துக்காட்டு என்ற போக்கில் அமைக்கப்பட்டுள்ளது.
மேற்கோள் இலக்கியங்களுள் இந்நூலாசிரியரின்
படைப்புகள் அதிகமாக இடம் பெற்றுள்ளன. இலக்கண
ஆசிரியராக மட்டுமன்றி இலக்கியப் படைப்பாளியாகவும்
தனித்த தத்துவக் கொள்கைகளை உடைய ஒரு
சமயாசாரியராகவும் விளங்கும் வண்ணச் சரபம்
சுவாமிகளின் பல கருத்துகளையும் அறிமுகம் செய்வதும்
இதன் நோக்கமாகும்.
நூலுக்கு உரைகாணும் போது புத்தகம் அளவில் பெருத்து
விடக் கூடாது என்னும் உணர்வுடனேயே எழுதப்பட்டது.
இந்நூல் பிற இலக்கணங்களோடு முரண்படும் இடங்களிலும்
இவராகப் புதியனவாகக் கூறும் இடங்களிலும் மட்டும்
சற்று விரிவான விளக்கங்கள் தரப்பெற்றுள்ளன. பிற
இடங்களிலெல்லாம் சுருக்கமான பொழிப்புரை மட்டுமே
உள்ளது. உரையில் எடுத்தாளப் பெற்ற இலக்கண
நூற்பாக்கள், இலக்கியப்பாக்கள் ஆகியவற்றை
உரைநடையைப் போலத் தொடர்ச்சியாக அளித்திருப்பதுவும்
பக்கங்கள் பல்காமைப் பொருட்டே.. யாப்பிலக்கணத்தில்
மட்டும் செய்யுள்கள் இன்றியமையாமை கருதி
அவற்றிற்குரிய அடி அமைப்புடன் காட்டப்பெற்றுள்ளன.
எழுத்திலக்கணத்தில் கூட்டெழுத்து, (குறிப்பெழுத்து
என்பனவற்றிற்கெல்லாம் இந்நூலில் குறிப்பிட்டுள்ளபடி
வரிவடிவத்தை இப் பதிப்பில் காட்டியிருக்க வேண்டும்.
தவிர்க்கவியலாத சில காரணங்களால் அஃது இயலாமற்
போயிற்று. இறைவன் திருவருளால் அடுத்த பதிப்பில் இக்
குறைகள் தவிர்க்கப்படும் என நம்புகிறேன்.
நூலை அடுத்து இதன் சாத்துகவிகள் பிற்சேர்க்கையாகத்
தரப்பட்டுள்ளன. நூற்பா முதற்குறிப்பு அகர நிரல்,
மேற்கோள்