தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்


வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்

299. நெய்தல்
உரு கெழு யானை உடை கோடு அன்ன,
ததர் பிணி அவிழ்ந்த தாழை வான் பூ,
தயங்கு இருங் கோடை தூக்கலின், நுண் தாது
வயங்கு இழை மகளிர் வண்டல் தாஅம்
5
காமர் சிறுகுடி புலம்பினும், அவர்காண்:
நாம் இலம் ஆகுதல் அறிதும் மன்னோ-
வில் எறி பஞ்சி போல, மல்கு திரை
வளி பொரு வயங்கு பிசிர் பொங்கும்
நளி கடற் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே.
தோழி, தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது.- வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்

323. நெய்தல்
ஓங்கித் தோன்றும், தீம் கள் பெண்ணை
நடுவணதுவேதெய்ய-மடவரல்
ஆயமும் யானும் அறியாது அவணம்
ஆய நட்பின் மாண் நலம் ஒழிந்து, நின்
5
கிளைமை கொண்ட வளை ஆர் முன்கை
நல்லோள் தந்தை சிறுகுடிப் பாக்கம்:
புலி வரிபு எக்கர்ப் புன்னை உதிர்த்த
மலி தாது ஊதும் தேனோடு ஒன்றி,
வண்டு இமிர் இன் இசை கறங்க, திண் தேர்த்
10
தெரி மணி கேட்டலும் அரிதே;
வரும் ஆறு ஈது; அவண் மறவாதீமே.
தோழி இரவுக்குறி நேர்ந்தது.- வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்

378. நெய்தல்
யாமமும் நெடிய கழியும்; காமமும்
கண்படல் ஈயாது பெருகும்; தெண் கடல்
முழங்கு திரை, முழவின் பாணியின், பைபய,
பழம் புண் உறுநரின், பரவையின் ஆலும்;
5
ஆங்கு அவை நலியவும், நீங்கி யாங்கும்,
இரவு இறந்து, எல்லை தோன்றலது; அலர் வாய்
அயல் இற் பெண்டிர் பசலை பாட,
ஈங்கு ஆகின்றால்-தோழி!-ஓங்கு மணல்
வரி ஆர் சிறு மனை சிதைஇ வந்து,
10
பரிவுதரத் தொட்ட பணிமொழி நம்பி,
பாடு இமிழ் பனி நீர்ச் சேர்ப்பனொடு
நாடாது இயைந்த நண்பினது அளவே.
தோழி சிறைப்புறமாகச் சொல்லியது; தலைமகன் ஒருவழித் தணந்த பின்னை வன்புறை எதிர்மொழிந்ததூஉம் ஆம்.-வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:33:05(இந்திய நேரம்)