தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தும்பிசேர் கீரனார்


தும்பிசேர் கீரனார்

61. மருதம்
தச்சன் செய்த சிறு மா வையம்,
ஊர்ந்து இன்புறாஅர்ஆயினும், கையின்
ஈர்த்து இன்புறூஉம் இளையோர் போல,
உற்று இன்புறேஎம்ஆயினும், நற்றோர்ப்
பொய்கை ஊரன் கேண்மை
செய்து இன்புற்றனெம்; செறிந்தன வளையே.
தோழி தலைமகன் வாயில்கட்கு உரைத்தது. - தும்பிசேர்கீரன்

316. நெய்தல்
ஆய் வளை ஞெகிழவும், அயர்வு மெய் நிறுப்பவும்,
நோய் மலி வருத்தம் அன்னை அறியின்,
உளெனோ வாழி-தோழி!-விளியாது,
உரவுக் கடல் பொருத விரவு மணல் அடைகரை
ஓரை மகளிர் ஓராங்கு ஆட்ட,
ஆய்ந்த அலவன் துன்புறு துனைபரி
ஓங்கு வரல் விரிதிரை களையும்
துறைவன் சொல்லோ பிற ஆயினவே?
வரைவிடை 'வேறு படுகின்றாய்' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- தும்பி சேர் கீரன்

320. நெய்தல்
பெருங் கடற் பரதவர் கோள் மீன் உணங்கலின்
இருங் கழிக் கொண்ட இறவின் வாடலொடு,
நிலவு நிற வெண் மணல் புலவ, பலஉடன்,
எக்கர்தொறும் பரிக்கும் துறைவனொடு, ஒரு நாள்,
நக்கதோர் பழியும் இலமே போது அவிழ்
பொன் இணர் மரீஇய புள் இமிழ் பொங்கர்ப்
புன்னைஅம் சேரி இவ் ஊர்
கொன் அலர் தூற்றும், தன் கொடுமையானே.
அலர் அஞ்சி ஆற்றாளாகிய தலைமகள், தலைவன் கேட்பானாகத் தோழிக்குக் கூறியது.- தும்பிசேர் கீரன்

392. குறிஞ்சி
அம்ம வாழியோ-மணிச் சிறைத் தும்பி!-
நல் மொழிக்கு அச்சம் இல்லை; அவர் நாட்டு
அண்ணல் நெடு வரைச் சேறி ஆயின்,
கடவை மிடைந்த துடவைஅம் சிறு தினைத்
துளர் எறி நுண் துகள் களைஞர் தங்கை
தமரின் தீராள் என்மோ-அரசர்
நிரை செலல் நுண் தோல் போலப்
பிரசம் தூங்கு மலைகிழவோற்கே!
வரைவிடைக் கிழத்தியது நிலைமை தும்பிக்குச் சொல்லுவாளாய்ச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது. - தும்பிசேர் கீரனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:15:42(இந்திய நேரம்)