தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

161-170

161-170

161
பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை
கருங் கோட்டுப் புன்னைத் தங்கும் துறைவற்குப்
பயந்து நுதல் அழியச் சாஅய்,
நயந்த நெஞ்சம் நோய்ப்பாலஃதே!
ஒருவழித் தணந்துழி ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைமகள் ஆற்றாளாய்ச் சொல்லியது. 1

162
பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை
நீத்து நீர் இருங் கழி இரை தேர்ந்து உண்டு,
பூக் கமழ் பொதும்பர்ச் சேக்கும்
துறைவன் சொல்லோ பிற ஆயினவே!
இதுவும் அது. 2

163
பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை
இருங் கழித் துவலை ஒலியின் துஞ்சும்
துறைவன் துறந்தென, துறந்து என்
இறை ஏர் முன்கை நீங்கிய, வளையே.
இதுவும் அது. 3

164
பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை
இருங் கழி மருங்கின் அயிரை ஆரும்
தண்ணம் துறைவன் தகுதி
நம்மோடு அமையாது, அலர் பயந்தன்றே!
தலைமகனுக்குப் புறத்தொழுக்கம் உளதாகியவழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 4

165
பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை
அறு கழிச் சிறு மீன் ஆர மாந்தும்
துறைவன் சொல்லிய சொல் என்
இறை ஏர் எல் வளை கொண்டு நின்றதுவே!
இதுவும் அது. 5

166
பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை
வரி வெண் தாலி வலை செத்து வெரூஉம்
மெல்லம் புலம்பன் தேறி,
நல்ல ஆயின, நல்லோள் கண்ணே.
வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகள் பசப்பிற்கு வருந்திய தோழி அவனை இயற்பழித்துக் கூறியது. 6

167
பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை
இருங் கழி இனக் கெடிறு ஆரும் துறைவன்
நல்குவன் போலக் கூறி,
நல்கான் ஆயினும், தொல் கேளன்னே.
பரத்தையிற் பிரிந்த தலைமகன் விட, வாயிலாய் வந்தார்க்கு அவன் கொடுமை கூறித் தோழி இயற்பழித்தவழித் தலைமகள் சொல்லியது. 7

168
பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை
துறை படி அம்பி அகமணை ஈனும்
தண்ணம் துறைவன் நல்கின்,
ஒண் நுதல் அரிவை பால் ஆரும்மே.
நொதுமலர் வரைவு வேண்டி விடுத்தமை அறிந்த தலைமகள் ஆற்றாளாய்ப் பசி அட நிற்புழி, 'இதற்குக் காரணம் என்?' என்று செவிலி வினவ, தோழி அறத்தொடு நின்றது. 8

169
பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை
ஒள் இணர் ஞாழல் முனையின், பொதி அவிழ்
புன்னைஅம் பூஞ் சினைச் சேக்கும் துறைவன்
நெஞ்சத்து உண்மை அறிந்தும்,
5
என் செயப் பசக்கும் தோழி! என் கண்ணே?
காதல் பரத்தையை விட்டு மற்றொருத்தியுடன் ஒழுகாநின்ற தலைமகன் வாயில் வேண்டி விடுத்துழி, வாயில் நேர்தல் வேண்டி, 'நின் கண் பசந்தனகாண்' என்று முகம்புகு தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 9

170
பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை
இருங் கழி நெய்தல் சிதைக்கும் துறைவன்
'நல்லன்' என்றிஆயின்;
பல் இதழ் உண்கண் பசத்தல் மற்று எவனோ?
தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாகிய வழி வேறுபட்ட தலைமகள், 'அவற்கு அவ்வாறு நிகழ்ச்சி இல்லை; நம்மேல் அன்புடையன்' என்று தெளிக்கும் தோழிக்குச் சொல்லியது. 10

உரை

Home
HOME

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:52:03(இந்திய நேரம்)