தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

171-180

171-180

171
திரை இமிழ் இன் இசை அளைஇ, அயலது
முழவு இமிழ் இன் இசை மறுகுதொறு இசைக்கும்
தொண்டி அன்ன பணைத் தோள்,
ஒண் தொடி, அரிவை என் நெஞ்சு கொண்டோளே!
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் ஆயத்தோடு சொல்லும் தலைமகளைக் கண்டு சொல்லியது. 1

172
ஒண் தொடி அரிவை கொண்டனள், நெஞ்சே!
வண்டு இமிர் பனித் துறைத் தொண்டி ஆங்கண்
உரவுக் கடல் ஒலித் திரை போல,
இரவினானும் துயில் அறியேனே!
'கண் துயில்கின்றிலை; இதற்குக் காரணம் என்?' என்று வினவிய பாங்கற்குத் தலைமகன் சொல்லியது. 2

173
இரவினானும் இன் துயில் அறியாது
அரவு உறு துயரம் எய்துப தொண்டித்
தண் நறு நெய்தல் நாறும்
பின் இருங் கூந்தல் அணங்குற்றோரே.
தலைமகன் குறிவழிச் சென்று தலைமகளைக் கண்ட பாங்கன் தன்னுள்ளே சொல்லியது. 3

174
அணங்குடைப் பனித் துறைத் தொண்டி அன்ன
மணம் கமழ் பொழில் குறி நல்கினள் நுணங்குஇழை
பொங்கு அரி பரந்த உண்கண்,
அம் கலிழ் மேனி அசைஇய எமக்கே.
குறிவழிச் சென்று தலைமகளைக் கண்டு வந்த பாங்கன், 'அவள் நின்றுழி நின்றாள்' என்று கூறியவழி, ஆண்டுச் செல்லக் கருதிய தலைமகன் தன்னுள்ளே சொல்லியது. 4

175
எமக்கு நயந்து அருளினைஆயின், பணைத் தோள்
நல் நுதல் அரிவையொடு மென்மெல இயலி,
வந்திசின் வாழியோ, மடந்தை!
தொண்டி அன்ன நின் பண்பு பல கொண்டே.
பாங்கற் கூட்டங் கூடி நீங்கும் தலைமகன், 'இனி வருமிடத்து நின் தோழியோடும் வர வேண்டும்' எனத் தலைமகட்குச் சொல்லியது. 5

176
பண்பும் பாயலும் கொண்டனள் தொண்டித்
தண் கமழ் புது மலர் நாறும் ஒண் தொடி,
ஐது அமைந்து அகன்ற அல்குல்,
கொய் தளிர் மேனி! கூறுமதி தவறே.
தலைமகளும் தோழியும் ஒருங்கு நின்றுழிச் சென்ற தலைமகன், 'இவள் என்னை இவை கோடற்குக் காரணம் என்?' என்று தோழியை வினாவியது. 6

177
தவறு இலராயினும், பனிப்ப மன்ற
இவறு திரை திளைக்கும் இடு மணல் நெடுங் கோட்டு
முண்டக நறு மலர் கமழும்
தொண்டி அன்னோள் தோள் உற்றோரே.
தலைமகளும் தோழியும் ஒருங்கு நின்றுழி, 'இவள் என்னை வருத்துதற்குச் செய்த தவறு என்?' என்று வினாய தலைமகற்குத் தோழி நகையாடிச் சொல்லியது. 7

178
தோளும் கூந்தலும் பல பாராட்டி,
வாழ்தல் ஒல்லுமோ மற்றே செங்கோல்
குட்டுவன் தொண்டி அன்ன
எற் கண்டு நயந்து நீ நல்காக்காலே?
தலைமகன் தோழியை இரந்து குறையுறுவான் சொல்லியது. 8

179
நல்குமதி, வாழியோ! நளி நீர்ச் சேர்ப்ப!
அலவன் தாக்கத் துறை இறாப் பிறழும்
இன் ஒலித் தொண்டி அற்றே,
நின் அலது இல்லா இவள் சிறு நுதலே.
குறியிடத்து வந்து புணர்ந்து நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு வரைவு கடாயது.

180
சிறு நணி வரைந்தனை கொண்மோ பெருநீர்
வலைவர் தந்த கொழுமீன் வல்சிப்
பறை தபு முது குருகு இருக்கும்
துறை கெழு தொண்டி அன்ன இவள் நலனே.
தாழ்த்து வரையக் கருதிய தலைமகனைத் தோழி நெருங்கி, 'கடிதின் வரைய வேண்டும்' எனச் சொல்லியது. 10

உரை

Home
HOME

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:52:11(இந்திய நேரம்)